அக்கப்போர் அண்ணாமலைகளே அடக்கி வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

அக்கப்போர் அண்ணாமலைகளே அடக்கி வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

பி.ஜே.பி.யின் தமிழ்நாட்டுத் தலைவர் திரு.அண்ணா மலையின் பெயர் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளிவரவேண்டும்.

அதற்காக எதாவது அக்கப்போர் செய்திகளை அள்ளி விடவேண்டும் - இதுதான் பி.ஜே.பி.க்கு அவர் நாள்தோறும் செய்யும் பெரும் சேவை.

தமிழ்நாட்டில் மதவாத சங் பரிவார் சித்தாந்தத்தைப் பரப்பிட, காலூன்ற செய்ய என்னென்ன வகைகளில் எல்லாம் ‘சித்து' வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் - அடேயப்பா!

தந்தை பெரியாரின் திராவிடச் சித்தாந்தம் - அவர் களின் நினைவைப் பகல் கனவாக்கி வருகிறது என்ற நிலையில், ஆத்திரம் அலைபுரள, இப்பொழுது திரா விடர் கழகத்தின்மீது நாலுகால் பாய்ச்சலில் ஈடுபட்டுள் ளனர்.

தந்தை பெரியாரின் கொள்கைப் போர் வாளாகிய சமூகநீதிப் பயிரை வளர்க்கும் ‘‘உழவாரப்'' பணியை நாளும் வளர்க்கும் ‘விடுதலை' ஏடு இந்தக் காவிகளின் கண்களை உறுத்திக் கொண்டுள்ளது.

88 ஆண்டு ‘விடுதலை'க்கு 60 ஆண்டு ஆசிரியராக அரும்பணியாற்றி வருபவர்; தமிழ்நாட்டில் ‘ஆசிரியர்' என்றாலே அவரைத்தான் குறிக்கும் என்ற பெருமைக் குரிய தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 60 ஆண்டு ‘விடுதலை'ப் பணியைப் பாராட்டும் வகை யிலும், அதேநேரத்தில் வெகுமக்கள் மத்தியில் ‘விடுதலை'யின் கருத்துகள் போய்ச் சேரவேண்டும் என்கிற நோக்கத்திலும் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசி ரியர் பணியை மய்யப்படுத்தி, மக்களிடமிருந்து 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைச் சேகரிக்கும் அரும் பணியில் கருஞ்சட்டைத் தோழர்கள் களத்தில் இறங்கி, உழைப்புத் தேனீக்களாக அலைந்து திரிந்து பாடுபட்டு வருகின்றனர்.

இது ஒன்றும் புதிதல்ல; ‘விடுதலை' ஆசிரியராக 50 ஆண்டு பணி முடித்த நேரத்திலும்கூட 50 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டி சாதனை படைத்த வரலாறு திராவிடர் கழகத்திற்கு உண்டு.

அந்த வகையில் திருப்பத்தூரில் வசூலிக்கப்பட்ட ‘விடுதலை' சந்தாக்களுக்கான தொகையை ஒரு வித்தி யாசமான வகையில் வழங்கவேண்டும் என்ற ஆர் வத்தில் பிரச்சார உத்தியாக மற்றவர்களைவிட தாங்கள் முந்தவேண்டும் என்ற போட்டியில் எடைக்கு எடை என்ற முறையில் ரூபாய் நோட்டுகளை அளித்தனர்.

முன்கூட்டியே கூட சொல்லவில்லை - தோழர்கள் சஸ்பென்சாக அதனைச் செய்தனர். வசூலித்த அத் தனைத் தொகையையும் அளித்தனர் என்பதுதான் தோழர்களின் செயல்பாடு.

‘விடுதலை'க்கு 60 ஆண்டு ஆசிரியர் என்பதை வெளிப்படையாக அறிவித்து, அதற்காக 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்கள் அளிப்பது என்று மதுரைப் பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு வெளிப்படையாக வசூலித்து பெற்றுக்கொண்ட தொகைக்கு இரசீதும் கொடுத்து, அறிவு நாணயத்தோடு நடைபெற்ற நிகழ்ச்சியைக் கொச்சைப்படுத்துவது கொச்சைத்தனம் என்பது அல்லாமல் வேறு என்னவாம்?

ஆசிரியர் எடைக்குமேல் கொடுத்துள்ளோம் என்ற பூரிப்பில், வசூலித்த தொகை முழுவதையும் ‘‘துலாபார மாகக்'' கொடுத்தனர். இது கழகத் தோழர்களின் உழைப் பையும், அறிவுநாணயத்தையும்  காட்டும் நிலைக் கண்ணாடியாகும்.

திராவிடர் கழகத்தின் அணுகுமுறையில் இது ஒன்றும் புதிதானதும் அல்ல! தந்தை பெரியார் அவர்களுக்குத் தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3 ஆம் தேதி எடைக்கு எடை ரூபாய் நாணயங்களைக் கொடுத்த துண்டே!

தந்தை பெரியாருக்குத் துலாபாரமாக வெங்காயம், பெட்சீட், பேரீச்சம் பழம் என்று விரும்பிய பொருள் களையெல்லாம் அளித்து தங்கள் அன்பையும், நன்றியையும் காட்டியதுண்டே!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளியும், தங்கமும் எல்லாம் முன்பு கொடுத்ததுண்டே!

அவற்றையெல்லாம் அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. பெரியார்  நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக்காக, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமாக, சென்னை பெரியார் திடலில் உள்ள நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றமாக, டில்லி தலைநகரில் பெரியார் மய்யமாக உயர்ந்து ஒளிவீசிக் கொண்டு இருக்கிறதே! மருத்துவமனைகளாகவும் தொண்டறம் புரிந்து வருகின்றன. குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் என்ற வகைகளில் எல்லாம் அருந்தொண்டாற்றி வருகிறோம்.

ஒரு சமுதாய இயக்கம் இத்தகு கல்விப் பணியை, மருத்துவ உதவிப் பணிகளை தொண்டறமாக ஆற்றி வருகின்றது.

இவற்றையெல்லாம் பாராட்டும் பக்குவம் பா.ஜ.க. விடம் எதிர்பார்க்க முடியாதுதான். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஜாதி, மதம், குரோதம், பாசிசக் குரூரம்.... இத்தியாதி... இத்தியாதிதான்!

தமிழ்நாட்டு மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம் என்ற கேள்விக்கு, பா.ஜ.க.வின் அதிகாரபூர்வமற்ற பிரச்சாரப் ‘பீரங்கி'யான ‘துக்ளக்' (19.2.2020, பக்கம் 29) என்ன எழுதியது?

‘‘ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களது தனித்துவம்'' என்று எழுதவில்லையா?

கஜகுட்டிக்கரணம் போட்டாலும், தங்கள் பருப்பு வேகவில்லையே என்ற ஆத்திரத்தில் திராவிடர் கழ கத்தின்மீதும், அதன் தலைவர்மீதும் சேற்றை வாரி இறைக்கும் அண்ணாமலைகளின் ஆத்திரம் நன் றாகவே புரிகிறது - அதனுடைய விரக்தி - விளைவுதான் அண்ணாமலையின் அறிக்கை - திருப்பத்தூரில் ‘விடுதலை' ஆசிரியருக்கு எடைக்கு எடை ரூபாய்க் கொடுத்தது மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் கூட்டுக் கொள்ளையாம்!

கொள்கைப் பரப்பும் ஓர் ஏட்டுக்காக சந்தா வசூலித்துக் கொடுப்பதில் கூட்டுக் கொள்ளை எங்கே இருந்து குதித்தது? எல்லாம் வெளிப்படையாகத்தானே நடக்கிறது. அண்ணாமலையே  தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளபடி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் - வேதனைப்படவில்லை.

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கேட்ட ஒரு கேள்வியும் இன்றைய ஏடுகளில் வந்துள்ளது.

‘‘ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க - பேரம் நடத்திட ரூ.800 கோடி பி.ஜே.பி.,க்கு எங்கிருந்து வந்தது?'' என்று கேட்டுள்ளாரே!

அறிவு நாணயத்தோடு பதில் சொல்லுவார்களா?

திருப்பத்தூரில் ‘விடுதலை' சந்தாவுக்காக நோட்டு களால் துலாபாரம் அளிக்கப்பட்ட நிகழ்ச்சியிலேயே அரைவேக்காடு, அக்கப்போர் பேர்வழிகள் இதைப் பற்றிக் கூட குதர்க்கமாகப் பேசக்கூடும் என்றாரே தமிழர் தலைவர் - எத்தகைய தொலைநோக்கு! (பெட்டிச் செய்தி காண்க).

எதிர்ப்புகள், எதிர்நீச்சல்கள், அவதூறுப் பிரச் சாரங்கள் இவற்றையெல்லாம் சந்தித்துச் சந்தித்து, மக்கள் மத்தியில் உண்மைப் பிரச்சாரத்தின்மூலமும், களப்பணிகள் மூலமும், அப்பழுக்கற்ற பொதுத் தொண்டின்மூலமும், பிரச்சாரம் - போராட்டம் - அந்த வகையில் சிறைவாசம் என்பவற்றின்மூலமும், மக்கள் மத்தியில் கொள்கை ரீதியாக வேரூன்றி நிற்கும் இயக்கம் திராவிடர் கழகம்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல, அரசியல் கட்சிகளை ‘அனாவசிய மாக' விமர்சிப்பதுபோல, தன்னல மறுப்பு மக்கள் இயக்கமான திராவிடர் கழகத்தையோ, 90 ஆண்டு அக வையில் 80 ஆண்டு பொதுத் தொண்டுக்குச் சொந்தக் காரரான திராவிடர் கழகத் தலைவரைப்பற்றியோ  வாய்க்கு வந்தவாறு பேசலாம், அறிக்கை விடலாம் என்று நினைத்தால், ‘துக்ளக்' கூறியபடி, மக்கள் திராவிடர் கழகம் பக்கம் நின்றுதான் விபீடணர்களுக்கு உரிய நேரத்தில் தேர்தல் படுதோல்விமூலம் ‘‘தர்ம அடி'' கொடுப்பார்கள்; டெபாசிட்டையும் பறிமுதல் செய் வார்கள்.  எச்சரிக்கை! எச்சரிக்கை!!

அண்ணாமலை தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராகப் பொறுப்பேற்றபோது, சொன்னதைத்தான் இப்பொழுது செய்து வருகிறார் - என்ன சொன்னார்? (16.7.2021).

‘‘மீடியா போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்படவேண்டாம். அடுத்த ஆறு மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள்'' என்று சொல்ல வில்லையா?

ஆம், அவர் கூறிய அக்கப்போர் வேலையைத்தான் இப்பொழுது செய்து வருகிறார்.

தராசில் ஆசிரியரை அமர வைத்து எடைக்கு எடை கொடுத்தது - கருப்புப் பணம் அல்ல - காமாலைக் கண்ணர்க்கு அப்படித் தெரிந்தால் யார் குற்றம்?  கருப்புச் சட்டைகளின் - ஆதரவாளர்களின் பணம் - ‘விடுதலை'யால் பயன் அடைந்த நன்றியுடையோர் அளித்த பணம்! வீதிகளில் இறங்கி கழகத் தலைவர் வீரமணி வசூலித்த பணம் - முறையாக இரசீது கொடுத்து பெற்றுக்கொண்ட பணம்!

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிடவில்லை; காரணம், எப்போதும் வெள்ளை மனத்தவர்கள் நாங்கள். 

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.8.2022

No comments:

Post a Comment