Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிற இதழிலிருந்து...
March 06, 2023 • Viduthalai

'தினமணி' ஏடே சொல்கிறது

நியாயமே இல்லை! 

சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த தலையங்கம்

மானியமல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,103-ஆக உயர்த்தப் பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதேபோல, வணிக பயன்பாட்டு உருளை விலை ரூ.350.50 அதிகரிக்கப்பட்டு ரூ. 2,119.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கும், பெட்ரோலியப் பொருள்கள் விலை நிர்ணயத்துக்கும் தொடர்பு கிடையாது என்கிற கூற்று நகைப்புக்குரியது.

ஒருபுறம் சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரிக்கப்படும்போது, இன்னொருபுறம் பன்னாட்டு சந்தையில் விலை குறைந்ததைத் தொடர்ந்து விமான எரிபொருளின் விலை 4% குறைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளையாக பெட்ரோல், டீசல் விலையில் 11 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அடுத்தாற்போல, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டால் வியப்படையவும் தேவையில்லை.

ஏதாவது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏற்படாமல் இருப்பதும், வாக்குப் பதிவு முடிந்தவுடன் விலைகள் அதிகரிக்கப்படுவதும் சொல்லி வைத்தாற் போல பலமுறை நிகழ்ந்துவிட்டன. பன்னாட்டு சந்தை கச்சா எண்ணெயின் நிலவரம் சார்ந்து பெட்ரோலியப் பொருள்களின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது என்கிற ஒன்றிய அரசின் வாதம் உண்மையாக இருக்குமானால், தேர்தல் தேதி அறிவிப்பும், வாக்குப் பதிவு முடிவும் அதனுடன் தொடர்புடையதாக இருப்பது எதனால் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு ஏற்கெனவே சாமானிய மக்களை சிரமத்துக்குள்ளாக்கி வரும் வேளையில், இப்போது சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீண்டெழு கின்ற மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயர்வை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதிக்குப் பிறகு சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது விலை உயர்வுக்கான காரணமாக இருக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ. 400 விலை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதமும், ஜூலை மாதமும் ரூ. 50 வீதம் அதிகரிக்கப்பட்டது. ஆண்டொன்றுக்கு 12 எரிவாயு உருளையோ, அதைவிடக் குறைவாகவோ பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்ட மானியம் சீரமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு உருளை விலையை அதிகரித்தபோது அதற்கு உக்ரைன் - ரஷ்யப் போர் காரணம் காட்டப்பட்டது. உக்ரைன் போரைத் தொடர்ந்து பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது என்னவோ உண்மை. அதனால், அந்த விலை உயர்வை நியாயப் படுத்தவும் முடிந்தது, மக்கள் ஏற்றுக்கொள்ளவும் தயா ரானார்கள். அப்படி அரசின் முடிவை ஏற்றுக்கொண்ட மக்களிடம் காட்டப்படும் வஞ்சனையாகத்தான் இப்போதைய விலை உயர்வைப் பார்க்க முடிகிறது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. பீப்பாய் 120 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 79 டாலர். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதைவிடக் குறைந்தவிலையில், வெளிநாட்டுச் செலாவணி பாதிப்பு இல்லாமல் ரஷ்யாவிலிருந்து இந்திய ரூபாய் மாற்று முறையில் இறக்குமதி செய்கிறார்கள். அதன் மூலம் மிகப் பெரிய லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், பிற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றன.

கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இப் போதும் அதேபோலத் தொடர்கிறது. கச்சா எண்ணெ யின் பன்னாட்டு சந்தை விலையின் அடிப்படையில் நியாயமாகப் பார்த்தால் பெட்ரோல், டீசலுக்கு விலையைக் குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக இப்போது சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருக்கிறார்கள். அடுத்தாற்போல பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்துவார்களோ என்னவோ?

2020-இல் சமையல் எரிவாயு விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ரூ. 594-அய் எட்டியபோது, மானியத்தை ஒன்றிய அரசு சீரமைத்தது. சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரித்தபோது, முன்பு அளிக்கப்பட்ட மானியம் மீண்டும் வழங்கப்பட வில்லை. மானியத்தை சீரமைத்ததால் 2020-2021 நிதி யாண்டில் ஒன்றிய அரசு அடைந்த லாபம் ரூ.20,000 கோடி என்பதை நினைவுபடுத்தத் தோன்றுகிறது.

உஜ்வாலா திட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒன்பது கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு எரிவாயு உருளை ஒன்று ரூ. 200 வழங்கப்படுகிறது. அவர்களில் பலர் தொழிலோ வருமானமோ இல் லாதால் எரிவாயு உருளை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

அவர்களில் 92 லட்சம் குடும்பங்களில் ஒருமுறை கூட எரிவாயு உருளை வாங்கவில்லை என்றும், ஒரு கோடி குடும்பங்களில் ஒருமுறை மட்டும்தான் எரிவாயு உருளை வாங்கியதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவிக்கிறது. விலை மேலும் அதிகரிக்கும்போது இன்னும் பெரும்பாலோர் எரிவாயு உருளை வாங்குவதை நிறுத்திவிடுவார்கள்.

மின் கட்டண உயர்வும், எரிவாயு உருளை விலை உயர்வும் மக்களை மீண்டும் விறகு அடுப்புக்கும், கரி அடுப்புக்கும் விரட்டாமல் இருக்க வேண்டும்...

முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு அறிவிக்கப்பட்டபோது, இன்றைய ஆட்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும், ட்விட்டர் பதிவுகளையும் தயவு செய்து ஒருமுறை மீள்பார்வை பார்க்கவும்!

நன்றி: 'தினமணி' தலையங்கம், 6.3.2023


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn