அறிவியலையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு செய்த பிரதமர் நரேந்திரர் - பேராசிரியர் மு.நாகநாதன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

அறிவியலையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு செய்த பிரதமர் நரேந்திரர் - பேராசிரியர் மு.நாகநாதன்

பிரதமர் என்பது இந்தியாவின் தலைமைப் பதவி. உயர் பொறுப்பு.எல்லோருக்கும் எம்மதத்தினருக்கும் பொதுவானவர் தான் நாட்டின் பிரதமர். ஓட்டுப் போட்டவர்களுக்கும் ஓட்டுப் போடாதவர்களுக்கும் நரேந்திரரே பிரதமர். ஆனால் பிரதமர் நரேந்திரர் தான் வகிக்கும் பொறுப்பை மறந்து பிஜேபியின் தலைவராகவே வலம் வருகிறார் மதவாத வெறுப்பு அரசியலின் ஆர்.எஸ்.எஸ் தூதுவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51(எ)எச் பிரிவில் அடிப்படை கடமைகள் சுட்டுப்பட்டுள்ளன.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பின்பற்றுவது கடமையாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"சீர்திருத்தம், ஆய்வு எண்ணம், மனிதாபிமானம், அறிவியல் மனப்பான்மை  ஆகியவற்றை வளர்ப்பது அடிப்படை கடமைகளாகும்.

(51A-(h) to develop the scientific temper, humanism and the spirit of enquiry and reform. Indian Constitution )

மேற்கண்ட அனைத்துக் கருத்துருக்களையும்  பிரதமர் நரேந்திரர் மீறியுள்ளார்.

சந்திரயான் மூன்று விண்கலம் நிலாவின் தெற்கு பகுதியில் வெற்றிகரமாகத் தரை இறக்கப்பட்டது.

இந்தியா படைத்த வியக்கத்தக்க, போற்றத்தக்க அரும் பெரும் அறிவியல் சாதனையாகும்.

மூன்று சந்திரயான் விண்கலங்கள் நிலாப் பகுதிக்குச் செல்வதற்குத் திட்ட இயக்குநர்களாக இருந்த மூவரும் தமிழர்கள்.

முதல் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்.

நிலாவில் வெற்றிகரமாக வலம் வரும் மூன்றாம் சந்திரயான் இயக்குநர் வீரமுத்துவேலை இப்பணியில் தேர்ந்தெடுத்து வழிகாட்டியவர்.

சந்திரயான் இரண்டாம் விண்கலத்தின் இயக்குநர் வனிதா முத்தையாவும் தமிழர்.

இப்பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பொறியாளர்கள் 98 விழுக்காடு மாநிலப் பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் உயர் கல்வி பயின்றவர்கள்.

பல விழுக்காடு பொறியாளர்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் பயின்றவர்கள்.

பெரும்பாலான இந்தியத் தொழில்நுட்பக் கழகங் களில் பயின்றவர்கள் அமெரிக்கா சென்றுவிட்டார்கள்.அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

ஆனால் நாட்டின் மாநிலப் பொறியியல் கல்லூரி களில் பயின்று இன்று வானியல் -அறிவியல் வல்லுநர் களாக உயர்ந்து இருப்பது தமிழ்நாடு பெற்ற சிறப் பாகும்.

தமிழைப் போற்றுகிறேன், வள்ளுவரை வாழ்த்து கிறேன் என்று அடிக்கடி கூறும் பிரதமர் நரேந்திரர் மூன்றாம் சந்திரயான் சென்று இறங்கிய நிலாவின் தெற்குப் பகுதிக்குத் திருவள்ளுவர் என்று பெயரிட்டி ருக்கலாம்.

ஏன் என்றால் வள்ளுவர் 2000ஆண்டுகளுக்கு முன்பே சமயச் சார்பற்ற மானுட உயர் நெறிகளை வலியுறுத்தியவர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர் நெறிகளை வகுத்துத் தந்த கணியன் பூங்குன்றன் என்றும் கூட பெயரிட்டிருக்கலாம் .

சிவசக்தி ஒரு மத அடையாளம்.

புராணக் கட்டுக்கதையில் வரும் ஒரு பாத்திரம்.

சிவ சக்தி கற்பனையான கணவன் மனைவி உறவு.

அறிவை வீழ்த்தும் ஆபாச கற்பனை!

அறிவியலுக்கு எவ்வித  தொடர்பும் இல்லாத மூடநம்பிக்கையின் உச்சம்.

நிலாவைத் தலையில்  சுமந்து கொண்டு இருப்பவர் சிவ பெருமான்! மனைவியையும் சுமந்து கொண்டு இருப்பவர். புராணம் பொய் அறிவியல் மெய். மூன்றாம் சந்திரயான் இறங்கியதை நாம் பார்க்க முடிந்தது. அறிவியல் சுட்டும் உண்மையைச் சிவசக்தி என்று பெயரிட்டு கற்பனை கலந்த திருவிளை யாடல்களைப் புகுத்தும் திசை திருப்பும் அடாத செயல் இந்தியாவின் உயர் அறிவியல் வல்லுநர்களைக் கேவலப்படுத்தும் இழிவான செயல்.

மக்களை மடையர்களாக ஆக்கும் மோடியின் சாகசம். அரங்கேறக் கூடாத அருவருப்பான சங்கி நாடகம். 

1966-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம். நிலா விற்கு விண்கலத்தை முதன் முதலில் அனுப்பியது. விண்கலம் இறங்கிய போது அங்கு எவ்வித சிவனும் இல்லை சக்தியும் இல்லை! 

1966-ஆம் ஆண்டிலேயே அமெரிக்க விண் கலமும் நிலாவில் இறங்கியது!

1969ஆம் ஆண்டில் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் உலகின் முதல் மனித ராகக் கால் பதித்தார். சிவன் தலையிலேயே காலை‌ வைத்த போது சிவ‌சக்தி எங்கே போயிற்று?

ஆம்ஸ்ட்ராங் நிலாவின் மணலை எடுத்து வந்தார். அமெரிக்க அறிவியல் கண்காட்சியில் நான் அமெரிக்கா சென்ற‌போது நிலாவின் மணலைப் பார்த்துள்ளேன். நிலாவிற்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள்  சென்று வந்த நிகழ்வை அறிவியல் மனப்பான்மையை வளர்க்க முற்படுகின்றனர். நாசா அனுப்பி, திரும்பி வந்த விண்கலங் களைக் காட்சிப் படுத்தி உள்ளனர். மாணவர்கள், வெளிநாட்டுப் பய ணிகள் உட்படப் பல ஆயிரம் பேர்கள் அறிவியல் சாதனைகளை அறிந்து கொள்கின்றனர்.

சீனா 2013ஆம் ஆண்டு நிலாவிற்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது. இன்று மோடி செய்வது போன்று நிலாப் பகுதிக்கு சீனா பெயர் வைக்க வில்லையே!

அறிவியலை, அறிவியல் அறிஞர்களை உலகள வில் அவமதிப்பு உள்ளாக்கும் மோடியின் செயல் தரம் தாழ்ந்த அரசியலின் அடையாளம்.

பல அறிவியல் அறிஞர்களின் அயராத உழைப்பை அரசியலுக்காக பெங்களூரு சென்றுத் தன்னை விளம்பரம் செய்வது வீழ்ச்சி அடைந்து வரும் மோடி அரசியலின் இறுதி காட்சி.

சிவன் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

"பரமசிவன் கழுத்தில் இருந்து

பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் 

இருந்து கொண்டால்

எல்லாம் சவுக்கியமே

கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது "

கவிஞரின் அடுத்த வரிகள்

மோடி இறங்கு முக ஆட்டத்தைப் பற்றியது.

"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும்கூட   மிதிக்கும்"

கவிஞன் வாக்குப் பலிக்கும் 

இந்த வரியைக் கூறியது 

கண்ணதாச கவிஞர் தான்.

மக்கள் ஜனநாயகம்

பாசிஸ்ட்களை மிதித்தது தானே

நமக்கு வரலாறு சுட்டும் பாடம்!

அறிவியல் உணர்வு ஓங்கட்டும் 

சனாதன ஒன்றிய ஆட்சி வீழட்டும்.

No comments:

Post a Comment