புற்றுநோயாளிகளுக்கு உதவும் இளைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

புற்றுநோயாளிகளுக்கு உதவும் இளைஞர்

“கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமே என் நோக்கம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களையும் உதவ விரும்புபவர்களையும் ஒன்றிணைப்பது தான் என் பிரதான நோக்கம்” என்று சொல்கிறார் புற்று நோயால் தன் மனைவியை இழந்த வருண் விஜயபிரசாத்.

சென்னையை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் வருண் விஜயபிரசாத். இவருடைய மனைவி டிஸ்மி மேத்யூ கடந்த 2022இல் மூளை புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். மனைவியை இழந்த மன அழுத்தத்திலிருந்து மீள முடியாமல் தவித்த வருண், தற்போது மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு அவருடைய மன நலத்தை மட்டும் காப்பாற்றவில்லை; புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ள சிலரின் உடல் நலத்தையும் காப்பாற்றி வருகிறது.

“கேன்சர் நோய் என்பதே கொடியது. அதிலும் மூளை கேன்சர் மிக மோசமானது. அதை கண் எதிரே பார்த்தவன் நான். நினை வுகள் மங்கும். தலை நொறுங்குவது போல் வலிக்கும். உடல் செயல்பாடுகள் ஒவ்வொன் றாக குலையும். பாதிக்கப்பட்ட என் மனைவி டிஸ்மி அடிக்கடி கூறியவை இவை.

நாம் விரும்புபவர்கள் நோய்வாய்ப்படும் போது, நிச்சயம் அவர்களை குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கைதான் நமக்கு ஆறுதல் தரும். ஆனால் அப்படி கூட என்னை ஆறுதல் படுத்திக்கொள்ள முடிய வில்லை.  நான் என் மனைவியை இழந்தேன். வாழ்வின் மீதிருந்த மொத்த பற்றையும் இழந்து தீராத மன அழுத்தத்தில் முடங்கி விட்டேன்.

மூளை கேன்சர் என்பது இத்தனை கொடியது. என் மனைவிக்கு இருந்தது குணப்படுத்த முடியாத கேன்சர். ஆனால் இங்கு எத்தனையோ பேர் குணப்படுத்தக் கூடிய கேன்சருக்கு கூட பொருளாதார சூழ்நிலை காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். என் மனைவி சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவமனையில் பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பலர் சிகிச்சையைக் கைவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அப் படிப்பட்டவர்களை பார்ப்பது என் மனதை உறுத்தியது. மற்றொரு பக்கம், என் மனைவி யைக் காப்பாற்ற முடியாத சோகம் என்னை வாழவிடவில்லை.

என் வாழ்க்கைக்கு மீண்டும் அர்த்தம் கிடைத்தது

அப்போது முடிவு செய்தேன், சிகிச் சைக்கு பணமின்றி தவிக்கும் கேன்சர் நோயாளிகளுக்கு என்னால் முடிந்தவரை உதவ தீர்மானித்தேன். எங்களுடைய வருங் கால கனவுகளுக்காக நானும் என் மனை வியும் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு உதவத் தொடங்கினேன். 

நான் உதவியவர்கள் என்னிடம் நன்றி கூறியது என் வாழ்விற்கு மீண்டும் ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது போல் இருந்தது. என் மன அழுத்தம் குறைவதை உணர்ந் தேன். இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்போது என்னுள் ஊன்றிவிட்டது. கேன்சர் சிகிச்சைக்கு உதவி வேண்டுவோர் நம் நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். இப்போது எனக்கு இருக்கும் ஒரே நோக்கம், உதவ விரும்புவோர்களைக் கண்டறிந்து உதவி வேண்டுபவர்களுடன் இணைக்க அறக்கட்டளை ஒன்றை உருவாக் குவது தான். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கேன்சர் நோயாளிகளிக்கு இதன் மூலம் உதவ வேண்டும் என்பது தான் தற்போது என் வாழ்விற்கு நான் கொடுத்துக் கொள்ளும் கடமை.

என் மனைவியை இழந்த பின் பற்றற்று வாழ்ந்து கொண்டிருந்த நான், இப்போது செய்யும் உதவிகள் மூலம் என் வாழ்வை அர்த்தம் கொண்டதாக உணர்கிறேன். நான் சம்பாதித்ததை எல்லாம் என் மனைவியிடம் கொடுத்து வந்ததை போல், இனி சம்பாதிப் பதை எல்லாம் இந்த முன்னெடுப்பில் விதைக்க போகிறேன். அனைவரையும் என்னால் காப்பாற்ற முடியாது. ஆனால் என்னால் யாரோ ஒரு கேன்சர் நோயாளி ஓராண்டாவது அதிகம் வாழ முடிந்தால், அதனால் அவருடைய குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை அவரால் செய்ய முடிந்தால், அதை கண்டு என் மனைவி எங்கிருந்தோ மகிழ்ச்சியடைவாள் என்று நம்புகிறேன். வாழ்க்கையின் நோக்கம் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டி ருந்த எனக்கு, இந்த லட்சியம்தான் நான் அடைய வேண்டிய கரையைக் காட்டி யுள்ளது. என் காதல் என்னை கரை சேர்க்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment