அ.தி.மு.க. மூன்று அணியாக சிதறியது ஏன்? பா.ஜ.க.வே காரணம் -எழுச்சித் தமிழர் திருமாவளவன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

அ.தி.மு.க. மூன்று அணியாக சிதறியது ஏன்? பா.ஜ.க.வே காரணம் -எழுச்சித் தமிழர் திருமாவளவன் குற்றச்சாட்டு


சென்னை, பிப். 6-  நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருவதாக கூறி, அதைக் கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சித்தீக், சையத் அலி முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர், திருமுருகன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளாக ஒன்று சேர மறுக்கிறார்கள். அவர்களை ஓரணியில் திரள விடாமல் பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. அவர்களுக்கு எதிராக கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள். அ.தி.மு.க. தற்போது மூன்று அணியாக சிதறி கிடப்பதற்கு பா.ஜனதா தான் காரணம். பா.ஜ.க. தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அ.தி.மு.க.வாக இருந்து இருக்கும். பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்தனர். தற்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டுக் களமாக மாற்றுகின்றனர். அரசியல் ஆதாயத் துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள். அதற்குள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தவறினால் மீண்டும் 2024இல் ஆபத்து ஏற்படும் என கூறினார்.

No comments:

Post a Comment