இன்று நினைவு நாள் (28.4.1925) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

இன்று நினைவு நாள் (28.4.1925)

சிறீமான் பி.தியாகராயர் மரணம்

பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கி வந்த சிறீமான் பி. தியாகராயர் அவர்கள் 28.4.1925 இரவு 9.45 மணிக்கு உயிர் நீத்த  செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகிறோம். இச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் பெருந் துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் அய்யமில்லை. அவரது இடது கன்னத்தில் முளைத்த ஒரு சிறு கொப்புளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலை! அரசியல் உலகில் எமக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம், தென்துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும், அப்பெரியாரின் அருங்குணங்களையும், அளவில்லா தேசபக்தி யையும், ஆற்றலையும் நாம் போற்றுகிறோம். ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கைகளை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின சிறீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களை மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்தபோது, சிறீமான் முதலியாரை விளித்து “நண்பனே! நேற்று கடற் கரையில் நீ என்னை வாய்மொழிகளால் கண்டித்தது போதாது. இக்கழி கொண்டு என்னைப் புடைத் திருத்தல் வேண்டும்” என்று தமது கையிலிருந்த கழியை சிறீமான் முதலியாரிடம் கொடுத்தனராம். அரசியல் கொள்கையில் தம்மினும் வேறுபட்டாரிடம் இப்பெருந்தகையார் நடந்து கொண்ட பெருந் தன்மையைப் பாராட்டுகிறோம்.

சென்னை நகர பரிபாலன சபையில் நாற்ப தாண்டுகள் அங்கத்தினராக அமர்ந்து இவர் ஆற்றிய அருந்தொண்டுகள் யாவராலும் மறக்கற்பாலதல்ல. தமது முதுமையிலும், உடல்வலி குன்றித் தளர்வெய்திய காலத்திலும் நகர மாந்தர் நலத்தையே மனத்துள் கொண்டு சென்னை நகர பரிபாலன சபையின் தலைமையேற்று உழைத்து வந்தமையே இதற்கு தக்க சான்றாகும்.

நமது நாட்டுப் பண்டைக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதில் மிக்க ஊக்கங் காட்டி வந்த பெரியார் ஆவார். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச்சங்கம் ஒன்று கண்டு அதில் முதன் முதலாக விசைத்தறியை (திறீஹ் sலீuttறீமீ) உபயோகிக்க முயற்சி செய்தவராவார். தமது வாழ்நாள் முழுவதும் வைதிக நெறி பற்றியே வாழ்ந்து வந்தார் என்றும், ஆலயத் திருப்பணிகளில் ஆர்வமிக்குடையராய் அரும் பொருள் உதவி வந்தனரென்றும் அவரையும், அவரது குடும்பத்தையும் அறிந்தோர் நமக்கறிவிக் கின்றனர்.

தமது இளவயதில் டாக்டர் நாயர் அவர்களின் கூட்டுறவு பெறும் வரையில் காங்கிரசுவாதியாகவே இருந்து தேசத் தொண்டு ஆற்றி வந்தார். நமது தமிழ்நாட்டுத் தவப்பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். இறக்கும் வரையில் அதன் தலைவராக விளங்கி வந்தார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழிநின்று தேசத் தொண்டாற்றி வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எமது கொள்கை. அதுகிடக்க, அவரது அரசியல் கொள்கைகளையும், முறைகளையும் ஆராய்ச்சி செய்வதற்காக நாம் இன்று முற்படவில்லை; அவைகளைக் கண்டித் தெழுதவும் கருதவில்லை.

அப்பெரியாரின் அரசியல் கொள்கைகள் எவ்வித மிருப்பினும், அவருடைய தேசபக்தியையும், அருங் குணங்களையும், உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லா தார்களை உயிர்ப்பிக்கச் செய்த பேராற்றலையும் நாம் போற்றி அப்பெரியாரைத் தமிழ்நாடு இழக்க நேர்ந்தமைக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவரது புதல்வருக்கும், புதல்விகளுக்கும், மனைவிக்கும் எமது அனுதாபத்தை இதன் வாயிலாக அறிவித்துக் கொள்ளுகிறோம்.  

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 02.05.1925 


No comments:

Post a Comment