மியான்மாவில் இந்தியர்கள் எப்போது சுட்டுக் கொல்லப்படுவார்கள்? அச்சத்தில் உறவினர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

மியான்மாவில் இந்தியர்கள் எப்போது சுட்டுக் கொல்லப்படுவார்கள்? அச்சத்தில் உறவினர்கள்

கொச்சி,செப்.24- மியான்மாவில் இந்தியர்கள் எப்போது சுட்டுக் கொல்லப்படுவார்கள்? என்கிற பீதி நிலவி வருகிறது.

டேட்டா என்ட்ரி வேலை (தட்டச்சு வேலை), நல்ல ஊதியம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் இந்தியாவிலிருந்து 300 பேர் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில், கேரளாவைச் சேர்ந்த 30 பேரும் அடங்குவர்.

இவர்களை ஒரு கும்பல் தாய்லாந்திலிருந்து மியான் மருக்கு கடத்திச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. இந்தியர்கள் தங்களை காப்பாற்றக்கோரி வெளியிட்ட காட்சிப் பதிவு மூலம் இந்த கடத்தல் நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, ஒன்றிய அரசு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில் கூறியுள்ளதாவது:

மியான்மரின் மியாவாடி பகுதியில் எங்களை அடைத்து வைத்து சைபர் குற்றங்களில் ஈடுபட துன்புறுத்து கின்றனர். குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் போலி மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதனை செய்ய மறுக்கும் பணி யாளர்கள் மீது முதலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடுமைப் படுத்துகின்றனர். மிரட்டி பணியாளர்களை சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துகின்றனர். தினமும் 16 மணி நேரம் வேலை பார்ப்பதுடன், உரிய உணவு கிடைக்காமல் மிகவும் சோர்வடைந்த நிலையில் உள்ளோம்.

அவர்கள் எங்களை அடிமைப்படுத்தி உள்ளதுடன் சைபர் குற்றவாளியாகவும் ஆக்கியுள்ளனர். இந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளதால் அவர்கள் எங்களை வேறு இடங்களுக்கு மாற்றவும் அதிக வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைப்போர் சுட்டுக் கொல் லப்பட்டு அவர்களது உடல் கடவுச் சீட்டுடன் தாய்லாந்து எல்லையில் வீசப்படும் என்று கடத்தல்காரர்கள் ஏற்கெ னவே எங்களிடம் தெளிவாக கூறியுள்ளனர். எனவே, 24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் இருப்பதால் நாங்கள் சுட்டுக் கொல்லப்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அதற்கு முன்பாக, ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, இந்தியர்களை கடத்தல்காரர்கள் பிடியிலிருந்து மீட்க தாய்லாந்து மற்றும் மியான்மர் அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, தாய்லாந்துக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment