நோபல் பரிசுக்கு தேர்வான பெண் போராளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

நோபல் பரிசுக்கு தேர்வான பெண் போராளி

2023ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானின் நர்கிஸ் மொஹம்மதிக்கு கிடைத்திருக்கிறது.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத் துறை என விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக் கான நோபல் பரிசுக்கு 51 வயது நிறைந்த நர்கிஸ் மொஹம்மதியின் பெயர் உச்சரிக்கப்பட்டது.

ஈரானியப் பெண்களின் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடியதற்காக வும், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்தப் போராடிய தற்காகவும் நோபல் குழு நர்கிஸ் மொஹம்மதிக்கு விருதை அறிவித் திருப்பதாகத் தெரிவித்தது. நோபல் பரிசை பெறும் உலகின் பத்தொன்ப தாவது பெண். மற்றும் ஈரானின் இரண் டாவது பெண்ணாக நர்கிஸ் பார்க்கப் படுகிறார். அத்துடன், மனித உரிமைகள் மய்யப் பாதுகாவல் அமைப்பின் Defenders of Human Rights Center (DHRC) துணைத் தலைவர்.

பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைப் போராளி. இசுலாமிய சட்டங் களின் பெயரால் பெண்கள் ஒடுக்கப் படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கொந்தளிப்பவர், குரல் கொடுப்பவர். மரண தண்டனை கூடாதெனவும் வாதிடுபவர். பெண்கள் ஹிஜாப் அணிய வற்புறுத்துவதை எதிர்ப்பவர் என பல்வேறு முகங்கள் நர்கிஸுக்கு உண்டு.

‘Woman, Life, Freedom’  இயக்கத் தில் செயல்படும் பெண்களின் போராட் டத்தைக் கடுமையாக ஒடுக்கும் ஈரான் அரசாங்கம், பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை,  146 நாடுகளில் மிகவும் பின்தங்கி 143ஆவது இடத்தில் இருக்கிறது.

‘ஹிஜாப் மற்றும் கற்பு மசோதா’(Hijab and Chastity bill) என்கிற ஒன்றையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றி வைத்தி ருக்கிறது. குற்றவாளி என்று ஒருவர் தீர்மானிக்கப்பட்டால், சிறைக்கொட்ட டியும் கசையடியும் உறுதி.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சிறைப் பறவையான நர்கிஸ் மொஹம்மதியை ஈரான் இசுலாமியக் குடியரசு அரசாங்கம் இதுவரை 13 முறை கைது செய்திருக்கிறது. அய்ந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. 

31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. இசுலாமிய குற்றவியல் சட்டப்படி நர்கிஸ் வாங்கிய சவுக்கடி களின் எண்ணிக்கை 154. சிறைத் தண்டனை போதாதென்று, சிறைக்குள் பாலியல் வன்முறை, வலிப்பு நோய், கரோனா தாக்குதல் என்று தன் வாழ்வையே பெண்ணுரிமைக்காக ரண மாக்கிக் கொண்டவர் இந்த நர்கிஸ். இப்போதும் டெஹ்ரானின் மோசமான சிறைக்குள் அடைப்பட்டிருக்கிறார்.

கடந்த மார்ச்சில் ஜெனீவாவில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைக் கருத் தரங்கில், நர்கிஸ் மொஹம்மதியின் செய்தி ஒன்றும் வாசிக்கப்பட்டது. அதில் அவர் சொல்லியிருப்பது, ‘‘அரசாங்கத் திடம் மன்னிப்பா? நானா? ஒருபோதும் கேட்க மாட்டேன்.

அது நடக்கவே நடக்காது! சிறையில் பெண் கைதி களுக்கு செய்யப்படும் பாலியல் கொடுமைக்கு எதிராக சாட்சியமளிக்க இப்போதும் நான் தயாராகவே இருக் கிறேன். ஈரான் இசுலாமியக் குடியரசை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! இதுதான் உலக சமூகத்துக்கு நான் விடுக்கும் அழைப்பு!” என அதில் முழங்கியிருக்கிறார் ஈரான் தேசத்தின் பெண் போராளியான நர்கிஸ் மொஹம்மது.

No comments:

Post a Comment