கார்ப்பரேட்டுகளின் கரிசனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

கார்ப்பரேட்டுகளின் கரிசனம்

தேர்தல் பத்திரங்கள்மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடியாம்!

புதுடில்லி, ஜன.20-  தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறை யிட்டும்,  திட்டத்தை திருத்திய பா.ஜ.க. அரசு அதை மாற்றவில்லை. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நான்கு ஆண்டு களில் மட்டும் சுமார் 5 ஆயிரத்து 270 கோடி ரூபாயை, பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது. அதாவது, 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ. 9 ஆயிரத்து 208 கோடி யில், ரூ. 5 ஆயிரத்து 270 கோடி அல்லது 2022  வரை பெறப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் 57 சதவிகிதத்தை பாஜக பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, ஒன்றிய பாஜக அர சால் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, அங்கீகரிக்கப் பட்ட எஸ்பிஅய் (SBI) வங்கி கிளைகளில்,  

ரூ. ஆயிரம், 10 ஆயிரம், ஒரு லட்சம், 10 லட்சம்,  கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்தி ரங்கள் கிடைக்கும். தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுவ னங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். 

வெளிப்படைத் தன்மை இல்லை

ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெற லாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதி யாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணை யத்திடம் ஒப்படைக்க வேண் டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப் பிடப்பட்டு இருந்தது. இதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய  பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது.  தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும்  அது மாற்றப்படவில்லை. 

அதிக நிதியைப் பெற்ற பா.ஜ.க.

இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான கார்ப்பரேட் நிதியை பெற்றது,  பாஜகதான் என்ற தகவல் தற்போது வெளியாகி யுள்ளது. மார்ச் 2018-க்கும் 2022 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில் ரூ. 9 ஆயிரத்து 208  கோடியில் ரூ. 5 ஆயிரத்து 270 கோடி அல்லது  2022 வரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்தி ரங்களில் 57 சதவிகிதம் பாஜகவுக்கே சென்றுள்ளது. ஆனால், இதேகாலத்தில் பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரஸ், ரூ. 964 கோடி அல்லது 10 சதவிகி தத்தைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித் துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கி ரஸ் ரூ.767 கோடி அல்லது அனைத்து தேர்தல்  பத்திரங்களிலும் 8 சதவிகிதத்தை கைப்பற்றி யுள்ளது.

2021-2022 நிதியாண்டில் நன்கொடை

இதேபோல கடந்த 2021-2022 நிதியாண்டில் 8 தேசிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ. 3 ஆயி ரத்து 289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ள நிலையில், இதிலும் பாஜக மட்டும் 58 சதவிகிதத் தொகையை - அதாவது ரூ. 1,917  கோடியை நன் கொடையாக அள்ளியிருக்கிறது. 2020-2021  நிதி யாண்டில் பாஜக ரூ. 752 கோடியை நன்கொடை யாக பெற்றிருந்தது. இது 2021-2022 நிதியாண்டில் 15.4 சதவிகிதம் அதிகரித்து ரூ. 1,917 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ. 545.7 கோடி நன்கொடை ‘வசூலித்து’ திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய 2020-2021 நிதியாண்டில் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.74.4 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றிருந்த நிலையில், அது  ஒரே ஆண்டில் 63.3 சதவிகிதம் அதிகரித் துள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் அளவு கடந்த நிதியாண்டில் ரூ.285.7 கோடியிலி ருந்து 89 சதவிகிதம் உயர்ந்து ரூ.541.2 கோடியாக அதிகரித்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற நன் கொடை 2020-2021 இல் ரூ. 171 கோடியாக இருந்த  நிலையில் 2021-2022 இல் அது ரூ. 162.2 கோடியாக குறைந்துள்ளது. இத்தொகையில் பெரும்  பகுதி, நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மக்களிடம் உண்டியல் ஏந்தி பெற்ற காசுகள் ஆகும். மேலும் கட்சி ஆதர வாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள், சிறு, குறு  வணிகர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களிடம் நன்கொடை யாகப் பெற்ற கட்சி நிதியே ஆகும்.  சிபிஅய் பெற்ற நன்கொடை ரூ. 2.1 கோடியிலி ருந்து ரூ. 2.8 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி)  பெற்ற நன்கொடை வசூல் ரூ. 52.4 கோடியிலிருந்து ரூ.43.7 கோடியாக குறைந்துள்ளது.

செலவினத்திலும் 

முதலிடத்தில் பா.ஜ.க.

அதிக நன்கொடை பெற்றதைப் போலவே  கடந்த 2021-2022 நிதியாண்டில் ‘செலவினத்திலும்’ பாஜகவே முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி,  கடந்த நிதியாண்டில் ரூ. 854.46 கோடியை செலவு  செய்துள்ளது. காங்கிரஸ் ரூ. 400 கோடி, திரிணாமுல் ரூ. 268.3 கோடி, பிஎஸ்பி 85.1 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 83.41 கோடி, சிபிஅய்  1.2 கோடி, என்சிபி ரூ. 32.2 கோடி என செலவிட்டுள்ளன. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில் திமுக கடந்த நிதியாண்டில் ரூ. 318.7 கோடி  நன்கொடை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து  நவீன் பட் நாயக்கின் பிஜு ஜனதா தளம் ரூ.307.2 கோடி, கே. சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ. 279.4 கோடி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ. 93.7 கோடி என நன்கொடை திரட்டியுள்ளதாக தேர்தல் ஆணைய வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment