பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

பதிலடிப் பக்கம்

ஆளுநரே, நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)


ஆதவன் தீட்சண்யா

த.மு.எ.க.ச. 

பொது செயலாளர்

தானொரு சனாதனவாதி என்று கூறிவரும்  ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்தளவுக்கு சனாதன தர்மத் தைப் பின்பற்றுகிறவராக இருக்கிறார்?  பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி 1916ஆம் ஆண்டு  வெளியிட் டுள்ள ‘சனாதன தர்மம்’ என்கிற நூலின்படி, சனாதனம் என்றால் நித்திய மதம். ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதால் இம்மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரியர்களின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்றழைக்கப்படும் நிலத்தின் வடக்குப் பகுதியில் குடியேறின. ஆரியர்கள் குடியேறியதால் ஆரிய வர்த்தம் என்றான இந்நிலப் பரப்பு, கிழக்குப் பெருங்கடலில் இருந்து மேற்குப் பெருங்கடல் வரை, இரண்டு மலைகளுக்கு இடையே (ஹிமவான் மற்றும் விந்திய) பரவியுள்ளது. 

யாருக்குரியது? எது சனாதனம்?

-இதன்படி, சனாதனம் ஆரிய வர்த்தத்தில், ஆரியர் களுக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. விந்திய மலைத்தொடருக்கு அப்பாலுள்ள கேர ளத்திற்கும் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்திருப்பதன் மூலம் ஆளுநர் ரவி, சனாதனத்தின் எல்லையை மீறிய குற்றத்தைச் செய்திருப்பதுடன், சனாதனத்தின் மய்யப் புள்ளியே தமிழ்நாடுதான் என்று பொய்யுமுரைக்கிறார்.   

சனாதனத்தை நித்திய மதம் என்கின்றனர். அந்தப் பெயர்கூட அநித்தியமாகி பின்னாளில் இந்துமதம் என மாறிப்போனது. சனாதனம் என்பதை ஒரு கோட்டை யாகவோ குட்டிச்சுவராகவோ உருவகப்படுத்திக் கொண்டோமானல் அதன் அடித்தளம் ஸ்ருதி. அதன் நான்குச் சுவர்கள் ஸ்மிருதிகள். நான்கு வேதங்களி லிருந்து தேவர்களால் சொல்லப்பட்டு ஞானிகளாலும் ரிஷிகளாலும் கேட்டறியப்பட்டது ஸ்ருதி. இவ்வாறு கேட்டறிந்து நினைவில் வைத்து சொல்லப்பட்டவை ஸ்மிருதிகள். தேவர்கள் எங்கிருந்து என்ன மொழியில் எதைச் சொன்னார்கள், ரிஷிகளும் ஞானிகளும் அதை  எங்கிருந்து கேட்டு என்னவாக விளங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு என்ன மொழியில் போதித்தார்கள், போதனையின் மொழியும் பொருளும் கேட்டுக் கொண்டவர்களுக்கு புரிந்தனவா என்கிற கேள்விகள் ரவிகளுக்கு தேவைப்படுவதில்லை. ஏனெனில் கேள்விகள் பகுத்தறிவுடன் தொடர்புடையவை. சரி அந்தத் தேவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. ‘அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லீறாதிய’ என்கிற கதைதான். 

ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்கள், நான்கு ரிஷிகளால் எழுதப்பட்ட நான்கு  ஸ்மிருதிகள் (மநு ஸ்மிருதி, யாக்ஞவல்லிய ஸ்மிருதி,  ஷங்க லிகிதா ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி), இரண்டு  இதிகாசங்கள், வேதங்களைப் படிக்க முடியாதவர் களுக்காக/ கூடாதவர்களுக்காக(?) புனைந்துரைக்கப் பட்ட 18 புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம்,  சமூகம் சார்ந்து சொல்லப்படும் சட்டங்கள், ஒழுங்கு கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பின்பற்றி வாழ்வது தான் சனாதன தர்மத்தின்படியான வாழ்க்கையாகும். இந்தச் சனாதன தர்மத்திற்கு எதிராக வாழ்வதற்கு வரலாறு நெடுகிலும் நடந்த போராட்டங்களின் ஊடா கத்தான் சமூகத்தின் இன்றைய எல்லா முன்னேற்றங் களும் சாதனைகளும் எய்தப்பட்டன. இதன் தொடர்ச்சி யில்தான் ஆர்.என்.ரவியால் ஆட்சிப்பணி  அதிகாரி யாகவும் ஆளுநராகவும் ஆக முடிந்திருக்கிறது. ஆனால் இந்த நாடு சனாதனத்தாலும் ரிஷிகளா லும்தான் கட்டியெழுப்பப்பட்டது என்று உண்மைக்கு மாறாக கதையளக்கிறார். 

வர்ணங்களும் ஆஸ்ரமங்களும்

சனாதன தர்மம் ஆரியச் சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்தது. இந்த வர்ணங்கள் ஆரியப்  பெண்களுக்குக் கிடையாது. அவர்கள் திருமணத்திற்கு முன் தகப்பனின் வர்ணத்தையும் திருமணத்திற்குப் பிறகு கணவனின் வர்ணத்தையும், கணவனுக்குப் பிறகு மகனின் வர்ணத்தையும் சேர்ந்தவர்கள். படி நிலையான இந்த வர்ணப் பிரிவினை அந்தந்த வர்ணத்திற்கென வகுத்துள்ள வேலைகளைத்தான் செய்யவேண்டும் என்கிற நிலை இப்போதும் நீடித் திருந்திருந்தால் ஆர்.என்.ரவி என்ன  படித்திருப்பார், என்ன வேலை செய்துகொண்டிருந் திருப்பார்?  

ஆரியச் சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்த சனாதனம், தனிமனித வாழ்க்கையை பிரம்மச்சரி யம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு ஆஸ்ரமங்களாகப் பிரித்தது. ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வேலைப் பிரிவினை செய்யப்பட்டு உள்ளது. எனவே யாரொருவரும் எந்தக் கட்டத்தையும் இன்பத்தையும் விலக்கிச்செல்லக் கூடாது என்கிறது.  

ஆஸ்ரமத்தின் முதலாவது கட்டமான பிரம்மச்சரிய காலத்தில் உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து இரு பிறப்பாளராவது அவசியம்.  இந்த உபநயனச் சடங்கினை பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமேயானதாக ஆக்கியதன் மூலம் பெண்களும் இதர வர்ணத்தவரும் கல்வி பெறுவதை சனாதனம் தடுத்துள்ளதை ரவியால் மறுக்கமுடியுமா? ‘‘வேதங் களையோ, இரண்டு வேதங்களையோ, ஒரு வேதத் தையோ முறைப்படி, மீறாமல் படித்தல் பிரம்மச்சரியம்’’ என்கிறது சனாதனம். இதன்படி,  வேதங்களைத் தவிர மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், என்டயர் பொலிடிகல் சயின்ஸ்  போன்ற வேறெதையும் படிக்கக்கூடாது; அய்அய்டி, அய்அய்எம்,  மருத்துவக் கல்லூரி போன்றவற்றிலிருந்து வெளி யேறுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன் ரவி!. 

தவிர்க்க வேண்டியவைகள்... 

‘‘மாணவர் மது, இறைச்சி, வாசனை திரவியங்கள், மாலைகள், சுவையான - காரமான உணவுகள், பெண் கள், அமிலங்கள் ஆகிய உணர்ச்சிகளைக் காயப் படுத்தும் விசயங்களைத் தவிர்க்கட்டும்’’ என்கிற  உபதேசத்தில் பெண்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை  ரவி ஏற்கிறாரா? மாணவர்கள் தவிர்க்கவேண்டிய பட்டி யலில் காமம், கோபம்,  பேராசை ஆகியவற்றுடன் நடனம், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல் போன்ற வற்றையும் சேர்க்கிறது சனாதனம். எனில், இசை/ நடன/ நாடக/ திரை/ ஓவிய/ நுண்கலைப்பள்ளிகளை மூடிவிடலாமா ரவி? ‘‘வதந்திகள், அவதூறு, பொய்யி லிருந்து விலகியிருத்தல்’’ என்னும் சனாதனத் திற்கு விசுவாசமாக இருப்பதாக இருந்தால் முதலில் மாணவர் அமைப்பான ஏபிவிபியை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சங்பரிவார அமைப்புகளையும் கலைக்க வேண்டி யிருக்கும். 

ரவியேகூட பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டி யிருக்கும்.  நான்கு ஆஸ்ரமங்களில் மற்ற மூன்றுக்கும் ஆதாரம் இரண்டாவதான இல்லற வாழ்வுதான் (கிரு கஸ்தம்). எல்லா உயிரினங்களும் காற்றின் ஆதரவில் வாழ்வதுபோல, மற்ற ஆஸ்ரமத்தார் அனை வரும் குடும்பஸ்தர்களின் ஆதரவில்தான் வாழ்கின்ற னர். அவர் மற்ற மூன்றையும் உண்மையாக ஆதரிக்கிறார். அனைத்து நீரோடைகளும் ஆறுகளும் ஓய்வெடுக்க கடல் நோக்கிப் பாய்வதுபோல், அனை த்து ஆஸிரமத் தாரும் ஓய்வெடுக்க இவர்களை நோக்கியே ஓடுகின்ற னர். தேவர்களை வழிபடுதல், கல்வி, தாங்கள் இருந்த தைப் போல ஒரு குடும்பத்தை வளர்ப்பதன் மூலமும் புதிய வாழ்க்கைக்கு உதவு வதன் மூலமும் பித்ருகளுக் குரிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமைகளிலிருந்து விலகக்கூடாது. இந்தக்  கடமைகளின் கடுமையான சுமையைத் தாங்குங்கள் என்கிறது சனாதனம்.  வீட்டை விட்டு ஓடுபவர்களின் வேலை பாவத்தில் விழுகிறது. துறவு வாழ்க்கை நடத்துவதற்காக, உரிய காலத்திற்கு முன்பே இல்லற வாழ்விலிருந்து வெளியேறி காடு களுக்குச் செல்லும் இளைஞர்கள் மீது பரிதாபப்பட்ட இந்திரன் ஒரு தங்கப்பறவையாக வடிவெடுத்து வந்து ‘‘இல்வாழ்வைப் பின்தொடருங்கள்’’ என்று வழிகாட்டி யுள்ளார். ஆஸ்ர மங்கள்  அனைத்திலும் இல்லறத்தாரே உயர்ந்தவர் என்கிறது வேதம்.

சனாதன விரோதமில்லையா?

ஏழைகளுக்கு உதவிய பிறகு எஞ்சிய உணவை உண்பதே உண்மையாக உண்பதாகும். தான் மட்டும்  காளான் இறக்குமதி செய்து உண்பதெல்லாம் சனா தனத்தில் வராது. இல்லற வாழ்வைத் துறந்தவர்கள், பாதியில் கைவிட்டு ஓடியவர்கள் குறித்து சனாதனி யான ரவியின் நிலைப்பாடு என்ன? இல்லற வாழ்வை  மேற்கொள்ளாத மடாதிபதிகள், பீடாதிபதிகள், லோக குருக்கள், லோக்கல் குருக்களை சனாதன விரோதிகள் என்று எப்போது அறிவிக்கப்போகிறீர் ரவி? துறவொ ழுக்கத்தை கேலிக்குள்ளாக்கும்விதமாக ஆடம்பரத் திலும் சட்டவிரோதச் செயல்களிலும் திளைக்கும் கார்ப் பரேட் சாமியார்களின் நிகழ்வுகளில் பங்கெடுக்கும் தலைவர்களை ரவி கண்டிப்பாரா? வாழ்வின் ஒரு கட்டத்தைக் கடந்தவர்கள் முந்தையக் கட்டத்தை திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிறது சனாதனம். ஆனால் வரிசைக்கிரமமாக அல்லாமல் எடுத்த யெடுப்பில் நேரடியாக தட்கல்  முறையில் சந்நியாசம் போய்விட்டு பின்னர் கிருகஸ்த  நிலையை ஏக்கத்துடன் திரும்பிப்பார்த்து ரகசிய கேமராவில் சிக்கிக் கொண் டவர்கள், மடத்தை விட்டு வெளி யேறி மீண்டும் இழுத்துவரப்பட்டவர்கள் சனாதனத்து க்கு ஏற்படுத்திய இழுக்கு பற்றி ரவி வாய்திறப்பாரா? 

இல்வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் தனது கடமைகளின் முழுச் சுமையையும் தன் மகன்களால் சுமக்க முடி வதைக் காணும்போது, மூப்பின் அறிகுறிகள் தோன்றும் போது, தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் தன்னைச் சுற்றி வருவதைக் காணும்போது, அவரும் அவரது மனைவியும் வீட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து, சுறுசுறுப்பான  உலகியல் வாழ்க்கை யிலிருந்து விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணரவேண்டும். தத்துவார்த்த நூல்களைப் படிப்பதற் காகவும், பிறருக்காக தியாகம் செய்யவும், நல்வழிப் படுத்தவும் கொடுக்கப்பட்ட அமைதியான, சற்றே ஒதுங்கிய வாழ்க்கையே மூன்றாவது ஆஸிரமமான வானப்ரஸ்தம்.  

பற்றை நிரூபிப்பீர்களா?

இந்த ஒரு விசயத்திலாவது சனாதன தர்மத்தை  ஏற்று ரவி, மோடி, அமித்ஷா, மோகன் பகவத் போன்ற வர்கள் அரசியலிலிருந்தும் பதவிகளிலிருந்தும் ஒதுங்கி காடுகளுக்குச் சென்று தவவாழ்வு மேற்கொண்டு சனாதனத்தில் தமக்குள்ள பற்றினை நிரூபிப்பார்களா? ஒருவேளை காடுகளுக்குப் போய்  பழங்குடிகளுக்கு தொல்லை தரவேண்டாம் என்கிற நல்லெண்ணம் உதிக்குமாயின் காசி, ராமேஸ்வரம், கைலாயம் என்று எங்காவது ஆன்மீகப் பயணம்  மேற்கொள்வது அவர்களது வீட்டுக்கு எப்படியாயினும், நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும்  செயலாக அமையும். (அதற்குள் ஏன் உணர்ச்சி வசப்பட்டு விலகல் கடிதம் எழுதுகிறீர்கள் ரவி? கொஞ்சம் பொறுங்கள், நான் சனா தனத்தின் அத்தனை விசயங்களையும் பேசப்போவ தில்லை, கட்டுரை முடியப்போகிறது). இறுதியாக, தனது தோலில் சுருக்கத்தையும், தலையில் நரையின் வெண் மையையும், குடும்பம் அடுத்தடுத்த சந்ததியினரால் நிறைந்திருப்பதையும் காணும் ஒருவர் அனைத்து பந்தங்களையும் துறந்து செல்போன், கேமரா எதுவு மின்றி காட்டிற்குச் சென்று  தியானத்திலும் வழிபாட்டி லும் தனது கடைசி நாட்களைக் கழிக்க வேண்டும் என்கிறது சனாதனம். எப்போது கிளம்பப்போகிறீர்கள் ரவி?

- நன்றி: ‘தீக்கதிர்‘, 8.5.2023


No comments:

Post a Comment