அரியானாவில் ஒரே மேடையில் நிதிஷ், சரத்பவார், யெச்சூரி பிஜேபியை வீழ்த்த வியூகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

அரியானாவில் ஒரே மேடையில் நிதிஷ், சரத்பவார், யெச்சூரி பிஜேபியை வீழ்த்த வியூகம்

புதுடில்லி, செப்.27 காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சி அணியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிதிஷ்குமார், சரத்பவார், யெச்சூரி ஒரே மேடையில் பங்கேற்றனர்.  மறைந்த மேனாள் துணைப் பிரதமரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் நிறுவனருமான தேவிலால் பிறந்தநாள் (25.9.2022) கொண் டாடப்பட்டது. 

இதையொட்டி, அரியானா மாநிலம் பதேகா பாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு லோக்தளம் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஒரே மேடையில் பங்கேற்றனர். பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, லோக்தளம் தலைவர் சவுதாலா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், அகாலிதளம் தலைவர் சுக்பிர்சிங் பாதல், சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சவ்ந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. 

கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:- நாட்டுக்கு இப்போதைய தேவை காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் அடங்கிய ஒரே அணி. அத்தகைய பிரதான எதிர்க்கட்சி அணிதான், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எளிதாக தோற்டிக்கும். நமக்கு 3-ஆவது அணி தேவையில்லை. நான் பிரதமர் பதவி வேட்பாளர் அல்ல.

பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஒன்று பட்டால், பா.ஜனதாவின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கலாம். காங்கிரஸ், இடது சாரிகள் இல்லாத எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை. மேடையில் உள்ள தலைவர்கள் இந்த ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். நாட்டில் இந்து-முஸ்லிம் மோதல் இல்லை. ஆனால், தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்த மோதலை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று அவர் பேசினார்.

கூட்டத்தில், சரத்பவார் பேசியதாவது:- டில்லி எல்லையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு உறுதி அளித்தது. ஆனால் அப்படி செய்யவில்லை. ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகளும், இளைஞர் களும் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தற்கொலை தீர்வு அல்ல. மத்தியில் உள்ள அரசை மாற்றுவதுதான் அதற்கு உண்மையான தீர்வு. 2024-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அவர் பேசினார்.

தமிழ்நாட்டில் கரோனா 540

சென்னை, செப்.27 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 12-ஆவது நாளாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் நேற்று (26.9.2022) புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 108 பேர், தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,80,979 ஆகும். தமிழ்நாட்டில் ஒரே நாளில் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 498 பேர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத் திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கரோனா பாதிப்புக் குள்ளாகி 5 ஆயிரத்து 437 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment