பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

பதிலடிப் பக்கம்

தொகுப்பு: மின்சாரம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

நடப்பது ராமராஜ்ஜியம் - ஒற்றுமையற்ற தேசியம்

குடியரசு தின விழாவையொட்டி, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் விளம்பரம் வெளி யிடப்பட்டது (2015).  இதில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம் பெற்றிருந்த மதச்சார் பின்மை, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெற வில்லை.

1.  இது குறித்து சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறும்போது குடியரசு தினத்தையொட்டி ஒன்றிய அரசு சார்பாக வெளியான விளம்பரத்தில் அரசமைப்பின் முகவுரை மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது கவனக் குறைவாக நடந்திருந்தாலும் இது வரவேற்கக்கூடியது என்று கூறியதுடன்  இந்திய அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நிரந்தர மாக நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். (28.1.2015)

2. ஒன்றிய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோட், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலகட்டத்தில் இந்த வார்த்தைகள் இடம்பெறவில்லை. 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆரம்ப கால நடைமுறைதான் தற் போது பின்பற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை யிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் இல்லாமல் விளம்பரங்கள் வந்துள்ளன என விளக்கம் அளித்தார். (29.1.2015)

3. ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகை யில், அரசு விளம்பரத்தில் வெளியிடப்பட்டது அரச மைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் முகப்புரை. அது நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களால் உருவாக்கப் பட்டது. அதில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகள் இல்லை. அவசரநிலை சமயத்தில்தான் இந்த இரு வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன. இந்த வார்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகப்புரையில் இடம் பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம் என்றார். (29.1.2015)

4. ஒன்றிய அமைச்சர் வெங்கய்யா நாயுடு  அளித்த பேட்டியில், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வற்றை பா.ஜ. முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறது. மதச்சார்பின்மை இந்தியர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. அதை அரசமைப்புச் சட்டம் மற்றும் விளம்பரங்களின் மூலம்தான் நிரூபிக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறினார். (30.1.2015)

5. இது தொடர்பாக பாரதீய ஜனதா  நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கு எதி ராக அரசு செயல்படாது என்று விளக்கம் அளித்து உள்ளது. (30.1.2015)

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப் பையே தகர்க்கும் ஒரு வேலையில் ஒன்றிய அமைச் சர்களே ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் முரண்பாடாகப் பேசித் தள்ளுகின்றனர். ஆனால், பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடியோ இதனைக் கண்டு கொள்வதில்லை என்பது ராஜ தந்திரமன்று. மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்ற பழமொழியைச் சார்ந்தது.

மதச்சார்பின்மை குறித்து 6 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பு ஒன்றினைத் திட்ட வட்டமாக வழங்கியுள்ளது. (14.3.1994)

‘ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக்கூடாது. அரசுப் பிரச்சினைகளில் மதத்துக்கு இடம் இல்லை.

எந்த ஒரு மாநில அரசும் மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடு வதோ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அத்த கைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு!'

என்று அந்த அமர்வு ஒருமனதாக வரையறுத்துக் கூறிவிட்டது. அப்படி இருக்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்ட மதச்சார் பின்மை(Secular) என்ற சொல்லையே தூக்கி எறிந்துவிட்டு அதிகாரப்பூர்வமாக குடியரசு விழா விற்கான  விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு மோசமான செயல்!.

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு விரோதமாக மாநில அரசு நடந்து கொண்டால் அரசமைப்புச் சட்டம் 356ஆம் பிரிவைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் கலைக்கலாம் என்றால், அதே விதி ஒன்றிய அரசுக்கும் பொருந்தாதா என்பது மில்லியன் டாலர் கேள்வியே!

மதச்சார்பின்மைக்கு விரோதமாக ஆளும் பி.ஜே.பி.யும், அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சும் எப்படி எப்படியெல்லாம் வார்த்தை நச்சுக் கட்டிகளைக் கொட்டுகின்றன - செயல்படுகின்றன! இதோ ஒரு சிறு பட்டியல்!

மோகன் பகவத் பேச்சுகள் (2014)

ஆகஸ்ட்:

இந்த நாடு இந்து நாடு, இங்கு உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள், ஒருவர் முஸ்லீமா கவோ, கிறித்தவராகவோ இருக் கலாம். அதைப்பற்றிக் கவலை யில்லை. ஆனால் இந்த நாட் டில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே, அவர்கள் இந்துக் களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.

அக்டோபர்:

ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை கேசரி, நாதுராம் கோட்சே காந்தியைக் கொல்வதற்குப் பதிலாக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவைக் கொலை செய்திருக்க வேண்டும். என்று எழுதியது. ஆர்.எஸ்.எஸ்.  தலைவரான மோகன்பகவத் பேச்சை விதிமுறைகளை மீறி தூர்தர்ஷன் தொலைக்காட்சி  நேரடியாக ஒளிபரப்பியது.

நவம்பர்:

இந்துக்கள் அனைவரும் தங்களது பெண்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்நிய மதத்தவனைக் காதலிக்கும் இந்துப் பெண்கள் சரியான முறையில் வளர்க்கப்படாதவர்கள். இந்து மதம் மாறுவது தவறல்ல, அது வழிதவறி வேறு மதத்திற்குச் சென்றவர்கள் தங்கள் தாய்மதம் திரும்புவதை மத மாற்றம் என்று சொல்லக்கூடாது. இந்துக்கள் பிறமதம் மாறுவதுதான் மதமாற்றம். (ஆக்ராவில் பேசியது.)

பாகிஸ்தானையும் இந்து நாடாக மாற்ற வேண்டும்

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,  மதரீதி யாக எழும் அச்சுறுத்தல்களின் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, மோகன் பகவத் பேசிய பேச்சு: இந்த நாடு இந்து தேசம், இங்கு இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே, தற்போது இந்து அரசு அமைந்துள்ளது, இதன் காரணமாக இந்து மதத்திற்குத் திரும்புகின்றனர்.

இஸ்லாமிய அரசர்கள் தங்களின் கத்திமுனையில் மக்களை மிரட்டி கட்டாயமாக இஸ்லாம் மதத்தை ஏற்க வற்புறுத்தினர். ஆனால் அவர்களின் கத்தியின் வலிமை இந்துக்களின் முன்பு தோற்றுவிட்டது. அதனால்தான் அவர்களால் அதிக மக்களை முஸ்லீம்களாக மாற்றமுடியவில்லை. அதே நேரத்தில் அய்ரோப்பியர்கள் ஏழை இந்துக்களை ஏமாற்றி அவர்களுக்குப் பணத்தாசை மற்றும் தேவையற்ற கல்வியினைக் கொடுத்து ஏமாற்றியதன் விளைவாக அவர்கள் வேற்று நாட்டு மதமான கிறித்தவத்தை ஏற்றுக்கொண்டனர்.

இத்தனை ஆண்டுகளாக இந்து அமைப்புகளை இயங்கவிடாமல் சில அந்நிய சக்திகள் முயன்று கொண்டு இருந்தன. தற்போது இந்து அரசு அமைந்து விட்டது. தற்போது இந்துநாடு விழித்துவிட்டது. இந்து அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படலாம். இந்து அமைப்புகளை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டின் எதிரிகள் ஆவர்.

நாங்கள் இப்போது இந்து நாட்டை உருவாக்க முயன்றுகொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இந்து நாடுதான் தேவை, மதச்சார்பின்மை என்பது வாக் கிற்காக நடக்கும் ஒரு ஏமாற்று வேலையாகும், எந்த நாடும் மதத்தைச் சார்ந்தே உள்ளது. அய்ரோப்பாவில் கிறித்தவ நாடு, அரபுகளின் முஸ்லீம் நாடு அப்படி இருக்க இந்து நாடு என்றால் மட்டும் இங்கே சிலருக்குக் கோபம் வருகிறது.

இந்து நாட்டை உருவாக்க முதலில் அனைவரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும். அதைத்தான் தற்போது செய்துவருகிறோம். மதமாற்றம் எங்களின் அனுமதியு டன்தான் நடக்கிறது, நாங்கள்தான் முன்னின்று செய்து வருகிறோம். உங்களுக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை என்றால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவாருங்கள். அதன் பிறகு பார்க்கலாம், இங்கு எந்த அந்நிய மதம் துணிந்து செயலாற்றும்?

ஹிந்துவாக மதம் மாறினால்அய்ந்து லட்சம் ரூபாய்

உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் தரம் ஜக்ரன் சமிதி என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டது.

அதில் இந்துவாக மாறும் கிறித்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீமுக்கு ரூ.5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் பெயரும், அலைபேசி எண்ணும் இருந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது அது செயல்படாமல் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

இந்துக்களாக இருந்து பிற மதத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தக் கடிதம் மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய முசாபர் நகரிலும் விநியோகிக்கப்பட்டது.

இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் கேட்டபோது, நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தற்போது மீடியாக்கள்தான் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியைப் போல் இந்தக் கடிதத்தையும் பெரிதுப்படுத்துகின்றன. நாங்கள் இதுபோன்ற முகாம்களை வெளியே தெரியாமல் நடத்தி வருகிறோம் என்றனர்.

இந்தக் கடிதம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில் ஒன்றிய அரசு இதை மதத் திட்டமா? அல்லது வளர்ச்சித் திட்டமா? என விளக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை முதல் ஒன்றிய அகிலேஷ் யாதவ் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும். ஜனவரி 18ஆம் தேதி விஸ்வ இந்து அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

(மாலைமலர், டிசம்பர் 12, 2014)

குறிப்பு: இந்தச் சட்டவிரோதமான செயல்மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு முன்பு இந்து நாடுதான், பீஷ்மர் புண்ணிய பூமி, தருமன் தனது வாழ்நாளில் நீண்ட ஆண்டு பாகிஸ்தானில்தான் வாழ்ந்தார். இவ் வளவு புகழ்வாய்ந்த அந்த நாடு, என்று இந்துக்களின் நாடாக மாறுமோ அப்போதுதான் அங்கே அமைதி ஏற்படும். பாகிஸ்தானை இந்து நாடாக மாற்றும் நடவடிக்கையில் விரைவில் வெற்றி பெறுவோம்.

இந்தியாவில் அந்நிய மதத்தவர்கள் இருக்கும் வரை இந்த நாடு அமைதியுடன் இருக்காது. 

இந்த நாட்டின் அனைத்து மக்களையும் இந்துக் களாக மாற்ற நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

கடைசிக் குடிமகன் வரை இந்துவாக மாற்ற நாங்கள் துணை நிற்போம்.

முடிந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்து பாருங்கள் என்று தன்னுடைய உரையில் கூறினார். (டிசம்பர் 21, 2014)

2015 ஜனவரி 5,6,7ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில்,  இந்துக்களாக மாற்று வதை யாரும் தவறு என்று கூறினால், அந்தத் தவறை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் வெறியூட்டும் முத்துகள்!

முசாபர் நகர் கலவரத்தில் ஹிந்துத்துவ வாதிகளின் பேச்சு

முசாபர் நகரில் கொல் லப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க பா.ஜ.க. விற்கு வாக்களியுங்கள் - அமித் ஷா (2014 மார்ச்சில் பேசியது.)

இந்துக்கள் மீது கைவைத்த ஒரு முஸ்லீமும் இங்கு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை இந் துக்கள் முடிவு செய்வார்கள் (ஆதித்யநாத் யோகி தேர் தல் பரப்புரையின் போது)

இந்துப் பெண்களை முஸ்லீம்கள் ஏமாற்றி அவர் களைத் தங்களின் இச்சைக்குப் பயன்படுத்தி பிறகு அவர்களை முஸ்லீம்களாக மாற்ற வற்புறுத்துகிறார்கள். குஜராத், அசாம் தற்போது முசாபர் நகர்.  இவை யெல்லாம் மறக்க வேண்டாம், மீண்டும் ஒரு குஜராத் நிலைமை வேண்டுமா? (முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுகிறார் பிரவீன் தொகாடியா - மார்ச் 27, 2014)

ஒரு இந்து பாதிக்கப் பட்டால் 10 முஸ்லீம்களைப் பழிவாங்க வேண்டும். இது உண்மையான இந்துக் களின் கடமை - சங்கித் சோம். (முசாபர் நகர கலவரத்தின் சூத்திரதாரி) பா.ஜ.க. எம்.எல்.ஏ. இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டது. (ஏப்ரல் 2014)

இந்துக்கள் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ் தானுக்கு ஓடிவிட வேண்டும் - கிரிராஜ் சிங் - பீகார் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசியது - மே 2, 2014

இந்துக் கோவிலின் ஒரு பகுதியே தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி. தலைவர் காந்த் பாஜ்பாய் (தினமணி 8.12.2014)

(தொடரும்)


No comments:

Post a Comment