தமிழ்நாடு - ஒடிசா விளையாட்டுத் துறை ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

தமிழ்நாடு - ஒடிசா விளையாட்டுத் துறை ஒப்பந்தம்

புவனேஸ்வர்,ஜன.22- தமிழ்நாடு, ஒடிசா மாநிலங் களுக்கு இடையில் விளையாட்டு, உள்கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெ ழுத்தானது. 

15-ஆவது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்பு களை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில்  ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது. இந்த ஒப்பந்தமானது,இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக்கொள்ள உதவும்.

இது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும். இதனால், உலகத் தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பன்னாட்டு விளையாட்டு அகாடமி கள் , விளையாட்டு கல்வி கூடங்கள், சிறப்பு மய்யங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் களை உருவாக்கிடவும், பன்னாட்டு விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும்.

இந்நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டர்கி, பொருளாளர் சேகர் மனோகரன், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை செயலர் வினில் கிருஷ்ணன், ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் மதிவதனன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் உடனிருந்தனர்.


இதுதான் கடவுள் சக்தியா?

சதுரகிரி கோவிலுக்குச் சென்ற பக்தர் மூச்சுத் திணறி மரணம்

விருதுநகர், ஜன.22 சதுரகிரி மலையேறிய கோவை கே.கே.புதூர் சாய்பாபா நகரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 48) என்ற பக்தர் திடீரென உயிரிழந்தார். 

 சதுரகிரி மலையில் இரட்டை லிங்கம் அருகே உள்ள வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு  மயங்கி விழுந்த  சிவக்குமார் மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்தார்.  கோவில் பகுதியில் இருந்த வனத்துறையினர்,  உடனடியாக சிவக்குமாரின் உடலை  அடிவாரத்துக்கு கொண்டு வந்து  பின்னர், மருத்துவ அவசர ஊர்தி மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து, சாப்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.


ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் 

காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு, ஜன.22 நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவரான மேனாள் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று (21.1.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்பு முரளி மனோகர் ஜோஷி, நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கூறினார். அதன்பிறகு ஒன்றிய அமைச்சராக இருந்த அனந்தகுமார் அதே கருத்தை தெரிவித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம், பிரிட்டிஷ் நாட்டை தழுவி எழுதப்பட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆங்கிலேயரின் அரசியல் சாசனத்தில் இட ஒதுக்கீடு என்ற அம்சம் உள்ளதா?. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்டு வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. பிற நாடுகளின் சில அம்சங்கள் மட்டுமே அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துகிறது. துணைத் குடியரசுத் தலைவர் நீதித்துறையை தாக்கிப் பேசினார். அதைத் தொடர்ந்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் நீதித்துறையை தாக்கி கருத்துகளை தெரிவிக்கிறார்.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஒன்றிய அரசு சொல்கிறது. இருட்டில் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை எங்கு பின்பற்றப்படுகிறது?. நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு எடுக்கும் குழுவில் அரசின் பிரதிநிதி இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு சொல்கிறது. இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கண்டிக்கிறது. நீதித்துறை மீதான தாக்குதலுக்கு எதிரான மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கருநாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அரசின் கொள்கையாக மாற்றப்பட்டு வருகின்றன. பா.ஜனதா ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அந்த மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், எப்போதாவது தங்கள் ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி இருக் கிறாரா?. இத்தகையவர்கள் காங்கிரசை குறை கூறினால் அதை நாங்கள் கண்டு கொள்ள வேண்டுமா?. இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.


No comments:

Post a Comment