படித்து அதன்படி நடந்தவர் பெரியார் ஒருவர்தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

படித்து அதன்படி நடந்தவர் பெரியார் ஒருவர்தான்

வடலூரில் சத்திய ஞானசபை 80 ஏக்கர் பெருவெளியில் அமைந்துள்ளது. இது நெய்வேலி - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து ஒரு பர்லாங் தூரம் உள்ளே சென்றால் ஞான சபையை அடைய முடியும். நெடுஞ்சாலையின் முகப்பில் ‘சத்திய ஞானசபை’ என்று எழுதப்பட்ட ஒரு கட்டட வளைவு உள்ளது. அந்த வளைவின் ஓரத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் நானும் எனது நண்பர் ஒருவரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வேன் எங்கள் அருகே வந்து நின்றது. நாங்கள் இருவரும் வேனுக்கு உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த் தோம். அப்போதுதான் தெரிந்தது. வேனுக்கு உள்ளே பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் அமர்ந்திருந்தார்.

எனது நண்பருக்கு தந்தை பெரியாரோடு நெருங்கிய தொடர்பு உண்டு. மாணவப் பருவத்தில் தந்தை பெரியாரோடு எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மாணவப் பருவத்துக்குப் பிறகுதான் வள்ளலார் மீதும், சன்மார்க்கத்தின் மீதும் பற்றுக் கொண்டு சந்நியாசத்தை ஏற்றேன்.

நண்பரும் நானும் தந்தை பெரியாருக்கு வணக்கம் சொன்னோம். அப்போது தந்தை பெரியார் அவர்கள், “வடலூர் ஞான சபையை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் நினைத்தேன். இப்பொழுதுதான் இந்தப் பக்கம் வர முடிந்தது; ஞான சபையை பார்த்து விடலாமே. நீங்கள் இருவரும் இப்பொழுதே வந்து எனக்கு ஞான சபையைக் காட்ட முடியுமா? என்று கேட்டார்.

நாங்களும் அய்யா அவர்களின் வேனிலேயே ஏறிக் கொண்டோம். உள்ளே ஒரு பர்லாங் தூரத்திற்கு வேன் பாதி தூரம் சென்றிருக்கும். உடனே பெரியார் வேனை அங்கேயே நிறுத்தும்படி கூறினார். அய்யா, ஞான சபை நுழைவு வாயில் வரை வேனிலேயே செல்லலாம் என்றோம். அதற்கு அய்யா அவர்கள் ‘வேண்டாம் நடந்தே போகலாம்’ என்று சொல்லிக் கொண்டே வேனை விட்டு கீழே இறங்க முயன்றார். எங்களுடைய வற்புறுத்தலின் பேரில் மீண்டும் வேனில் அமர்ந்தார். ஞான சபையின் நுழைவு வாயில் வரை வேன் சென்று நின்றது. நாங்கள் இறங்கி ‘வாருங்கள், அய்யா’ என்று அழைத்துக் கொண்டே முன்னே சென்றோம்.

ஞானசபையின் முன் வாசலைக் கடந்துதான் உள்ளே செல்ல வேண்டும். எத்தனையோ அமைச்சர்களையும், பிரமுகர் களையும், அதிகாரிகளையும் கோயில் நிர்வாகஸ்தர்கள் உள்ளே அழைத்துச் சென்றிருப்பார்கள். அதேபோல தந்தை பெரியார் அவர்களையும் உள்ளே வந்து ஜோதியை பார்க்கும்படி கேட்டோம். ஆனால், பெரியார் அவர்கள் எங்களை சைகையால் அழைத்து முன் வாசலில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாசகத்தைச் சுட்டிக் காட்டினார். அதில் ‘கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என்ற வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அதே சமயம் இதனை தர்மச் சாலையில் எழுதவில்லை.

நானும் நண்பரும் ‘அய்யா’ அவர்களை எவ்வளவோ வற்புறுத்தியும் உள்ளே வர மறுத்துவிட்டார். ‘இப்படி எழுதி வைத்துள்ள போது அதனை மீறி நடக்கலாமா?’ என்று கேட்டார். முன் வாசலிலேயே நின்றுகொண்டு சுற்றுப்புறத்தில் உள்ளவைகளைப் பார்த்தார். பிறகு அய்யா அவர்களை வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம்.

எத்தனையோ அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஞான சபைக்குள் வந்திருக்கிறார்கள். அங்கு எழுதி வைக்கப்பட்டிருக்கும் வாசகத்தைப் பார்த்தார்களோ, என்னவோ? ஆனால், அந்த வார்த்தைகளைப் படித்து அதன்படி நடந்தவர் தந்தை பெரியார் ஒருவர்தான்.

(சென்னை இராமலிங்கனார் பணி  மன்றத்தின் 20ஆவது ஆண்டு வள்ளலார் - காந்தியார் விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)

நன்றி: ‘இளந்தமிழன்’, ஜனவரி, பிப்ரவரி 1998

No comments:

Post a Comment