தமிழ் இசைச் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

தமிழ் இசைச் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

* எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும்;  இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும்

* மொழிதான் ஓர் இனத்தினுடைய இரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும்!

தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் 

ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.12.2022) சென்னையில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 80  ஆவது ஆண்டு விழாவில், இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் எஸ். சவுமியா, அவர்களுக்கு “இசைப்பேரறிஞர்” பட்டமும், மயிலை பா. சற்குருநாதன் ஓதுவார் அவர்களுக்கு “பண் இசைப்பேரறிஞர்” பட்டமும் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ் இசைச் சங்கத்தின் மதிப்பியல் செயலர் ஏ.சி. முத்தையா, தலைவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை, டிச.22 எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும். இது குறுகிய எண்ணம் கிடையாது. மொழி தான் ஓர் இனத்தினுடைய இரத்த ஓட்டம். மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும். எனவே தான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை!  அதனால் பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.12.2022) சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் இசைச் சங்க விழாவில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு  நீர்வளத்துறை அமைச்சர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரை முருகன் அவர்களே,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அருமை சகோதரர் பி.கே. சேகர் பாபு அவர்களே,

சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்களே,

தமிழ் இசைச் சங்கத்தின் மதிப்பியல் செயலாளர் ஏ.சி. முத்தையா அவர்களே,

வேதகி முத்தையா அவர்களே,

தலைவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்களே,

அறங்காவலர் வள்ளி அருண் அவர்களே,

தமிழ் இசைச் சங்கத்தின் அறங்காவலர்களே,

விருது பெற்றிருக்கக்கூடிய பண் இசைப்பேரறிஞர் பா. சற்குருநாதன் ஓதுவார் அவர்களே,

இசைப்பேரறிஞர் துணை வேந்தர் எஸ். சவுமியா அவர்களே,

மதிப்பிற்குரிய பத்மசிறீ சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட அன்புக்குரிய பெரியோர்களே,

இசை ஆர்வலர்களே,

ரசிகப் பெருமக்களே,

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையை சார்ந்திருக்கக் கூடிய நண்பர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே,

நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கத்தை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் இசைச் சங்கத்தின் எண்பதாம் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் நானும் பங்கெடுத்து, விருதுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தக்கூடிய, ஒருசில நிமிடம் உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்று உங்கள் முன்னால் நிற்கிறேன். வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைவருக்கும்  நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழிசை கொடிகட்டிப் பறப்பதற்குக் காரணம் தமிழிசைச் சங்கம்தான்!

தமிழ்நாட்டில் தமிழிசை இன்று இந்தளவுக்குக் கொடி கட்டிப் பறக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் இந்த தமிழிசைச் சங்கம்தான்.

அத்தகைய வரலாற்றுப் புகழ் பெற்ற, இந்த இராஜா அண்ணாமலை மன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன், உங்களிடத்திலே உரையாடிக் கொண்டு இருக்கிறேன். இந்த அரங்கம் இங்கே கம்பீரமாக நிற்கிறது என்றால், இது வெறும் கட்டடம் அல்ல, கலைச் சின்னமாக நின்று கொண்டு இருக்கிறது! இசைச்சின்னமாக நின்று கொண்டு இருக்கிறது! தமிழ் அடையாளமாக நின்று கொண்டு இருக்கிறது! இந்தக் கட்டடம்தான், தமிழி சையை கோட்டை கட்டிக் காத்த அரங்கம்! அப்படிப் பட்ட அரங்கத்தில், இன்றைக்கு நாமெல்லாம் மகிழ்ச்சி யோடு கூடி இருக்கிறோம்.

பல நூற்றாண்டு காலமாக, நம்முடைய தமிழ் நிலப் பரப்பு, பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு ஆளானது. அந்நியர் ஆக்கிரமிப்பால்,  தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. அந்நிய இனத்தவர் படையெடுப்பால், நமது இனம் அதனுடைய உரிமையை இழந்தது. அந்நிய மொழிக்காரர்களின் ஊடுருவல் காரணத்தால், தமிழ் புறக்கணிக்கப்பட்டது. ஆதிக்க வர்க்கத்தினரால், தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி  பல்வேறு  தாக்குதலால் தமிழ் நாடும் - தமிழினமும் - தமிழ் மொழியும் தாக்கு தலுக்கு உள்ளானது.

தமிழினத்தின் உரிமையைக் காக்க, 

திராவிட இயக்கம் எழுந்தது

இந்தச் சூழலில் தமிழினத்தின் உரிமையைக் காக்க, திராவிட இயக்கம் எழுந்தது.

தமிழ் மொழியைக் காக்க, மறைமலையடிகள் தலைமையில், தனித்தமிழ் இயக்கம் எழுந்தது.

தமிழ்க் கலையைக் காக்க, இந்தத் தமிழ் இசைச் சங்கம் எழுந்தது.

தனித்தமிழ் இயக்கமாக இருந்தாலும், தமிழிசை இயக்கமாக இருந்தாலும், அனைத்தையும் திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்துப் போற்றியது.

தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழ்ப் பாட்டைப் பாடுவது, கேவலம் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது. தமிழில் பாடினால், மேடை தீட்டாகிவிடும் என்று நினைத்தார்கள். தமிழை நீசபாஷை என்று பழித்தார்கள். தமிழ்நாட்டில், தமிழ் மேடைகளில், தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டி இருந்தது.

தந்தை பெரியாரின் கேள்வி

தமிழில் பாடச் சொல்லி, இசை மேடைகளில் திராவிட இயக்கத்தினர் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால் வேறு வழியில்லாமல், ஒரு பாட்டு பாடுவார்கள். அதற்கு 'துக்கடா' பாட்டு என்று பெயர். தமிழையே துக்கடா ஆக்கி வைத்திருந்தார்கள்.

"தமிழ் நீசபாஷையாக இருந்தால், தமிழன் கொடுக்கும் காசு நீசக்காசு ஆகாதா?" என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள்.

1936 ஆம் ஆண்டு, 'பண்டைத் தமிழிசை' குறித்து யாழ்நூலை இயற்றிய விபுலானந்தர் அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை, தந்தை பெரியார் தன்னுடைய 'விடுதலை' நாளிதழில் வெளியிட்டு பெருமைப்படுத்தினார். இதிலிருந்து இசை இயக்கம் என்பது அரசியல் முழக்கமாகவே மாறியது.

* மகாகவி பாரதியார்

* தமிழ்த்தாத்தா உ.வே.சா.

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

* மூதறிஞர் ராஜாஜி

* கல்கி கிருஷ்ணமூர்த்தி

* ரசிகமணி டி.கே.சி

* ஆர்.கே.சண்முகனார்

* அறிஞர் அண்ணா 

ஆகியோர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

மகத்தான பங்களிப்பைச் செய்தவர் 

அண்ணாமலை அரசர்

இதில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்தான், இந்த மன்றத்தின் வாசலில் கம்பீரமாக நிற்கிறாரே அண்ணா மலை அரசர் அவர்கள். தமிழிசைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அரசர் என்றால், தமிழி சையைக் காத்த அரசர் அவர். தமிழிசையை, அந்த தமிழிசை மேடையைக் காத்த அரசர் அவர். பிறமொழி படையெடுப்பைத் தடுத்த அரசர் அவர்.

அரசர் அண்ணாமலை அவர்கள் தமிழ் இசைச் சங்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 1940 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது 16 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். 

1943 ஆம் ஆண்டு தமிழிசைச் சங்கமாக அது உருவாக்கப்பட்டது. தமிழிசைச் சங்கத்திற்கு 1952 ஆம் ஆண்டு இந்த ராஜா அண்ணாமலை மன்றம் உருவானது. அதாவது நான் பிறப்பதற்கு முதலாண்டு, இன்றைக்கு நான் எண்பதாவது ஆண்டு விழாவில் வந்து பங்கெடுத்திருக்கிறேன்.

யாராலும் மறக்க முடியாது, 

மறைக்கவும் முடியாது!

இந்தத் தமிழிசை இயக்கத்தில், ராஜா அண்ணாமலை அவர்களின் குடும்பத்தின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது, மறைக்கவும் முடியாது!

* ராஜா சர் அண்ணாமலையாரைப் போலவே, அவருடைய புதல்வர்களான ராஜா சர் முத்தையா அவர்களும், எம்.ஏ.சிதம்பரம் அவர்களும் இசைக்குத் தொண்டு ஆற்றினார்கள்.

1938 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தபோது தாளமுத்து மரணம் அடைந்தார். அவரது உடலை இடுகாட்டுக்குத்  தனது தோளிலே தூக்கி வந்தவர்களில்  ஒருவர்தான் ராஜா சர் முத்தையா அவர்கள். இத்தகைய தமிழ்மொழிக் குடும் பம் தான் இது.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக வழங்கியவை 

மூன்று சொத்துகள்!

அதன்பிறகு இவர்களது வாரிசுகள், குடும்ப வாரிசுகளாக மட்டுமல்லாமல், இசை வாரிசுகளாகவும் செயல்பட்டார்கள். இம்மன்றத்தின் மதிப்புறு செயலா ளராக  இருக்கும் மரியாதைக்குரிய ஏ.சி.முத்தையா அவர்களும்,  தனது இசை வளர்க்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  மரியாதைக்குரிய எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும், இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்கள். இந்தக் குடும்பம் இந்தத் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக வழங்கியவை மூன்று சொத்துகள்!

* ஒன்று - கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கியது, சிதம் பரம் அண்ணாமலைப்    பல்கலைக்கழகம்!

* இரண்டு - தொழில், நிதி நிர்வாகத்துக்காக உரு வாக்கியது, இந்தியன் வங்கி!

* மூன்று - இசைக்காகத் தமிழிசை மன்றங்கள்!

இவை அனைத்தும் தகுதிநிறைந்த வாரிசுகளால், மிகச்சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன! இதனை இங்கே நினைவுறுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

2000 ஆம் ஆண்டில் மேயராக வந்தேன்; 

இன்று முதலமைச்சராக வந்துள்ளேன்

தமிழிசைச் சங்கத்தின் 55 ஆவது ஆண்டு விழாவில், அதாவது  1998 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 58 ஆவது ஆண்டு விழாவில், 2000 ஆம் ஆண்டில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் சென்னை மாநகரத்தினுடைய மேயராக. அப்போதும் இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் வாய்ப் பைப் பெற்றேன். இன்று முதலமைச்சராக வந்துள்ளேன்.

இது தமிழ் இசை மன்றம் என்பதால், தமிழிசையை நான் அதிகம் வலியுறுத்தத் தேவையில்லை. தொய் வில்லாமல் தொடருங்கள் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். அதைத்தான் நான் நினைவுப்படுத்துகிறேன்.

திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை!

சில நாள்களுக்கு முன்பு மியூசிக் அகாடமி ஹாலில் சொன்னதை இங்கே மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ''எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும். இது குறுகிய எண்ணம் கிடையாது. மொழி தான் ஓர் இனத்தினுடைய இரத்த ஓட்டம். மொழி அழிந்தால், இனமும் அழிந்து போகும். எனவேதான் தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை!  அதனால் பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

பிறமொழி மீதான வெறுப்பு அல்ல அது!

ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டு மானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை!''

அந்த வகையில் இதுபோன்ற தமிழிசை மன்றங்களின் பணி மிக மிக மிக மகத்தானதாக அமைந்திருக்கிறது.

ஒரு மன்றம் அல்ல, இது போல பல மன்றங்கள் தோன்ற வேண்டும். இசை மன்றங்கள், கலை மன்றங்கள், தமிழ் மன்றங்கள் உருவாக வேண்டும். அதற்கு மரியாதைக்குரிய நம்முடைய ஏ.சி.முத்தையா அவர்கள் தலைமையிலான தமிழிசை மன்றம் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டு இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் மீண்டும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மியூசிக் அகடாமி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் நிறைவாக பேசுகிறபோது சொன் னேன், ''முதலமைச்சராக பொறுப்பேற்று எவ்வளவு பணிகள் செய்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நான் நினைவுபடுத்த அவசியமில்லை. கரோனாவை சந்தித்தோம், புயலை சந்தித்தோம், மழையை சந்தித்தோம், வெள்ளத்தை சந்தித்தோம், இப்படி பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  ஆக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரே 'டென்ஷனாக' இருக்கக்கூடிய நேரத்தில் ஒரு மன அமைதி, ஒரு மன நிம்மதி இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் பெறுகிறேன்'' என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி  விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

No comments:

Post a Comment