எதிலும் 40 விழுக்காடு கமிசன் வாங்கிய பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

எதிலும் 40 விழுக்காடு கமிசன் வாங்கிய பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா?

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி

பெங்களூரு, ஏப்.29  எதிலும் 40 விழுக் காடு கமிசன் வாங்கிய  பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா? என்று கருநாடகா  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கருநாடக சட்டசபை தேர்தலை யொட்டி அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மாநிலத் தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று கலபுரகி, கொப் பல், பல்லாரி மாவட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். கலபுரகி மாவட்டம் ஜேவர்கி யில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- 

கருநாடகத்தில் பா.ஜனதாவின் ஊழல் ஆட்சி நடக்கிறது. இது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு அல்ல. நமது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தனர். கருநாடகத்தில் அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் 40 சதவீத ஊழலை செய்துள்ளனர். அதனால் தான் கருநாடக பாரதீய ஜனதா அரசை 40 சதவீத ஊழல் அரசு என்று அனைவரும் அழைக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் சங் கத்தினர் பாரதீய ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால், பிரதமர் மோடி இதுவரை இதுகுறித்து பேசவில்லை. அதனால் கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. பாரதீய ஜனதாவினருக்கு 40 மிகவும் விருப்பமான எண். கருநாடக மக்கள் இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வெறும் 40 இடங் களை மட்டுமே வழங்குவார்கள்.

இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறும். கருநாட கத்தில் பாரதீய ஜனதா அரசு மக்களின் பணத்தை கொள்ளையடித்து உள்ளது. அய்தராபாத் கருநாடக பகுதியின் வளர்ச் சிக்கு அரசியல் சாசன சிறப்புத் தகுதி வழங்குமாறு அப்போதைய பாரதீய ஜனதா அரசிடம் கேட்கப்பட்டது. அதை துணைப் பிரதமராக இருந்த அத்வானி நிராகரித்து விட்டார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப் பட்டு அய்தராபாத்-கருநாடக பகுதிக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த பகுதியின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப் பட்டன. இதன் மூலம் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் உரு வாகினர். இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்தான் காரணம். இந்தத் தேர்த லில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாரதீய ஜனதா வெற்றி பெற்றால், அது 40 சதவீத கமிஷனை மீண்டும் அனுமதித்தது போல் ஆகி விடும். அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்க வேண்டும். 

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

No comments:

Post a Comment