எம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழும் சிங்கப்பூர்- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

எம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழும் சிங்கப்பூர்- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும்!

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு' நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சிங்கப்பூர், மே 29- “தம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் இன் னும் கூடுதலாக பங்காற்ற வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தமிழ் முரசு' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் வெளியா கும் 'தமிழ் முரசு' நாளிதழுக்கு அளித்த பேட்டியினை சமூக வலை தளப்பதிவில் வெளியிட்டுள்ளார். 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீ டுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரின் 'தமிழ் முரசு' நாளிதழின் செய்தி ஆசிரியர் இர்ஷாத் முகம்மதுவுக்கு பேட்டி அளித்தார்.

அப்பேட்டி விவரம் வருமாறு:- 

‘நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்' என்று தமிழ்நாடு மேனாள் முதலமைச்சரும் எம் தந்தையாருமான கலைஞர் அவர்கள் சொல்வார். அந்த வகையில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளியலை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக ($1.35 டிரில்லியன்) உயர்த்த வேண்டும் என்று இலக்கு வகுத்துச் செயல்பட்டு வருகிறேன்.

அந்த இலக்கை எட்டிச் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதன்று எனத் தெரிந்தாலும் அது நாங்களாகவே வகுத்துக்கொண்ட இலக்கு.

இலக்கை அடைய முடியும்!

அந்த இலக்கை அடையத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம். அதற்கான வரைவுத்திட்டத்தைத் தயாரிக்க 'போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப்' எனும் ஆலோசனை நிறுவனத்தைப் பணியிலமர்த்தி உள்ளோம்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் என்ற இலக்கை எட்ட தமிழ்நாட்டிற்கு மேலும் 2,300,000 கோடி ரூபாய் முதலீடு தேவை. அதன் மூலம் 4,600,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருவதால் எங்களால் இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

நம்பிக்கை தரும் சிங்கப்பூர்! 

தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும் நாடு, தமிழர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் சிங்கப்பூர் மீது அளவில்லாப் பற்று கொண்டுள்ளதாகவும் அது எம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப் பெரிய தொழில் நுட்பப் பூங்காவை நிறுவியுள்ளது. 

தெமாசெக், டிபிஎஸ் வங்கி, மேப் பிள்ட்ரீ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்து வருகின்றன. “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.4,800 கோடி (785 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பு) முதலீட்டில் நான்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6,200 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. "மின்னணுவியல், வாகன உதிரிப் பாகங்கள், தடையற்ற வணிக, பொருளியல் மண்டலங்கள், தகவல் தொழில் நுட்பம், உணவுப் பதப்படுத்துதல், மருந்து, ஆடை போன்ற பல்வேறு துறைகளில் அந்நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மின்வாகனங்களுக்கான மின்னூட்ட நிலையங்கள் போன்ற புதிய துறைகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சீரான வளர்ச்சிக்கு பரவலாக திட்டங்கள்! 

"தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், பல்வேறு மாவட்டங்களிலும் இந்தத் திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 "எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் சிங்கப்பூர் பெரும் பங்காற்றி வருகிறது. இன்னும் கூடுதலாகப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

"புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் படி சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் வந்துள்ளேன். 

உலகத் தமிழருக்கு ஆதரவு!

மேனாள் முதலமைச்சர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கும் பரவியுள்ள தமிழ்ச் சமூகத்தின் தலைவராகவும் விளங்கினார். அதே வழியை நானும் பின்பற்றுகிறேன்.

உலகில் எங்கு தமிழர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். அண்மையில் இலங்கையில் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டபோது தமிழ்நாடு கைகொடுத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நாட்டுக்கு அரிசி, பால் மாவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தோம்.

மேலும், தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்குச் சிறப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்குடன் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் செலவில் 7,400 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் திறன்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

உக்ரைன் நாட்டில் போர் நடந்ததன் காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். உடனடியாக பத்திரமாக அவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் வீடுவரை கொண்டு சேர்த்தோம்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைவுகூர்ந்தார். 

வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம் - 

இணைப்புப் பாலம்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் அப்போதைய தி.மு.க. அரசால் இயற்றப்பட்டது. அவ்வகையில், தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் அரியணை ஏறியதும் `வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டது. அவ்வாரியத்தின்மூலம் ஏராளமான பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தாய்வீடு என்பது தமிழ்நாடுதான்,” என்றார்.

 “உலகம் முழுக்க வாழும் தமிழர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வரும் அமைப்பாக அவ்வாரியம் அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுத்துவோம். தாய்த்தமிழ்நாட்டையும் அயலகத் தமிழர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக, அவ்வாரியம் செயல்படும். தமிழ்மொழி, தமிழிசை, நாட்டியம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் பணியையும் அந்த வாரியம் செய்யும்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சவாலான காலகட்டம்!

பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. அரசு என்னென்ன சவால்களைக் கடந்து வந்துள்ளது, இனி எத்தகைய சவால்களை எதிர்நோக்குகிறது என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரிவாகக் கூறினார்.

"உண்மையில் இது சவாலான காலம்தான். பூக்கள் நிறைந்த அழகிய சாலையில் நான் பயணம் செய்யவில்லை. முற்றிலும் பாழ்படுத்தப்பட்ட சாலையில் குண்டும் குழியும் மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் ஆணியும் கொண்ட சாலையில் பயணம் செய்வதைப் போலத்தான் முதல் சில மாதங்கள் இருந்தன.

 “தமிழ்நாடு அரசுக்கு 500,000 கோடி ரூபாய் கடன் என்றதொரு கடினமான சூழலில்தான் முதலமைச்சராக நான் பதவியேற்றேன். அந்த நேரத்தில் கரோனா இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி இருந்தது. அப்பேரிடரிலிருந்து மக்களைக் காப்பதே முதல் கடமையாக இருந்தது.

 “அதனைச் சரியாக நிறைவேற்றி, அதன் பிறகு தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சவாலான பணியை மேற்கொள்ளத் தொடங்கினோம். நிதி நிலைமை ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்திருக்கிறோம். உற்பத்தி பெருகி உள்ளது. புதிய நிறுவனங்கள் வந்துள்ளன. வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இருப்பினும், நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது.

“என்னைப் பொறுத்தவரை, இவற்றையெல்லாம் சவால்களாக நினைக்கவில்லை. பொதுவாழ்க்கையில், அரசு நிர்வாகத்தில் இவற்றை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

 "எதிர்மறையாகப் பேசி காரணங்களைத் தேடுவதைவிட, நேர்மறையாகச் சிந்தித்து சாதனைகளைச் செய்வதையே நான் விரும்புகிறேன். அப்படித் தான் செயல்பட்டு வருகிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார். 

தமிழர் நலனே முக்கியம்!

 'தமிழ்நாட்டில் இப்போது வடஇந்தியர்கள் பெருகிவிட்டனர். சிறுநகரங்களிலும்கூட அவர்களை அதிகம் காண முடிகிறது. அவர்கள் இல்லையேல் தொழிற்சாலைகள் முடங்கிப் போகும்' என்ற நிலை இருப்பதாக தமிழ்நாடு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனையடுத்து, வடஇந்தியர்களின் வருகை அதிகரிப்பால் தமிழ்நாட்டிற்கு நன்மையா தீமையா என்று 'தமிழ் முரசு’ கேட்டது. அதற்கு, "தமிழ்நாடு வளர்ந்த, வள மிக்க மாநிலமாக இருப்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காகத் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள், அவ்வளவுதான்! இது தமிழ்நாட் டுக்கு நன்மையே தவிர தீமையன்று. அதற்காக மற்றவர்களது வேலை வாய்ப்பை அவர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

“எங்களைப் பொறுத்தவரை, தமிழர் நலனும் தமிழ்நாட்டின் மேன்மையுமே முக்கியம். அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். தமிழ் கட்டாயம், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்," என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்தார்.

சொத்து வரி உயர்வு!

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்துச் சிங்கப்பூரில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் சிலர் கவலை தெரிவித்து இருப்பது குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, இந்திய அரசின் 15 ஆவது நிதி ஆணையம் அறிவித்த வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் சொத்து வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார். “மாநில அரசின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது,” என்று அவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் சொத்து வரியானது, இந்தியாவின் மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார். 

மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களைக் காட்டிலும் சென்னையில் சொத்து வரி குறைவு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்துவரி உயர்வு என்பது 83 விழுக்காடு வீடுகளுக்கு மிகக் குறைவான அளவில்தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார். 

கொள்கை உரமும் தொண்டர் படையும்! 

அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடப்பது தி.மு.க.விற்குச் சாதகமா எனக் கேட்டதற்கு, "அ.தி.மு.க. இப்போது நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அவர்களது பலவீனத்தை நாங்கள் அரசியல் செய்வதில்லை. எங்களது கொள்கைகளையும் தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம்,” என்று அவர் தெரிவித்தார். 

அத்துடன், கலைஞர் காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டு சேர வாய்ப்பில்லை என்ற அவர், வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பா.ஜ.க.விற்கும் இன்றைய பா.ஜ..கவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்றும் குறிப்பிட்டார். 

மேலும், அமைச்சராக தம் மகன் உதயநிதியின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருப்பதாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

'தமிழ் முரசு' யோசனைக்கு முதலமைச்சர் வரவேற்பு!

‘உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளை அங்கீகரித்து சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க வாய்ப்பு இருக்கிறதா” என்று கேட்டதற்கு, "நல்ல யோசனை. உறுதியாகச் செய்யலாம்,” என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அத்துடன், முன்னைய தி.மு.க. ஆட்சியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியதுபோல, இம்முறையும் அதற்கான திட்டம் உண்டு என்றும், அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும் என்றும் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment