மதுரை, ஆக.7 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழா வீதி உலாவின் போது கோவில் யானையை தாக்கியதில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கி வருகிற 8-ஆம் தேதி வரை நடக்கிறது. 8-ஆம் நாள் விழாவான நேற்று (6.8.2022) காலை சிலை வீதி உலா நடந்தது. அப்போது கோவில் யானை பார்வதி, ஊர்வலத்தின் முன்பாக நடந்து சென்றது. வடக்கு-கிழக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள 16-ஆம் கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மன் சிலைக்கு சிறப்பு தீபாராதனை நடந்ததாம்! அப்போது யானை, அம்மன் சிலையை 3 முறை வலம் வந்து மண்டியிட்டு துதிக்கையை தூக்கி வணங்குவது வழக்கம். அம்மனை யானை வணங்க வைக்க பாகன் முயற்சித்தார். அப்போது அது பிளிறியதாகவும், அதைக் கண்டு பக்தர்கள் பயந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. உடனே பாகன் யானையை கட்டுப்படுத்த அங்குசத்தால் தாக்கியதில் யானையின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக தெரியவருகிறது. உடனே பாகன் யானையை அங்கிருந்து அழைத்து சென்றார். மேலும் யானை சென்ற இடத்தில் ரத்தம் வழிந்து இருந்ததாக பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏற்கெனவே யானை பார்வதி, கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment