திருப்பூர். மார்ச் 12- புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்க்கண்ட் இளைஞரை திருப்பூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலியாக காட்சிப்பதிவுகளை பரப்பிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாகப் பேசும் வீடியோக்கள் (காட்சிப் பதிவுகள்) அண்மையில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தமிழ்நாட்டில், இந்தியாவின் பிற மாநிலங்களிலி ருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை, சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு தவறானது என்று மறுப்பு தெரிவித்தது.
இவ்வாறு பரவிய செய்தி வட மாநில தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் குழுவினர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான காட்சிப் பதிவுகள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி காட்சிப் பதிவுகளை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை திருப்பூர் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment