அறந்தாங்கி பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் முக்கிய அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

அறந்தாங்கி பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் முக்கிய அறிவிப்பு!

 ஏப்ரல் 7 ஆம் தேதி ஜெகதா பட்டினத்தில் “மீனவர் நல பாதுகாப்பு மாநாடு!”

தேவைப்பட்டால் போராட்டமும் நடத்துவோம்!

புதுக்கோட்டை, மார்ச் 1- ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் தேவை’ என்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான மூன்று பிரச்சினைகளை மய்யப்படுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார்.

பேராவூரணியில் தமிழர் தலைவர்!

பேராவூரணி காந்தி பூங்கா அருகில்,28-02-2023 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத் திற்கு மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித் தார். மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட தலைவர் பெ.வீரையன், மண்டல தலைவர் மு.அய்யனார், பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். நிறை வாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட இயக்கம்!

ஆசிரியர், “நாளை (1-3-2023) 70ஆம் பிறந்தநாள் காணு கின்ற நமது ஒப்பற்ற; முதல்வர்களில் முதல்வர் என்ற பெயர் பெற்ற நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அன்றாடம் சாதனைக்கு மேல் சாதனை செய்வது எதற்காக என்பதைப் பற்றி விளக்கிச் சொல்வதற் காகத்தான் இந்த பயணம்” என்று தொடங்கினார். “இந்தக் கூட்டம் மூன்றாம் கட்டத்தின் கடைசிக் கூட்டம் என்பதையும், 23 நாட்கள்; 44 கூட்டங்கள் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்” என்று இந்த சுற்றுப்பயணம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதையும், சிறு இடைவெளி விட்டு மறுபடியும் நான்காம் கட்டமாக தஞ்சை மண்டலத்தில் பயணம் தொடங்கும்” என்றார். மேடையில் இருந்தவர்களும், மக்களும் வியந்து போய் ஆதரித்து கைதட்டினர். தொடர்ந்து, நூறாண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் எதிர்நீச்சல் அடித்து இன்று ஒரு சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது. அதைத்தான் நாம் இப்போது ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்” என்றார். மக்கள் பலமாக கைகளைத் தட்டி ஆசிரியர் சொன்ன கூற்றை ஆமோதித்தனர். திராவிட மாடல் பற்றி பேசும் போது இயல்பாக ஆரிய மாடல் பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதாவது, மோடியின் குஜராத் மாடல் எப்படிப்பட்டது என்று விளக்கி அதன் ஆபத்தை எளிய முறையில் விவரித்தார்.

தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் யார்?

மேலும் அவர், “நூறாண்டுகளுக்கு முன்னால் சமுதாயத் தையே மாற்றிப் போடுவதற்காக தொடங்கப்பட்டது இந்த இயக்கம்” என்று முன்னோட்டமாகச் சொல்லிவிட்டு, ”திராவிடர் இயக்கம் ஏன் பிறந்தது?” என்ற கேள்வியைக் கேட்டு, “அரசியலுக்காக அல்ல, ஆட்சி அதிகாரம் இல்லாத வெள்ளைக்காரர்கள் ஆண்டபோதே உரிமைக்குரல் எழுப்பு வதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது” என்றும் “வர லாற்று பெருமை மிக்க இனத்தின் சிறப்புகள் ஆக்கிரமிக்கப் பட்டதை எதிர்த்து பண்பாட்டுத் தளத்தில் அறிவெனும் ஆயுதத்துடன் இயங்கிய இயக்கம் திராவிடர் இயக்கம்” என்றும் பதில் சொன்னார். அந்த அறிவு இயக்கம் எப்படி இயங்கியது என்பதை, “தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் தான்! அந்த பேராசிரியரின் வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு மேலும் நடக்கும்” என்று அறிஞர் அண்ணா சொன்னதை எடுத்துக் காட்டுக்கு பயன்படுத்தினார். மக்களுக்கு ஆசிரியர் சொல்ல வந்த கருத்து இந்த ஒரு எடுத்துக்காட்டிலேயே புரிந்துவிட்டது. “இன்று நாம் பெற்றிருக்கும் வெற்றி, ஒரு துளி ரத்தம் சிந்தாமல் பெற்றிருக்கிருக்கிறோம்” என்று அடுத்தடுத்து மக்களுக்கு வியப்பைக் கூட்டினார். மக்களும் தொடர்ந்து கைதட்டிய வண்ணமே இருந்தனர். தொடர்ந்து பாலியல் உரிமையில் திராவிடர் இயக்கத்தின் பங்கு என்ன என்பதை, கலைஞர் தொடங்கி இன்றைய மு.க.ஸ்டாலின் வரை விவரித்தார். ஆனால் வடக்கில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகி கங்கையில் போட்ட கொடூரத்தை வேதனையுடன் சொல்லி, அதுதான் சனாதனம்” என்று அழுத்தமாகச் சொன்னார். மேலும் அவர், பசு அரசியல், சேது சமுத்திரத் திட்டம் ஆகி யவை பற்றி விளக்கமாகப் பேசி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அ.அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், தி.மு.க.பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,

மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர்,  தி.மு.க.சேது வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து மாணிக்கம், பேராவூரணி தி.மு.க.வடக்கு ஒன்றிய செயலாளர் இளங் கோவன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிர மணியன், சி.பி.அய். மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாலசுந்தரம், சி.பி.எம்.மாவட்ட துணை தலைவர் கருப்பையா, தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜுதீன், தி.மு.க.பேராவூரணி பேரூர் கழக செயலாளர் இராமநாதன், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் இப்ராஹிம், த.வா.க.மாவட்ட செயலாளர் பஷீர் அகமது, ப.க.மாவட்ட செயலாளர் புலவஞ்சி காமராஜ், வி.தொ.அணி மாவட்ட அமைப்பாளர் பழ.வேதா சலம், மதுரை புறநகர் மாவட்ட ப.க.தலைவர் பால்ராசு, மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் இராஜவேல், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, பட்டுக் கோட்டை நகர் தலைவர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை நகர் செயலாளர் தென்னவன், சேது ஒன்றிய ஜெகநாதன் பேராவூ ரணி ஒன்றிய கழக தலைவர் தமிழ்ச்செல்வன், கழக பேரூர் கழக செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன் நன்றி கூறினார்.

அறந்தாங்கியில் தமிழர் தலைவர்!

அறந்தாங்கி வ.உ.சி.திடலில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கறம்பக்குடி முத்து, மாநில இளைஞரணி துணை செயலாளர் ச.குமார், கழக சொற் பொழிவாளர் மாங்காடு மணியரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மண்டல இளைஞரணி செயலாளர் வீரையா, மாநில தொழி லாளர் அணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  

ஜெகதா பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு!

ஆசிரியர், ”உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள். எனக்கு ஆறு கால்கள். இரண்டு என்னுடையது; என்னை இரண்டு பக்கமும் தாங்குகின்ற இருவரின் கால்கள் நான்கு. ஆகவே ஆறுகால்கள்” என்று 1973 களில் ஒருபக்கம் மூத்திரச் சட்டியை கையில் பிடித்தபடியும்,  இருவரின் உதவியுடன் பெரியார் நடந்து வந்ததையும், “எல்லோருக்கும் இறப்பு பொதுவானது. அது எனக்கும் வரும். அதற்காக நான் வருத்தப்படவில்லை. உங்களையெல்லாம் சூத்திரனாக, பஞ்சமனாக விட்டுவிட்டு போகிறேனே” என்று வேதனைப்பட்டதையும் சொல்லி, ”எப்படிப்பட்ட மனித நேயம்” என்று வியந்தார். ஆசிரியரே வியந்தால் மற்றவர்களைக் கேட்கவேண்டுமா? வழக்கமாக இந்த சுற்றுப்பயணத்தில் அதிக நேரம் பேசுவதற்கு வாய்ப் பில்லை. ஆகவே புத்தகங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. வாங்கி பயன்பெறுங்கள் என்று சொல்வதை, இங்கும் நினைவு படுத்தினார். அதே போல் மக்களும், முக்கிய பிரமுகர்களும் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து சமூக நீதி பாதுகாப்பு ஏன் தேவை? திராவிட மாடல் எப்படிப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களை சமீபத்தில் வெளியான நாளிதழ்களில் அதுவும் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்களையே மேற்கோள்களாகக் காட்டி மக்களுக்கு புரிய வைத்தார். ஜாதி எப்படி சம தர்மத்திற்கு எதிராக இருக் கிறது; சனாதனம் என்றால் என்ன? அந்த சனாதனம் பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஆன்லைன் ரம்மியில் செய்திருக்கும் அரசியல் சட்ட விரோதம் எப்படிப்பட்டது? தொடர்ந்து பசு அரசியல், தீண்டாமை ஆகியவற்றை குறிப்பிட்டு சில விளக்கங்களை மக்கள் முன் எடுத்து வைத்தார். தொடர்ந்து மீனவர் பிரச்சனை குறித்து விரிவாக பேசினார். அதற்காக தமிழ்நாட்டின் முதல்வர் எடுத்துவருகிற நடவடிக்கைகள் என்னென்ன என்பதை எடுத்துரைத்தார். அதையொட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ”மீனவர் பிரச்சினை தீர மீனவர் நலத்துறை அமைச்சர் இன்னும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், மற்றவர்களை அழைத்து, வருகிற ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஜெகதா பட்டினத்தில் திராவிடர் கழகம் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டை நடத்தி அதில் ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். தேவைப் பட்டால் போராட்டம் நடத்தும் அறிவிப்பைக் கூட நாங்கள் வெளியிட தயாராக இருக்கிறோம். ” என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே அறிவித் தார். தொடர்ந்து மற்ற விசயங்களைப் பேசி விட்டு, வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்பதுடன் உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து திருச்சி ரயில் நிலையம் சென்று இரவு 12 மணிக்கு சென்னைக்கு ரயிலில் புறப்பட்டார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் சி.பி.அய். மாவட்ட செயலா ளர் த.செங்கோடன், சி.பி.எம். மாவட்ட செயலாளர் சீனி.கவிவர்மன், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் வீராச்சாமி, சி.பி.அய். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், வி.சி.க. நகர செயலாளர் மரிய அருள், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அ.அறிவொளி, ம.ம.க.மாநில துணை செயலாளர் கிரின் முகம்மது, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரையரசன் மகன் தாமரைச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர்கள் சிவப் பிரகாஷ், மகேஸ்வரி, சிறீ வித்யா, காசிநாதன், தாமரைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி.திராவிட மணி, காரைக்குடி மாவட்ட செயலாளர் கு.வைகறை, சி.பி.எம்.நகர செயலாளர் கணேசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வின்சென்ட் இராமையா, குப்பைக்குடி ஊராட்சி மன்ற தலை வர் இளங்கோ, ம.ம.க.நகர தலைவர் ஜக்ரியா, ம.ம.க. மாவட்ட துணை தலைவர் ஜலீல் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். முடிவில் ஒன்றிய தலைவர் சந்திரகுமார் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment