என்னே மனித நேயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

என்னே மனித நேயம்!

மூளைச்சாவு அடைந்த 1லு வயது குழந்தையின் உறுப்புகள் கொடைசென்னை, ஜன. 7- சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டன.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த இணையரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த மேசையின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 2ஆம் தேதி சென்னை ராஜீவ்காதி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் 5.1.2023 அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதையடுத்து, பெற்றோரின் அனுமதியுடன், குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் கொடை அளிக்கப்பட்டன.

கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன. முன்னதாக, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் உடலுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, மருத்துவமனை தலைமை மருத்துவர் தேரணிராஜன், கண்காணிப்பாளர் என்.கோபாலகிருஷ்ணன் மரியாதை அஞ்சலி செலுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையின் உறுப்புகள் கொடை பெறப்பட்டதே, இதுவரை மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராகக் கருதப்பட்டது. தற்போது 18 மாத குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளர் பட்டியலில் ஆந்திர மாநில குழந்தை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment