காஞ்சிபுரத்தில் பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

காஞ்சிபுரத்தில் பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்!

காஞ்சிபுரம், செப். 27- தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாள் விழா 17.9.2022 காலை 8.00 மணி அளவில்,  பெரிய காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.  முந்தைய நாள் இரவே பெரியார் சிலை வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைக்கப் பட்டது. 

திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க! உள்ளிட்ட வாழ்த்து முழக்கங்கள் விண்ணதிர முழங்கப்பட்டன. கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கழகச் சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி கதிரவன் சமூக நீதி நாள் உறுதிமொழியைக் கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றனர். மாவட்ட கழகச் செயலாளர் இ. ரவிந்திரன், இணை செயலாளர் அ.வெ. முரளி, மாநகர கழகத் தலைவர் கி. இளையவேள், மாநகரச் செயலாளர் ச. வேலாயுதம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.  கோவிந்தராஜ், எழிலன், வெ. லெனின் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். 

தி.மு.க. சார்பில் மரியாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  மாவட்ட செயலாளர் சமூக நீதி நாள் உறுதிமொழி கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றனர். 

தந்தை பெரியாரின் தொண்டுகள் குறித்தும்  சமூக நீதி நாள் குறித்தும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் உரையாற்றினார். 

காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் 

க. செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், நகர, ஒன்றிய செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாகப்  பங்கேற்றனர்.

அ.தி.மு.க. - ம.தி.மு.க. மரியாதை

அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் மேனாள் அமைச் சர் சோமசுந்தரம் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  காஞ்சி பன்னீர் செல்வம், பூக்கடை சேகர் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 

மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்  வளையாபதி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருள் அவர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றனர்.  தோழர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

விடுதலை சிறுத்தைகள் மரியாதை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  பாசறை செல்வராஜ், டேவிட், திருமாதாசன், மதிஆதவன் உள்ளிட்ட தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பாசறை செல்வராஜ் சமூகநீதி நாள் உறுதிமொழி கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றனர். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் கள் சங்கத்தின் சார்பில் தோழர் தாமோதரன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர் ஆறுமுகம் சமூகநீதி உறுதிமொழி கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றனர்.  திராவிட இயக்க தமிழர் பாசறை அமைப்பின் சார்பாக தோழர் சாருமா பங்கேற்றார். 

திருநங்கைகள் மரியாதை

மக்கள் மன்றம் அமைப்பின் சார்பாக தோழர்கள் மகேஷ், ஜெசி, வழக்குரைஞர் மேகலா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் வழக்குரைஞர்  பார்வேந்தன்  உள்ளிட்டோர் ஊர்வலமாக பறையடித்து ஆட்டமாடி மகிழ்வுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.   திருநங்கைகள் பலர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மக்கள் நீதி மய்யத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர் கண்ணன் உறுதிமொழி கூற அனைவரும் திரும்பக் கூறி உறுதி ஏற்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். 

மருத்துவர் விமுனாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப் புகளைச் சேர்ந்த தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரங்கக் கூட்டம்

காலை 10 மணி அளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மலைக்கொழுந்து கட்டடத்தில் அறிவு வளர்ச்சி மன்றத்தின் சார்பாக நாத்திகம் நாகராசன் தலைமை யில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

எழுச்சிப் பாடகர் உலக ஒளி தந்தை பெரியார் குறித்தும் அறிஞர் அண்ணா குறித்தம்  பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார். அந்த நிகழ்வில் கழகச் சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி கதிரவன், மாவட்ட இணை செயலாளர் அ.வெ. முரளி ஆகியோர் உரையாற்றினர். மாநகர செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  தந்தை பெரியார் அவருடைய பகுத்தறிவு, கொள்கை மூடநம்பிக்கை ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு  முதலிய செய்திகளையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களுடைய  செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றியனர். திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தெருமுனைக் கூட்டம் 

மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில், பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இ. ரவீந்திரன் அனை வரையும் வரவேற்றார். எழுச்சிப் பாடகர் உலக ஒளி தந்தை பெரியார் குறித்தும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார். 

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் தலைமை வகித்து உரையாற்றினார்.  மாநகரத் தலைவர் கி. இளையவேள், மாநகர செயலாளர் ச. வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் சீதாவரம் மோகன்,  தோழர்கள் கு. அருளானந்தம், க. கோதண்டம், காஞ்சி அமுதன் ஆகியோர் உரையாற்றினர்.

 மாவட்ட இணை செயலாளர் அ.வெ. முரளி தந்தை பெரியாரின் தொண்டுகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார்.  திராவிட முன்னேற்ற கழகத்தின் கழகச்  சொற்பொழிவாளர் நாத்திகம் நாகராசன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நகைச்சுவை ததும்ப  உரையாற்றினார். 

நிறைவாக,  கழகச் சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி கதிரவன் தந்தை பெரியாரின் தொண்டு, திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள், தமிழர் தலைவரின் அளப்பரிய  செயல் பாடுகள், பெரியார் உலகம் முதலியவை குறித்து சிறப்புரை யாற்றினார்.  நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் முரளி, சேகர், திமிரி பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் பிறந்தநாள் கூட்டம் மக்கள் மத்தியில் நல்ல எழுச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment