சிசேரியன்: ஏன், எதற்கு,எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

சிசேரியன்: ஏன், எதற்கு,எப்படி?

சிசேரியனின் வரலாறு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. இருப்பினும், இறப்புக் கான சாத்தியம் அதிகம் இருந்ததால் 1926 வரை அது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. 1926இல், மன்ரோ கெர் (Munro Kerr) அடிவயிற்றின் குறுக்காகக் கருப் பையைக் கீறி குழந்தையை வெளியே எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அடுத்த 50 ஆண்டு களுக்கு இந்த முறையே உலகெங்கும் பின்பற்றப்பட்டது.

1970களில் நடைமுறைக்கு வந்த மருத்துவ அறிவி யலின் புதிய அறுவைசிகிச்சை வழிமுறைகள், சிசேரியனால் நிகழும் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்தன. இதன் பின்னர் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறு. இன்று உலக அளவில் நிகழும் பிரசவங்களில் நான்கில் ஒன்று சிசேரியனாகவே உள்ளது. மகப் பேற்றின்போது நிகழும் தாய்-சேய் இறப்புகளை சிசேரியன் பெருமளவில் குறைத்துள்ளது.

சிசேரியன் பிரசவம் என்பது என்ன? - சிசேரியன் என்பது அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தைகளைப் பிரசவிக்கும் ஒரு மருத்துவ முறை. பிரசவத்தின்போது தாய், சேயின் உடல்நிலைக்கு ஆபத்து இருந்தாலோ, சுகப்பிரசவத்துக்குச் சாத்தியம் இல்லாதபோதோ இம்முறை தேர்வு செய்யப்படும்.

தேர்வுக்கான முக்கியக் காரணங்கள்:

இரட்டைக் குழந்தை

உயர் ரத்த அழுத்தம்

குழந்தை திரும்பி இருத்தல்

தொப்புள்கொடி குழந்தையின் தலையைச் சுற்றுதல்

தாயின் உயரம், இடுப்பு வடிவம்

வகைகள்: திட்டமிடப்பட்டது: பிரசவ காலத்திலேயே இவர்களுக்குச் சுகப்பிரசவம் செய்வதற்குச் சாத்தியம் இல்லை என்று மருத்துவரால் தீர்மானித்து முன்பே அறுவை சிகிச்சைக்குத் தயாராவது ’தேர்ந்தெடுக்கப் படும்’ சிசேரியன் முறை. இம்முறையில் தாய்க்கு வலி வரும் வரை காத்திருக்காமல், குறித்த தேதியில் நேரடியாக அறுவைசிகிச்சை செய்யப்படும்.

திட்டமிடப்படாதது (அவசர நிலை): இம்முறையில் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, முடியாத நிலையில் அவசரமாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தாய்-சேய் உயிர் காப்பாற்றப்படும்.

சிசேரியன் எவ்வாறு செய்யப்படுகிறது? - பொதுவாக, இந்த அறுவைசிகிச்சை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்கும். இது பெரும்பாலும் தண்டுவடத்தில் செலுத்தப்படும் மயக்க மருந்துகளின் உதவியால் நடைபெறும். இதில், தாயின் அடிவயிற்றிலும் (ஆறு அங்குல அளவு) கருப்பையிலும் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை மூலம் கருப்பை திறக்கப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்படும். 

இறுதியாக, அறுவைசிகிச்சைக்குப் பின்னர் கருப்பையிலும் அடிவயிற்றிலும் தையலிடப்படும்.

சிசேரியன் பிரசவத்தின் நன்மைகள்

சிக்கலுடன் கூடிய பிரசவத்தில் தாய், சேயின் உயிரைக் காப்பாற்றும்.

பிறக்கும் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பிரசவ அதிர்ச்சியைத் தவிர்க்கும்.

தாய்க்கும் சேய்க்கும் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கும்.

தாய், சேயின் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏதாவது இருக்கும் - சூழலில் தாய், சேயின் உயிரைக் காக்கும் வாய்ப்நஎபை ஏற்படுத்தித்தரும்.

சிசேரியனில் நன்மைகள் உள்ளன என்றாலும், அபாயங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. மருத்துவரிடம் நன்கு ஆலோசிப்பது மட்டுமே அதன் அபாயத்தைக் குறைக்க உதவும்.

No comments:

Post a Comment