பல்கலைக்கழக மானியக் குழுவின் கண்கள் திறக்குமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

பல்கலைக்கழக மானியக் குழுவின் கண்கள் திறக்குமா?

இராமாயணத்தைப் பற்றி  அறிஞர்கள் கருத்து என்ன?

(வேதம், இராமாயணம் முதலியவற்றைப் பற்றி கருத்தரங்கை நடத்திட ஆணை பிறப்பித்திருக் கிறது யூசிஜி - இவற்றின் யோக்கியதை என்ன? இதோ!)

இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர் களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும், பேரறிஞர் களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.

“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

(ரோமேஷ் சந்திர தத்தர் C .I.E.,I.C .S., எழுதிய ‘புராதன இந்தியா’ 52 ஆவது பக்கம்)

“திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.

(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் M.A., யின்  ‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’ 22 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள்மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.”

(பி.சிதம்பரம்பிள்ளை எழுதிய, ‘திராவிடரும் ஆரியரும்’  24 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பா ருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களையே குறிப்ப தாகும்.”

(ரோமேஷ் சந்திர தத்தர் எழுதிய, ‘பண்டைய இந்தியாவின் நாகரிகம்’ 139 - 141 ஆவது பக்கம்)

“தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

(‘சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்’ ‘இராமாயணம்’ என்னும் தலைப்பில் 587 - 589 ஆவது பக்கம்)

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடிமக்களிடமி ருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவ தற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்”

“தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடி மக்க ளுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.”

(1922 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ்  ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில்) 

பகைமைக்குக் காரணம்

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும். தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் காணலாம். “இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.”

(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 62 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால், ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாதார் நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராட்ட மாகும்.”

(ராதாகுமுத முக்கர்ஜி எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்)

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியாளர்களால் பேசப்படும் பாஷை”

(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டி-யில் இருக்கிறது)

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதா ருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன”

(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் -3 பக்கம் 10)

“தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள், ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தார்களானதால்”

(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய ‘தென்னிந்தியாவும் இந்தியக் கலையும்’  என்ற புத்தகத்தில் 3 ஆவது பக்கம்)

“இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.”

(பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’என்னும் புத்தகத்தில் 10 ஆவது பக்கம்)

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமி ருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”

(ஜோஷிட சந்தர் டட் எழுதிய ‘இந்தியா அன்றும், இன்றும்’ என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

அசுரர்கள் யார்?

“ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.”

“இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்து கொண்டே வந்தது.”

(ஏ.சி.தாஸ், M.A.B.L., எழுதிய ‘ரிக் வேதகாலத்து இந்தியா’ என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்)

“ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிடர் நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

(  C.S.சீனிவாசாச்சாரி, M.A.,M.S., ராமசாமி அய்யங்கார் வி.கி., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’ என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்)

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்குத் தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர் களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண் டார்கள்.”

(H.G. வெல்ஸ் எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்)

“ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரியர் சம்பந்தப்பட்ட வர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”

(New Age Encyolopaedia ‘நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா’ Vol. II  (1925) பக்கம் 273)

இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமே

“இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“மகாபாரதம், கங்கைநதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம், தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.”

(முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி தங்கள் இஷ்டம்போல், எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்தி கட்டுக் கதைகளை எழுதி வைத்துக்கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவை களாகும்.”

(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர்  1865 இல் எழுதிய ‘விரிவான இந்திய சரித்திர முதற் பாகம்’என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

“விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.”

(இ.பி. ஹரவெல் 1918 இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்)

“பாரத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களின் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென் னிந்தியாவை - திராவிட நாட்டைப்பற்றியேயாகும்.”

(G.H.  ராபின்சன்,  C.I.E.  - யால் எழுதப்பட்ட ‘இந்தியா’ என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்)

வட இந்திய திராவிடக் கலை

“வட இந்தியாவில் இருந்த திராவிடக்கலை, நாகரி கம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப் பட்டுவிட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை.”

(தமிழ்ப் பேராசிரியர் K.N.  சிவராஜபிள்ளை B.A., எழுதிய ‘பண்டைத் தமிழர்களின் வரலாறு’  என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்)

“பாரதத்தில் இடும்பி என்ற ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப்பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.”

(நாகேந்திரகோஷ் B.A.B.L.,  எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்’ என்ற புத்தகத்தின்  194 ஆவது பக்கத்தில் உள்ளது)

“இராமாயணத்தில் குடிகாரர்களைச் சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.”

(ஹென்றி ஸ்மித்வில்லியம் எல்.எல்.டி எழுதிய ‘சரித்திரக்காரர்களின்  உலக சரித்திரம்’ வால்யூம் 2 இல்,  பக்கம் 521)

“இந்தியாவில் தென்பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.”

(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்ட் எழுதிய  ‘இந்திய சரித்திரம்’ 14 ஆவது பக்கம்)

“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று, யாகம் செய்யும் வழக்கம் இருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்”

(‘இம்பீரியல் இந்தியன் கெஜட்’ 1909ஆம் வருடத்திய பதிப்பு, வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்)

ஆரியரல்லாதார் பட்டபாடு

“ஆரியரல்லாத இந்த நாட்டுப் பழங்குடிமக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும், ஆரியர்களும் ஆரியப் புரோகிதர் களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார் களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள் தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.”

(சர் வில்லியம் வில்சன்ஹண்டர் K.C.S.I.,C.I.E.,M.A.,   ஆக்ஸன்  L.L.D. எழுதிய ‘இந்திய மக்களின் சரித்திரம்’  என்னும் நூலின் 41 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன் மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.

(பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட ‘மலபார் குவாட்டர்லி ரிவ்யூ’ என்னும் புத்தகம்)

“நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை; ஒன்றையும் நம்புவ தில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக”

(“ரிக் வேதம்” அதிகாரம் 10, சுலோகம் 22-8)

“ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடு வதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதா ரங்கள் இருக்கின்றன.”

(ராகோசின் எழுதிய ‘வேதகால இந்தியா’ என்னும் புத்தகம்)

“இந்திய அய்ரோப்பியர்களால் அதாவது, ஆரியர் களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திரா விடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக் கின்றது.”

(பால்மாசின் அவர்செல் எழுதிய ‘புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)

“மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர் கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்ளைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலிய வைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.”

(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், G.C.M.G.K.C.E.,    1931 இல் எழுதிய ‘இந்தியாவில் அன்னியர்கள்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)

“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பவேயில்லை. “பஞ்சதந்திரம்”, “அராபியன் நைட்” முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.”

(பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள “டிஸ்கவரி  ஆஃப் இந்தியா” (Discoverey of india) பக்கம் 76 -77)

“இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.”

(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 82)

“ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசி யலாலும் மாறுபட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற் கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஆரியர் களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.”

(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 62)

“இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.”

(திரு. நீலகண்ட சாஸ்திரி)

“இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப் படையாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப்படையெடுப்பாளர் களுக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர, வேறல்ல.”

(சர்ஃபிரோஸ்கான்நூன், (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்) 1941 இல் எழுதிய “இந்தியா” என்ற புத்தகத்தில் பக்கம் 8)

“இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு ஜாதிப்பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, ஜாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராடவைத்து அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கிவைத்து, அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.”

(மறைமலையடிகள் “அறிவுரைக்கொத்து”)

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்”

(மறைமலையடிகள் “வேளாளர் நாகரிகம்” பக்கம் 61)

“ஆரியர் வழிவந்த பார்ப்பனர்கள், “கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார்” என்று பொய் யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டிவிட்டனர்.”

(மறைமலையடிகள் “கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” பக்கம் 32 - 34)

“இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசுரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரைக் குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை “தேவர்கள்” என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.”

(திரு.ஜே.எம். நல்லுசாமிப்பிள்ளை “இராமாயண உள்ளுறைப் பொருள்” என்ற நூலின் முன்னுரையில்)

“மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ (allegory)   சரித் திரமோ அல்ல; கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்”

(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் பக்கம் 34)

“புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதிகூலராயு மிருந்த திராவிடர் பெருஞ்சாதி வகுப் பினரை ஆரியக்கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும், இழித்துக் கூறியது அவர்களுக்குரிய ஜாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி, மற்றொன்றையும் குறிப்பதன்று.”

(வெ.ப.சுப்ரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய “இராமாயண  உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்” பக்கம் 19)

“இராமாயணம் கட்டுக்கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலைசிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாக வும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்த தைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.”

(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய  ‘இராவணப் பெரியார்’ பக்கம் 78)

“மகாபாரதத்தில் இருப்பதுபோலவே, இராமாயணத் திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண் டிலும் சரித்திரம் சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.”

(ஆர்.சி.தத், ‘பழைய இந்து நாகரிகம்’ பக்கம் 138)

“அண்ணனைக் காட்டிக்கொடுத்துவிட்டுப் பட்டத் தைப்பெறும் தம்பியைப் பக்தன் என்று சொல்ல முடியுமா? பத்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோ தரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.

“விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே, தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத்துரோகிகள் ஆகி விட்டார்கள்.”

(வ.ரா. எழுதிய “கோதைத் தீவு” பக்கம் 24, 25)

“புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல; இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாக. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே”

(திரு. முன்ஷி எழுதிய ‘இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும்’ பக்கம் 8)

இந்தப் புராண இதிகாச குப்பைகளை, கற்பனைப் படைப்புகளைப் பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்கிறது யூசிஜி - வெட்கக்கேடு அல்லவா?


No comments:

Post a Comment