தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சல்! எதிர்(ரி)க்கட்சி பற்றி முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சல்! எதிர்(ரி)க்கட்சி பற்றி முதலமைச்சர்

அரியலூர், நவ .30 தமிழ்நாடு அமைதி யாக இருக்கிறதே என்று சிலருக்கு வயிறு எரிகிறது. சட்டம்- _ ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் கொல்லா புரத்தில் அரசு விழா நேற்று (29.11.2022) நடைபெற்றது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

"இன்று இந்த விழாவில், அரியலூர் மாவட்டத்தில் ரூ.30.26 கோடி மதிப்பீட்டிலான 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளேன். ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இந்த மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.221 கோடி மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்திருக் கிறேன். ரூ.31.38 கோடி மதிப்பீட்டில் 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் அதிகம் செல்லும்போது மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் சேதமாவதை தடுப்பதற்காக சிமெண்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும்.

மக்கள் தொண்டை தவிர மாற்று சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக் கிறது. 10 ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதை உடனே நடத்திவிட முடியுமா என்ற மலைப்பு கூட எங் களுக்கு முதலில் இருந்தது. ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழ்நாட்டை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்துவிட்டோம் என்பதுதான் உண்மை. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநில மாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக் கிறது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டு தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும் கடந்த18 மாதங்களாக 8 கால் பாய்ச் சலில் முதலீடுகளை ஈர்த்து வருவது பெருமையாகும்.

இவை அனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தி.மு.க. அரசு நடத்திக் காட்டும் செயல்களாகும். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது, ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள் ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த கால ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்தபோது, கைகட்டி வேடிக்கை பார்த்து, தனது கையா லாகாத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் அவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள், பேட்டிகள் அளிக்கிறார்கள். அதை யெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கி றார்கள். 'உங்கள் யோக்கியதைதான் எங்களுக்கு தெரியுமே' என்று ஏளன மாக சிரிக்கிறார்கள்.

நாட்டில் சட்டம்- _ ஒழுங்கு கெட வில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். அய்யகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். அய்யோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக் கெல்லாம். "புலிக்கு பயந்தவன் என் மேல் படுத்துக்கோ" என்று சொல்வது போல சிலர் "ஆபத்து, ஆபத்து" என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி சொல்லும் சிலருக்கு, 'இருக்கும் பதவி நிலைக்குமா' என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறு கிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள்.

விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரை போல, உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக் கியதை இல்லை. தமிழ்நாடு இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளை யும், உயரத்தையும் அடையத்தான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைய என்னை ஒப் படைத்து கொண்டு நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment