பெயரில் என்னதான் இருக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

பெயரில் என்னதான் இருக்கிறது?

தமிழர்களின் பெயர்களிலிருந்து அவர்கள் எந்த ஜாதிப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது - இது இன்றைய நிலை!

ஒரு 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன் பாக, தமிழர்களின் பெயர்களைக் கொண்டும் அவர்களின் ஜாதியை அறிந்து கொள்ள முடிந்தது . இந்த முற்போக்கான மாற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் !

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் முதல் சென்னை மாகாண மாநாடு - செங்கல் பட்டில் 1929ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் பல்வேறு முற்போக்கான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பெண்களுக்கு சொத்து ரிமை, கல்வி உரிமை, மதக்குறியீடுகளைத் தவிர்த்தல் இப்படி பல. 

குறிப்பாக, எல்லோரும் தங்களது பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டுமென்பது ! அந்த முற்போக் கான முடிவின் காரணமாகவே நமது பெயர் களில் இன்று ஜாதியில்லாமல் போனது !

தந்தை பெரியாரின் சீடராக அறிஞர் அண்ணா வந்து சேர்ந்த பின்பு, தமிழர்களின் பெயர்களில் தமிழ் சிறந்து விளங்க ஆரம்பித்தது. அன்பழகன், அறிவழகன், தமிழ்ச் செல்வன், தமிழ்ச் செல்வி, பூங்கொடி, பூங்கோதை... இப்படி பெயர்களில் ஜாதி நீங்கியதோடு சமஸ் கிருதமும் நீங்கியது!

குப்பன், சுப்பன், பிச்சை, கருப்பு, மொக்கை, பாவாடை போன்ற பெயர்களைக் கொண்டு ஜாதிகளை தெரிந்து கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் இருந்தது ..அவைகள் காணாமல் போனதற்கு பெரியாரின் சுயமரி யாதை இயக்கம் தானே காரணம்? நீதிமன்றங் களில் ஒருவனின் பெயரை வைத்தே அவனது ஜாதியை அறிந்து, அவனுக்கு தண்டனை அதற் கேற்றாற் போலத்தானே  வழங்கியிருப்பார்கள்?

 இது சம்பந்தமாக இன்றைய நிலையொன்றை - ஆங்கில இந்து நாளேட்டில் (08.12.2022) வெளியாகியுள்ள பெட்டி செய்தியை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்! 

' Did you get your job through reservation, asks HC Judge '...

இந்த தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் செய்தியை வெளியிட்டுள்ளது - (The Hindu - 8.12.2022)

பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு - பீகார் அரசு அதிகாரி ஒருவர் ஊழல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையொட்டி நடை பெறுகின்ற விசாரணை.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப் குமார் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்கிறார் - "உனக்கு இந்த வேலை இட ஒதுக்கீட்டின் காரணத்தால் கிடைத்ததா?" என்று. அதற்கு அவர் "ஆம்" என்கிறார்.

அதுகேட்ட நீதிபதி "நான் புரிந்து கொண் டேன் உனது பெயரை வைத்தே !".. என்கிறார் நக்கலாக ..

75 ஆண்டுகள் சுதந்திரம் கிடைத்து அமிர்த காலம் என பீற்றிக் கொண்டு அலையும் அதே வேளையில் - இன்றும் ஜாதிய அடையாளம் காட்டும் பெயரை மக்கள் சூட்டிக் கொள்வதும் -  இன்றும் 'உன் பெயரை வைத்தே நீ எந்த ஜாதி என்று கண்டு கொண்டேன்' என்ற ஆணவமும் நாட்டின் பல மாநிலங்களில் கொடி கட்டிப் பறக்கிறது !

உ.பியிலும் - பீகாரிலும் இன்றும் தாழ்த்தப் பட்ட மக்களை அடையாளம் கண்டு கொள்ளு மாறு தான் பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள் - ராம் என்று முடியுமாறு பெயர் வைக்கிறார்கள் (சோட்டு ராம், ஜெகஜீவன் ராம், ஆத்ம ராம், காலு ராம், லல்லு ராம் இப்படி பல) தாஸ் என்று முடியுமாறு (ராம் தாஸ், பகத் தாஸ், சந்தன் தாஸ், கபீர் தாஸ், சிவ் தாஸ் இப்படி பல)..

இது போன்று மாநிலத்திற்கு மாநிலம் குறிப் பிட்ட பெயர்களில் அடையாளம் தெரிந்து கொள்வது போலத்தான் பெயர் வைத்துள் ளார்கள்!

இந்த அவலங்களுக்கு மூல காரணம் மனுதர்மம் என்றால் நம்புவீர்களா? ஆம் ! இந்த நாட்டில் வாழும் இந்து மக்களின் அத்தனை அவலங்களுக்கும் மனுதர்மம் தான் அரிச் சுவடியும் அரணுமாகும் !

மனுதர்ம சாஸ்திரம் - இரண்டாவது அத்தி யாயம் - பாகம் 31 & 32  இங்கே இருக்கிறது அந்த அவலத்தின் ஆணிவேர்:

31)  " பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுவதற்கான பெயரை இட வேண் டியது" ..

32)  "பிராமணனுக்கு சர்மா என்பதை யும், சத்திரியனுக்கு வர்மா என்பதையும், வைசியனுக்கு பூதி என்பதையும், சூத்திர னுக்கு தாசன் என்பதையும் தொடர் பெயராக இட வேண்டியது" ...

இவ்வாறு பெயராலேயே அடையாளம் கண்டு கொள்வதற்கு, பெயரை வர்ணத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென மனு தர்மத்திலேயே எழுதி வைக்கப் பட்டுள்ளதால், அதில் மாற்றம் செய்ய பயந்து, இன்றும் பல மாநிலங்களில் அந்த வழக்கம் தொடர்ந்து கடைப் பிடிக்கப் படுகிறது!

தந்தை பெரியார் - ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்த காரணத்தால் இவைகளை ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டுள் ளார் என அறியும் போது வியப்பும் மகிழ்வும் ஏற்படுகின்றது!

நம்மையும், நம் பெயரையும் காப்பாற்றிய பெரியாரை மறந்து போனால் - நம் பெயர் யாருக்கும் தெரியாமலேயே மறைந்து போகும்!

- பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை

No comments:

Post a Comment