ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!

 வேறு எவருக்கும் கிடைக்காத  பெரும் பேறு எனக்குக் கிடைத்தது!

நான் உங்களோடு இருக்கக் கூடியவன்; ஒவ்வொருவருடைய குடும்பத்தைப்பற்றியும் எனக்குத் தெரியும்!

எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளப்படுத்துங்கள்!

ஈரோடு, மே 28   வேறு எவருக்கும் கிடைக்காத  ஓர் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது! நான் உங்க ளோடு இருக்கக் கூடியவன்; ஒவ்வொருவருடைய குடும் பத்தைப்பற்றியும் எனக்குத் தெரியும்! எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளப்படுத்துங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு

கடந்த 13.5.2023 காலை ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

வாலிபர்கள் என்றால் யார்?

வாலிபர்கள் என்பதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே அய்யா அவர்கள் விளக்கம் சொல்லியிருக்கிறார்.

‘‘நான் வயதை வைத்து வாலிபத்தைக் கணக்குப் போடுவதில்லை. அவனுடைய கொள்கைப் போராட்ட உணர்வு இருக்கிறதே அதை வைத்துதான்''  என்று கூறியுள்ளார். வயதானவர்கள் இங்கே அமர்ந்திருக் கிறார்கள் என்றால், வயதானவர்கள்தான் தயாராக இருப்போம் சிறைச்சாலைக்குப் போவதற்கு; போராடு வதற்கு - போராளியாக இருக்கிறோம் அல்லவா! ஆகவே, வயது என்பது முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம். கொள்கைக்கு வயது கிடையாது; உடலுக்குத் தான் வயது. 

நம்முடைய உணர்வுக்கு வயது கிடையாது; உறுப்புக்குத்தான் வயது.

நாங்கள் சில கும்கிகளை வைத்திருக்கின்றோம்!

ஏன் இப்பொழுது இளைஞர்களின் கைகளில் ஒப்படைத்து இருக்கின்றோம்? பயிற்சி பெற்ற வர்கள், மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண் டும். கும்கி யானைகள், மற்ற யானைகளுக்குப் பயிற்சி தரும். ஏன் கும்கி யானை தேவைப்படுகிறது? அந்த யானை எங்கே இருக்கும்? காட்டில் விட்டுவிடுவார்களா? இல்லை; பாதுகாத்து வைத்திருப்பார்கள். ஆகவேதான், சில கும்கிகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.

இந்தப் பொறுப்பை மாற்றிவிட்டார்கள்; அதை மாற்றிவிட்டார்கள் என்று யாரும் சொல்ல முடி யாது. ஏனென்றால், புரிந்தவர்கள் இருக்கிறார்கள்; தெளிந்தவர்கள் இருக்கிறார்கள். உணர்வுள்ள வர்கள் இருக்கிறார்கள்.

வேறு எவருக்கும் கிடைக்காத 

ஓர் அற்புதமான பேறு

ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய அந்த காலகட்டத்தில் நான் 10 வயது சிறுவனாக இருந் தாலும், என் மனதில் அது நன்றாக பதிந்து போய்விட்டது. அந்த மேடையில் நான் பேசினேன் என்பது எனக்குக் கிடைத்த - வேறு எவருக்கும் கிடைக்காத பெரும் பேறாகும்.

தந்தை பெரியார் சொல்கிறார்:

‘‘இளைஞர்களே, நான் வாலிபர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம்  இதுதான். நீங்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை அடிமையிலிருந்து விலக்கப் போகிறீர்கள். உங்கள் காலத்தில்தான் சுயமரியாதை உதயமாக வேண்டும். நான் உண்மையாய் நினைக்கிறேன். நீங்கள் நினைத்தால் புரோகிதக் கொடுமையைத் தலைகாட்டாது ஒழியுங்கள்;  அப்படியானால், நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்? நீங்கள் அடிமைத்தனத்தையும், மூடநம்பிக் கையையும் ஒழியுங்கள்; புரோகிதக் கொடுமைகளுக்கு வழிகொடாதீர்கள். அதுதான் உங்களை அடிமையாக்கி இருக்கிறது'' என்று அங்கேயும் பேசினார், அதற்குப் பிறகு பச்சையப்பன் கல்லூரியிலும் பேசினார்.

மூன்று ஆண்டுகளில் 

செய்யவேண்டிய பணி!

எனவே நண்பர்களே, மிக முக்கியமாக நான் சொல்வது - இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வழிகாட்டிகள் - இந்த இயக்கத்திற்கு. மூன்று ஆண்டு களில் செய்யவேண்டிய பணி என்பது இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.

அதனால்தான், மண்டலக் கமிட்டிகள் என்பவை தேவையில்லை என்று கலைத்துவிட்டு, அதில் உள்ள வர்கள் யார் யாரைப் பயன்படுத்த முடியுமோ, அவர் களையெல்லாம் இயக்கப் பொறுப்புகளில் கொண்டு வந்திருக்கின்றோம்.

இயக்கத்திற்கு நன்கொடை கொடுப்பவர் சிலர் இருப்பார்கள்; சுவரெழுத்து எழுதுபவர் இருப்பார்; ஆதரவு காட்டுகிறவர்கள் இருப்பார்கள்.

ஆகவே, ஓர் இயக்கம் என்பதில் இப்படி பலதரப் பட்டவர்கள் உண்டு. எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. எல்லோரும் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு வந்துதான் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஒன்று திரட்டுகின்ற சக்தி, ஆற்றல் இளைஞர்களுக்கு வரவேண்டும்!

சிலர் பணம் கொடுப்பார்கள்; சிலர் களம் காணு வார்கள். அதுபோன்ற முயற்சியில் தோழர்களே, நாம் எல்லோரையும் ஒன்று திரட்டும்பொழுது, அந்தத் திரட்டு கின்ற சக்தி, ஆற்றல் இளைஞர்களுக்கு வரவேண்டும்.

அந்த ஆற்றல் வரவேண்டும்; அதைப்பற்றித்தான் நீண்ட நாள் கவலையாக சிந்தித்தோம். இடையில், என்னுடைய சுற்றுப்பயணம் காரணமாக -  ஒரு தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், நான் எவ்வளவோ கவனமாக இருந்தும்கூட, கடந்த சில வாரங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு சங்கடப் பட்டேன்.

என்றாலும், இந்தக் கடமையைச் செய்துவிட்டுப் போகவேண்டும்; தெளிவானவர்கள் மத்தியில் இந்தப் பொறுப்பை அவர்கள்முன் வைக்கவேண்டும் என்று நினைத்தேன்.

நம்முடைய வரலாற்றில் மிக முக்கியமானதாகும்!

அதனால்தான், நாங்கள் வழிகாட்டக் கூடிய அளவில் இருக்கிறோம். வருகின்ற மூன்றாண்டுகள் மிக முக்கிய மான  -நம்முடைய வரலாற்றில் மிக முக்கியமானவை யாகும். இன்றைக்கு கருநாடகத் தேர்தல் முடிவுகளும் வந்திருக்கிறது.

மூன்று விஷயங்களைச் சொல்லவேண்டும் -

மோடி முகத்தைக் காட்டினால் போதும், பூக்களாக பொழியும் என்று சொன்னார்கள்.

பூக்கள் தெருவில் விழுந்ததே தவிர, ஓட்டுகள் பெட்டியில் விழவில்லை.

மோடி போனால், எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றுவிடுவார் என்று சொன்னார்கள். அது பொய்யாய், பழங்கதையாய்ப் போனது என்பதற்குக் கருநாடகத் தேர்தல் முடிவே சான்றாகும்.

கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சியினர்40 சதவிகித கமிசன் ஆட்சி என்று பெயர் பெற்றனர். 

ஆட்சியில் இருப்பவர்கள் ஒழுக்கத்திலும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு அது ஒரு பாடம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

எனவே, இந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லக்கூடிய  மிகச் சிறந்த சூழ்நிலை இன்றைக்கு வந்திருக்கிறது.

நாங்களும், அது கவிஞராக இருக்கட்டும்; அறிவுக் கரசாக இருக்கட்டும்; பொத்தனூர் சண்முகமாக இருக் கட்டும் - எல்லோரும் இயற்கைக்கு மாறாக நாங்கள் என்ன நிரந்தரமாக இருக்கப் போகிறோமா?

மறைவு என்பது இயற்கை. இவ்வளவு நாள் தாங்கி இருக்கிறோம் - அது ஒரு பெரிய வாய்ப்புதானே தவிர, வேறொன்றுமில்லை.

எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், இதைப் பார்த்துவிட்டோம்; அதைப் பார்த்துவிட்டோம்; இன்னும் ஒன்றே ஒன்று, மதவெறியாளர்கள் பதவி இழந்து அவர்கள் தெருவில் நிற்கும்பொழுது - அதையும் பார்க்கவேண்டும்.

ஆரியம் என்பது உருமாறும்!

நாங்கள்தான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவர் கள் என்று சொல்லக்கூடிய அளவில் இன்று  இருப்ப வர்கள் நிரந்தரமாக இருக்கப் போகின்றவர்களா? ஆரியம் என்பது உருமாறும்; அவதாரத் தத்துவத் தினுடைய நோக்கமே அதுதான்.

முதலில் மிருகத்தில் இருந்து ஆரம்பித்தான்; கடலில் இருந்து ஆரம்பித்தான்; பிறகு வெவ்வேறு ரூபங்களில் வந்தது. தூணுக்குள் மறைந்திருந்து, அதிலிருந்து வெளியே வந்தான்.

இப்படியெல்லாம் வந்தாலும், இவ்வளவையும் கண்டு பிடிக்கக் கூடிய ஆற்றல், பெரியார் என்ற மிகப்பெரிய தத்துவத்திற்குத்தான் உண்டு.

மிகப்பெரிய அளவிற்கு சிறப்பாக இந்தக் கமிட்டி அமைந்திருக்கிறது. எனவே, செயல் வீரர்களே, மண்டலக் கமிட்டி என்பது இனி கிடையாது.

மாவட்டத் தலைவர்கள் என்பவர்களுக்கு என்னு டைய அன்பான வேண்டுகோள்  - யாருக்காவது இயக் கத்தில் பணியாற்ற முடியவில்லை என்றால், அதனை வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதிலொன்றும் தவறு இல்லை.

நூற்றாண்டுகளைப்பற்றி சொல்லிக் கொண்டு வருகின்றோமே, கையில் இருக்கின்ற மிகச் சிறந்த நூற்றாண்டு - கலைஞருடைய நூற்றாண்டு விழா என்பது சாதாரணமானதல்ல.

பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளை, நான் அகற்றாமல் போகிறேன் என்று சொன்னார். அவருடைய சிறப்புகளிலேயே தலைசிறந்த சிறப்பு என்னவென்றால், ‘‘ஈரோட்டு குருகுலத்தில் இருந்தார், அந்த ஊரில் பிறந்தார், இந்த ஊரில் வளர்ந்தார், இந்த ஊரில் இருந்தார் என்பதைவிட. தன்னுடைய தலைவனுக்கு அரசு மரியாதை செய்யவேண்டும் என்று நினைத்த நேரத்தில், அதிகாரிகள் அச்சுறுத்துகிறார்கள்; ஆட்சி போய்விடுமே'' என்று.

அதைவிட பெரிய வாய்ப்பு இல்லை என்றார் கலைஞர்!

ஆட்சி போய்விடுமே என்று நினைத்தால், வீரன் கோழையாவான். அங்கே சுயநலம் பெருகுமே தவிர, பொதுநலமோ, இனநலமோ இருக்காது.

ஆனால், கலைஞர் இதற்கு விதிவிலக்காக இருந்து - என்னுடைய தலைவனுக்கு நான் காட்டுகிற மரியாதைக்காக இந்த ஆட்சி போனால், அதைவிட பெரிய வாய்ப்பு இல்லை என்று சொன்னார்.

இரண்டு பேர் அப்படி சொன்னார்கள்.

மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்தியதால், பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று சொன்னது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு எத்தகைய பெருமையோ, அதேபோல, தன்னுடைய தலைவனுக்கு அரசு மரியாதை கொடுத்தால், என்னு டைய ஆட்சி போகும் என்றால், பரவாயில்லை என்று சொன்ன கலைஞரும் அந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்.

அவருடைய நூற்றாண்டு விழா மிகப்பெரிய அள விற்குக் கொண்டாடப்படவேண்டியது. நம்முடைய திட்டப்படி நாம் கொண்டாடவுள்ள நூற்றாண்டு விழாக் களில் மிக முக்கியமான ஒன்று.

ஏனென்றால்,  பேராசிரியருக்கு மணிவிழாவினை திராவிடர் கழகத்தின் சார்பாக நாம் ஈரோட்டில் நடத்தி னோம்.

இந்த நேரத்தில் இயக்கத் தோழர்களுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.

நூறு சதவிகிதம் எதிர்பார்த்து 

நாம் ஏமாந்துவிடக் கூடாது

இந்த ஆட்சி, நாம் ஆதரிக்கின்ற ஆட்சி. நாம் பதுகாத்துக் கொண்டிருக்கின்ற ஆட்சி.  ஆனால், நம்முடைய கொள்கைகளை அப்படியே செய்வார்கள் என்று நூறு சதவிகிதம் எதிர்பார்த்து நாம் ஏமாந்துவிடக் கூடாது.

ஏனென்றால், இது அரசியல். வாக்கு வங்கி ஜனநாயகம். அது ஒரு சார்பல்ல- அதற்கு எத்தனையோ வகைகளில் வளைந்து, நெளிந்து கொடுக்கவேண்டும். அதனால்தான் நாம் அந்த இடத்திற்குப் போகவில்லை.

நம்முடைய தோழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், தனிப்பட்ட முறையில் சொல்கிறேன்; ஏனென் றால், நாம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

அய்யா எழுதிய ‘‘சிபாரிசுத் தொல்லை’’ அறிக்கை!

ஆட்சி வந்தவுடன், பரிந்துரைக்காக சிலர் வரு வார்கள். அய்யா காலத்திலேயே ‘‘சிபாரிசுத் தொல்லை'' என்ற தலைப்பில் ஓர் அறிக்கை எழுதியிருக்கிறார்.

இதுவரை நமக்கு இருக்கின்ற தனித்தன்மையே சொந்தமாக எதையும் கேட்காதவர்கள். சொந்தக்காரியத் திற்காக நாம் எதையும் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள்.

நீதிக்கட்சியைப்பற்றி சொல்லும்பொழுது, ராஜா பனகல் அரசர் சொன்னார் என்று ஓர் அற்புதமான விஷயத்தை தந்தை பெரியார் சொன்னார்.

For everyone recommendation I make; I create 9 Enemies one doubtful friend â¡Á ªê£¡ù£˜.

 என்று சொன்னார்.

10 பேரில் 9 பேர் எதிரிகளாகி விடுவார்கள்!

‘‘10 பேர் என்னிடம் பரிந்துரைக்காக வருகிறார்கள். அந்த 10 பேரில் ஒருவருக்குத்தான் பரிந்துரை செய்ய முடியும். மீதியுள்ள 9 பேர் எதிரிகளாகி விட்டனர்.''

சரி, இது ஒருபக்கத்தில் இருந்தாலும், பரிந்துரை செய்தேனே அவராவது நமக்கு நண்பனாக இருக்கிறாரா, என்று கேட்டால்,

அவர் சொல்கிறார், ‘‘இவர் மட்டுமா பரிந்துரை செய்தார்; நான் யார் யாரிடமோ சொல்லி வைத்தேன். எனக்கே சொந்த தகுதியும் இருந்தது; ஆகவே, ஒருவேளை இவரும் நமக்கு உதவி செய்திருக்கலாம்?'' என்று சொல்கிறார்.

ஆகவே, 9 எதிரிகள்; சந்தேகப்படக்கூடிய ஒரு நண்பர் என்று சொல்வார்.

அதே நிலையில், ஒரு பகுதி நமக்கும் அத்தகைய நிலை உண்டு. அதனால் தோழர்களுக்குச் சொல்கிறேன்.

நான் உங்களோடு இருக்கக் கூடியவன்; ஒவ்வொருவருடைய குடும்பத்தைப்பற்றியும் 

எனக்குத் தெரியும்!

தோழர்கள் நன்றாக இருக்கவேண்டும்; தோழர் களுக்கு உதவவேண்டும்; தோழர்களுடைய எல்லா நிலைகளையும் நாம் புரிந்துகொண் டிருக்கவேண்டும் என்பதும் அவசியமானதுதான்.

நான் உங்களோடு இருக்கக் கூடியவன்; ஒவ் வொருவருடைய குடும்பத்தைப்பற்றியும் தெரியும்; ஒவ்வொருவருடைய சங்கடங்கள், பிரச்சினைகள் பற்றியும் தெரியும்.  ஆகவே, அலட்சியமாகவோ, யாரைபற்றியும் கவலைப்படாமலும் இல்லை.

ஆகவே, யார் யாருக்கு எந்தெந்த வகையிலே, எப்படி எப்படியெல்லாம் உதவ முடியுமோ, அந்தந்த வகையில், உதவக் கூடிய சக்தி நமக்கு உண்டு. அதைப் பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கின்றோம்.

அப்படியானால், சில நேரங்களில், சிபாரிசினுடைய தன்மை என்ன என்பதைப்பற்றி அய்யா அவர்கள் அறிக்கையில் மிக அழகாகச் சொல்லியிருப்பார்.

அதில் ஒரு பகுதி மிக முக்கியம்.

‘‘எதை நாம் முக்கியமான சிபாரிசு என்று ஒருவரிடம் சொல்லுகிறோமோ, அது நடப்பதில்லை. எது சாதாரண மாக இருந்தால் போதும் என்று நினைக்கிறோமோ, அது நடந்துவிடுகிறது'' என்று எழுதியிருப்பார் அய்யா அவர்கள்.

ஆகவே நண்பர்களே! நான் இயக்கத் தோழர் களுக்கும் சொல்கிறேன்; அது நாடி வருகிறது, இது வருகிறது என்று சிலவற்றைச் சொன்னார்கள்; சில நேரங்களில் அதுதான் நமக்குச் சங்கடம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு இதுபோன்ற தொல்லை இல்லை. ஏனென்றால், இவர்களிடம் போனால், சிபாரிசு செய்யமாட்டார்கள்; ஆட்சிக்கு எதிரானவர்கள் நாம். அந்த வகையில் நாம் நிம்மதியாக இருந்தோம், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

‘‘இவரிடம் போனால், காரியம் கெட்டுப் போய்விடும்; இவரைத் தெரியும் என்று தெரிந்தாலே, நமக்கு நடக்கவேண்டிய காரியங்கள்கூட நடக்காது'' என்பதால், அங்கே போகக்கூடாது என்றுகூட நினைப்பார்கள்.

உதவ வேண்டியவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ செய்யுங்கள்!

கொள்கைக் குடும்ப உணர்வோடு நான் சொல்வது என்னவென்றால், உதவ வேண்டியவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ - அந்தந்த வகையில் உதவி செய்யக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும்; இன்னுங்கேட்டால், நமது இயக்கத் தோழர்கள், இங்கே வந்திருப்பவர்கள், வர வாய்ப்பில்லாதவர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ‘‘இந்த இயக்கத்தவர்களைவிட, நாங்கள் இருதயம் போன்று, மூளை போன்று இருந்தாலும்கூட, நீங்கள் ஒவ்வொருவரும் உறுப்புகள்; எந்த உறுப்புக்கு எந்த ஆபத்து வந்தாலும், அது உடல்நலத்தைப் பாதிக்கும்.''

அந்நியர்களாகவோ, அலட்சியமாகவோ கருதவில்லை!

அந்த வகையில்தான், உங்களை உறுப்புகளாகக் கருதுகின்றோமோ தவிர, அந்நியர்களாகவோ, அலட்சியமாகவோ கருதவில்லை.

யாரிடம் எந்த வேலையை ஒப்படைப்பது என்கிறபொழுது, பயிற்சி கொடுக்கவேண்டும் இளைஞர்களுக்கு என்பதற்காகத்தான் இத்தனை மாற்றங்கள். 

அந்த மாற்றங்கள் நமக்கு சிறப்பான மாற்றங்களாக அமையவேண்டும். ஒருபோதும் ஏமாற்றமாக அது ஆவதற்கு இடந்தரமாட்டோம் என்ற அளவில், தோழர்களே, மாவட்டத் தலைவர்களே, மாவட்டப் பொறுப்பாளர்களே, இளைஞரணி தோழர்களே, மாணவர் கழகத் தோழர்களே, மகளிரணித் தோழர்களே, உங்களிடம் நான் அன்போடு வேண்டிக் கொள்வதெல்லாம் - ஓர் இயக்கம் வெற்றி பெறவேண்டுமானால், முதலில் அந்த வெற்றிக் கொள்கை எங்கே போய்ச் சேரவேண்டும் என்றால், மகளிரிடம்தான்.

மகளிரணியைப் பலப்படுத்துங்கள்; ஆண் ஆதிக்கச் சிந்தனைகளிலிருந்து விடுபடுங்கள்!

மகளிரை தாராளமாகப் பயன்படுத்துங்கள்; மகளிரணியைப் பலப்படுத்துங்கள்; ஆண் ஆதிக்கச் சிந்தனைகளிலிருந்து விடுபடுங்கள், அதுதான் மிக முக்கியம்.

மகளிர் எவ்வளவுக்கெவ்வளவு நம்முடைய இயக்கத்திற்கு வரவேண்டும் என்றால், அடுத்தமுறை கமிட்டியில், சரி பகுதி மகளிரே இருக்கவேண்டும்.

50 விழுக்காடு கொடுங்கள் பெண்களுக்கு என்று மற்றவர்களை நாம் கேட்பதைவிட, முதலில் மகளிருக்கு 50 விழுக்காடு நம்முடைய கூட்டங்களில் இருக்கிறதா? உறுப்பினர் சேர்க்கையை அதற்காகத்தான் வைத்திருக்கின்றோம்.

எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளப்படுத்துங்கள்!

ஆகவே, மகளிரணியை சிறப்பாகக் கட்டுங்கள்; அதற்கு உதவி புரியுங்கள். அடுத்தது இளைஞர்கள், அதற்கடுத்து மாணவர்கள்;  பிறகு தொழிலாளர்கள், விவசாயிகள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளப்படுத்துங்கள்.

இந்த இயக்கம் நம்முடையது - இந்த இயக்கம் என்னுடையது, உன்னுடையது என்பது கிடையாது. நம்முடையது.

இந்த இயக்கம் பலமானால், இந்த நாடு பலமாகும்; இந்த இனம் பலமாகும். இந்தக் கொள்கைகள் விரிவடையும்.

ஆகவே, அதனை சிறப்பாகச் செய்யுங்கள். 

களப்பணிகள் உண்டு.

தலைமைக் கழகம் சார்பாக 

எங்களுடைய தூதுவர்கள் அவர்கள்!

மாவட்டத் தலைவர்கள் முழுப் பொறுப்பாளர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மண்டலத் தலைவர்களை எடுத்துவிட்டோம்.

மாவட்டத் தலைவர்களாக யாரை நியமித்திருக்கின்றோமோ, தலைமைக் கழகம் சார்பாக எங்களுடைய தூதுவர்கள் அவர்கள்.

நாங்கள் நேரிடையாக வர முடியாது என்பதற்காகத்தான் அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கின்றோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சொல்லவேண்டியவர்கள். அவர்களிடம் நீங்கள் எதையும் சொல்லவேண்டும்.

எந்த மாவட்டமாக இருந்தாலும், மூன்று ஒன்றியங்கள் - ஒன்று அல்லது இரண்டு நகர சபைகள் - இதற்குத் தாண்டி இருக்கக் கூடாது. சின்னச் சின்ன மாவட்டங்களாக இருக்கவேண்டும்.

நம் இயக்கம் இல்லாத  ஊரே இருக்கக் கூடாது!

கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, ஒரு கழகக் கொடி - குறைந்தபட்சம் நம் இயக்கம் இல்லாத ஊரே இருக்கக் கூடாது. ஓர் ஊரில் இரண்டு பேர் இந்த இயக்கத்தில் இருந்தாலும், இரண்டு பேரையும் இயக்கமாக்குங்கள். ஒருவர் தலைவர், இன்னொருவர் செயலாளர் என்று சொல்லுங்கள். அல்லது இரண்டு பேரும் அமைப்பாளர்கள் என்று சொல்லுங்கள். அந்த இரண்டு பேர் இயக்கத்தை அந்த ஊரில் நடத்துங்கள்.

இது முடியுமா? என்று நினைக்காதீர்கள். ஒரே ஒரு பெரியார்தான் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

அவர் மட்டும், நம்மால் என்ன முடியும்? என்று நினைத்திருந்தால், இன்றைக்கு ஆல்போல் தழைத்து அருகுபோல் வளர்ந்திருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

எனவே தோழர்களே, காலம் அதிகமாகிவிட்டது; ஆனால், காலம் நம் வயப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மிக முக்கியமாக உங்களிடத்தில் இவற்றை சொல்கிறோம்.

அடுத்த அறிவிப்பு களப்பணி. இயக்கத் தோழர்கள், மகளிரணி தோழர்கள் ஒவ்வொருவரும் களப்பணிக்கு வரவேண்டும்.

அதனால்தான், மூன்று, நான்கு பேர் தலைமையில் எங்களோடு இருக்கவேண்டும் என்கிற மாற்றங்களை உருவாக்கியிருக்கிறோம்.

அவர்கள் தலைமை நிலையத்திலிருந்து அறிவிப்புகளை உங்களுக்குக் கொடுப்பார்கள் - கொடுத்திருப்பார்கள்.

அதேபோன்று, ஜெயக்குமார் அவர்கள், பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்குப் பொறுப்பாளர். பயிற்சி வகுப்புகள் என்பது எப்பொழுதோ, எங்கேயோ ஒன்று என்று இருக்கக்கூடாது; 24 மணிநேரத்தில், தூங்குகின்ற நேரம் போக, வேலை நேரம் போக, பயிற்சி வகுப்புகள் உண்டு.

30 நாள்களில் எத்தனை நாள்கள் பயிற்சி வகுப்புகள்?

ஓர் ஆண்டில் எத்தனை பயிற்சி வகுப்புகள்? என்பதை ஒருவர் முழுமையாகப் பார்த்து, ஏற்பாடுகளை உற்சாகத்தோடு செய்யவேண்டும்; புதுப்புது வரவுகள் வரவேண்டும்; அவர்கள் கொள்கை உறவுகளாக மாறவேண்டும். இதுதான் மிக முக்கியம். அதுதான் நம்முடைய கண்ணோட்டம்.

தோழர்கள் - கொள்கை, கொடி, பிரச்சாரம் - நம்முடையது பிரச்சார இயக்கம்.

நான் அடிக்கடி சொல்லும் உதாரணத்தை நண்பர்கள் நினைவூட்டிக் கொள்ளுங்கள்.

கடிகாரத்தின் பெண்டுலத்தைப் பாருங்கள் - பிரச்சாரம் - போராட்டம்! போராட்டம் நம்முடைய வாழ்க்கை.

எனவேதான் தோழர்களே, நீங்கள் அற்புதமாக இங்கே வந்து, இறுதிவரையில் உரையைக் கேட்டு செல்வது முக்கியமல்ல. 

‘ஈரோடு திட்டம்' என்று அய்யா அவர்கள் கொடுத்த திட்டம் என்பது மிக முக்கியமானது.

இன்றைக்கு நாம் கொடுத்திருக்கும் இயக்க அமைப்பில் இது ‘புதிய ஈரோடு திட்டம்!'

எனவே, ஈரோடு திட்டத்தை வெற்றி பெறச் செய்வீர்களா? 

(செய்வோம் என்று தோழர்கள் குரல் எழுப்பினர்)

செய்வீர்களா?

(செய்வோம் என்று தோழர்கள் குரல் எழுப்பினர்)

இதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - இதை நீங்கள் செய்வது எனக்காக அல்ல; தந்தை பெரியாருக்காக அல்ல; உங்கள் வருங்கால சந்ததியினருக்காக - உங்கள் மான வாழ்வுக்காக - உங்கள் உரிமைக்காக - உங்களுடைய எழுச்சிக்காக!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.


No comments:

Post a Comment