சென்னை,அக்.5- பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அரசின் 60 விழுக்காடு பங்கு, மாநில அரசின் 40 விழுக்காடு பங்கு என மொத்தம் ரூ.912.19 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அரசாணை:
பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு கடந்த 2018-2019ஆம் ஆண்டுக்கான நிலுவை, 2020-2021 மற்றும் 2021-2022ஆம் ஆண்டுகளில் 2.89 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,564.98 கோடியில் நான்கில் ஒரு பங்கான ரூ.891.12 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது. இந்த நிதியுடன் தனது நிதியையும் சேர்த்து தமிழ்நாடு அரசு ரூ.1,485.21 கோடி ஒதுக்கியது.
இதையடுத்து, ஒன்றிய அரசு தனது பங்கில் எஞ்சியுள்ள ரூ.2,673.86 கோடியில் ரூ.891.36 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியது. அடுத்தகட்டமாக ரூ.667.45 கோடியை ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் இதர பிரிவினருக்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.547.31 கோடியுடன் (60 விழுக்காடு பங்கு), மாநில அரசின் ரூ.364.88 கோடியையும் (40 விழுக்காடு பங்கு) சேர்த்து ரூ.912.19 கோடி ஒதுக்குமாறு தமிழ்நாடு அரசை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, ரூ.912.19 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை உரிய கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளவும் ஊரக வளர்ச்சி ஆணையருக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி யுள்ளது. இது மட்டுமின்றி, இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.200 கோடி வழங்கி யுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment