ஈரோடு கிழக்குத் தொகுதி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு, பிப். 5- ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதைய டுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிடம் அறிவிக்கப்பட்ட துடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். 3.2.2023 அன்று தேர்தல் அலுவலரிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியும் அமைச்சர் நேருவும் களத்தில் சிறப்பாக களப்பணி ஆற்றி வருவதுடன் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகின்றனர். மற்ற அமைச்சர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர். திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கைச்சின்னத்தில் வாக்களித்து ஆதரவை மக்கள் தருவார்கள் என நம்புகிறேன். நல்லதை செய்யத்தான் இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். அண்ணாமலைக்கு பதில் சொல்வது வேலை இல்லை. ஈரோடு மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று என் மகன் நினைத்தாரோ அந்தப் பட்டியல் பிரகாரம் எஞ்சியுள்ள பணிகளை நான் செய்ய கடமைப்பட்டுள்ளேன். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். பொதுமக்களும் மிகுந்த ஆதரவை தந்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment