கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் 2-ஆம் கட்ட அகழாய்வு நிறைவு

அரியலூர், அக் 3 கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகை மேட்டில் நடைபெற்று வந்த 2-ஆம் கட்ட அகழாய்வு பணி 30.9.2022 அன்று நிறைவடைந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ராஜேந்திர சோழன், மாளிகைமேடு பகுதியில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்துள்ளார். 

அவரது ஆட்சிக்குப் பின்னர், அந்த மாளிகைமேடு மண்மேடுகளால் மூடப் பட்டு, காணாமல் போனது.

இந்நிலையில், கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு 1986-_1996 வரை 4 கட்டங் களாக இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில், மாளிகையின் செங்கற்களாலான சுற்றுச்சுவர்கள் கண்டறியப்பட்டன. மேலும், பல்வேறு அரிய வகைப் பொருட்களும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது.

மாளிகைமேடு பகுதியில் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் அருகில் 15 மீட்டர் தொலைவில் 10-க்கு 10 அளவிலான குழிகள் தோண்டப்பட்டு, கொக்கி, களைவெட்டிகளின் உதவி யுடன் பழைமையான பொருட்கள் உள்ளனவா என தேடும் பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில், சோழர் காலத்தைய அரண்மனையில் எஞ்சிய செங்கற்களால் ஆன 2 அடுக்கு சுவர்கள் கொண்ட பகுதி கண்டறியப்பட்டது. 

மேலும், தங்கத்தாலான காப்பு, மனித உருவம் கொண்ட பொருள், நாணயங்கள், இரும்பாலான ஆணிகள், சீன மண் பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், செம்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கப் பெற்றன. இந்நிலையில், இந்த அகழாய்வு பணி 30.9.2022 அன்று நிறைவடைந்தது. இதையடுத்து, இங்கு கண்டறியப்பட்ட பொருட்களை ஆவ ணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வின்போது கிடைக்கப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் சிறப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர் கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment