உ.பி. தேர்தலில் புது திருப்பம் சமாஜ்வாதியுடன் அய்க்கிய ஜனதா தளம் கூட்டணி : நிதிஷ்குமார் முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

உ.பி. தேர்தலில் புது திருப்பம் சமாஜ்வாதியுடன் அய்க்கிய ஜனதா தளம் கூட்டணி : நிதிஷ்குமார் முயற்சி

புதுடில்லி,செப்.22- வரும் 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) முயற்சி மேற் கொண்டுள்ளது.

ஜேடியு தலைவரும் பீகார் முதல மைச்சருமான நிதிஷ் குமார் அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியில் இணைந்தார். இதை யடுத்து 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள் ளார். இந்த முயற்சிகளில் ஒன்றாக உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் அவர் கூட்டணிப் பேச்சை தொடங்கியுள்ளார். இதற்காக, டில்லி யின் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவை நிதிஷ் சந்தித்து பேசியுள்ளார்.

பீகாரை ஒட்டியுள்ள கிழக்கு உ.பி.யில் நிதிஷ் குமாரின் குர்மி சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இதனால் அப்பகுதியில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைப்பதுடன், அங்குள்ள ஒரு தொகுதியில் போட்டியிடவும் நிதிஷ் குமார் தயாராகி வருகிறார். பிரதமர் மோடி பாணியில் வேற்று மாநிலத்தில் போட்டியிடுவது அவரது திட்டமாக உள்ளது. நிதிஷ் குமாருக்காக உ.பி.யின் பூல்பூர், மிர்சாபூர், அம்பேத்கர் நகர் ஆகிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜேடியுவின் உ.பி. மாநிலத் தலைவர் அனுப் சிங் பட்டேல் கூறும்போது, “இந்த யோசனையை, பாட்னாவில் நடைபெற்ற எங்கள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் தெரிவித்தோம். இதை ஏற்கும் வகையில் அவர் பேசியிருப்பதால், 2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் பாஜகவை நிதிஷ் நேரடியாக எதிர்க்கும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

உ.பி.யின் பூல்பூரில் மேனாள் பிரத மர்களான ஜவஹர்லால் நேரு, வி.பி.சிங் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பூல்பூருடன் மிர்சாபூர் மற்றும் அம்பேத்கர் நகரிலும் குர்மி மற்றும் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இதனால் இந்த மூன்றில் ஒரு தொகுதியில் நிதிஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யின் புந்தேல்கண்ட், மத்திய பகுதியிலும் சேர்த்து சுமார் 20 மக்களவைத் தொகு திகளில் ஜேடியு வெல்லும் வாய்ப்பு கணிக் கப்பட்டுள்ளது. எனவே சமாஜ்வாதியு டன் கூட்டணி வைத்து போட்டியிட ஜேடியு பேச்சுவார்த்தை நடத்து கிறது.

நிதிஷின் ஜேடியு ஏற்கெனவே உ.பி.யின் 2017 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. பிறகு காங்கிரசுடன் சமாஜ்வாதி கூட்டணி சேர்ந்ததால் மதச்சார்பற்ற வாக்குகள் பிரியும் என போட்டியை கைவிட்டார்நிதிஷ். பிறகு பாஜக அணியில்இருந்ததால் 2019 மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் போட்டியிடாத நிதிஷ், 2022 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். 27 தொகு திகளில் போட்டியிட்ட ஜேடியு வேட்பா ளர்கள் 26-இல் வைப்புத் தொகையை இழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.


No comments:

Post a Comment