தி.மு.க.வின் துவக்க கால மாணவர் தலை வராக - ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் உள் பட பல போராட்டங்களில் ஈடு பட்டவரும், பாரம்பரிய திராவிடர் இயக்கத்தின் குடும்பங்களில் ஒன்றாக இருந்தவருமான திருவாரூர் தோழர் வழக்குரைஞர் ஜின்னா (வயது 81) அவர்கள் நேற்று (13.11.2022) திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் - என்ற அதிர்ச்சி யான செய்தி கேட்டு மிகவும் வேதனையும், சொல்லொணா துயரத்தையும் அடைகிறோம்.
வருகின்ற 26.11.2022 அன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நமது முதலமைச்சர் அவர்கள் 'அவர் எழுதிய நூல்களை' வெளியிடவும் அதை தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரை. முருகன் அவர்களும், நானும் பெற்றுக் கொள்ளும் படி எங்களிடம் ஒரு நண்பர்மூலம் தெரிவித்து, எனது இசைவையும் பெற்றார்! 'இயற்கையின் கோணல் புத்தி' என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார் - இதுபோன்ற நிகழ்வுகளை. அப்படித்தான் அவரது மறைவு நிகழ்ந்துள்ளது.
தோழர் ஜின்னா சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோதும் சரி, தி.மு.க.வில் தீவிரமாக செயல் பட்ட நிலையிலும், 'மிசா' கைதியாக - இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எங்களோடும் இருந்தவர் - மாநிலங்களவைக்கு கலைஞரால் அனுப்பப்பட்டு கடமையாற்றியவர்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் மற்றும் நம்மிடமும் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டு பழகியவர்.
அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கே ஒரு பெரும் இழப்பு ஆகும்!
அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர், தி.மு.க. - தி.க. போன்ற நம் அமைப்புத் தோழர்களுக்கும் ஆறுதல் கூறி, மறைந்தவருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment