நாடகக் கொட்டகையில் அராஜகக் கூத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

நாடகக் கொட்டகையில் அராஜகக் கூத்து!

ஒன்றிய பிஜேபி ஆட்சியில் கருத்துரிமையின் கரு அழிக்கப்படுகிறது. மதவாதம் என்ற யானை வெறி பிடித்துத் துவம்சம் செய்கிறது.

நாடறிந்த கருநாடக எழுத்தாளர் ஜெயந்த் கைகினி "ஜோதே கிருவனு சந்திரா" என்ற ஒரு நாடகத்தை எழுதினார்.

இந்த நாடகம் கருநாடக மாநிலம் ஹனவட்டி என்ற ஊரில் உள்ள வீரசைவ திருமண மண்டபத்தில் 3.7.2022 அன்று இரவு நடந்து கொண்டு இருந்தது. 

இந்த நாடகத்தின் கதாநாயக பாத்திரங்களாக இஸ்லாமியர்கள் இருப்பதால் அத்தகையதொரு நாடகத்தை இந்துக்களின் திருமண மண்டபத்தில் நடத்தக் கூடாது என்று பஜ்ரங்தள் (குரங்குப் படை) சிறீராம் சேனாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று மண்டபத்தில் நுழைந்து கலாட்டா செய்தனர்.

இதன் காரணமாக நாடகத்தை இடையிலேயே நிறுத்தும் படி நேரிட்டது. பிஜேபி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு இது போன்ற கும்பல்களுக்குக் கொம்பு முளைத்துச் சீறிப் பாய ஆரம்பித்து விட்டன.

130 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் பல மதத்தவர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் தத்தம் உரிமையோடு வாழ உரிமைப் படைத்தவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் அதற்கான உரிமையைத் தெளிவாக உறுதிப்படுத்தியும் உள்ளது. இந்தநிலையில் இந்து அல்லாத மக்கள் நடமாடவே முடியாது - அவர்களுக் கென்றுள்ள கருத்துகளை வெளியிடவே கூடாது என்ப தெல்லாம் எத்தகைய அராஜகமும்  - பாசிசமும் ஆகும்.

பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோவில் இந்துக் கடவுளர்கள் படம் இருந்த காகிதத்தில் மாமிசத்தை மடித்துக் கொடுத்ததற்காக அந்த இஸ்லாமியர் கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது.

காகிதத்தையே லட்சுமி என்று அழைப்பதும் உண்டு. அதனை மலம் துடைக்க மேனாட்டார்கள் பயன்படுத்து கிறார்களே - அங்கெல்லாம் சென்று போராட வேண்டியது தானே!

இந்து மதத்தில் பிறந்து வெளிநாடுகளில்  வாழக் கூடியவர்கள்கூட இவ்வாறுதான் செய்கிறார்கள். 

இந்து மதத்தில் எதுதான் கடவுள் இல்லை பூமிகூட பூமாதேவிதான்; அதில் செருப்புப் போட்டு நடக்கலாமா? தண்ணீர்கூடக் கங்காதேவி தான் - அதில் மலங்கழுவலாமா? மாடுகளை குளிப்பாட்டலாமா?

கங்கையில் உயிருள்ள கிழட்டுப் பசுக்களைத் தள்ளி விடவில்லையா? சாராய ஆலைகளின் கழிவுகளைக் கலக்க விடுவதில்லையா?

பன்றிகூட விஷ்ணுவின் வராக அவதாரம்தானே! தந்தை பெரியார்தான் கேட்டார். 'ஸ்ரீமுஷ்ணம் என்ற வராகமூர்த்தி கோவில் வராக அதாவது பன்றிக்குப் பிரீதியான பொருளை வைத்துப் படைப்பீர்களா?' என்ற கேள்விக்கு என்ன பதில்?

உண்மையைச் சொல்லப் போனால் ஹிந்துக் கடவுள்களைப் புராணம் என்ற பெயரில் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் சித்தரித்திருப்பதே இந்துக்கள்தான். அதற்காக வெட்கப்பட வேண்டாமா?

இந்துக் கடவுள்களே சண்டைப்போட்டு இருக்கிறார்கள் - கொலை செய்திருக்கிறார்கள். பாலியல் அதீதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று எல்லாம் எழுதி வைத்தவர்கள் வேற்று மதத்தைச் சார்ந்தவர்களா?

சாமி கைவல்யம் ஒரு முறை ஒரு தகவலைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில், முல்லர் "இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து, சுவாசமிகும் நுரையீரல் எரிந்து விடும்" என்றார் (ஆதாரம்:  கைவல்யம் கட்டுரைகள்-2 "பிராமணர்களைக் குற்றம் சொல்வதேன்?" பக்கம் 21).

இந்த யோக்கியதை உள்ள மதத்துக்காக, அதன் கடவுளுக்காக வக்காலத்து வாங்கி வஸ்தாது காட்டும் மனித உருவத்தில் உள்ளவர்களை என்ன சொல்ல?

பார்ப்பனர்கள் படித்தவர்கள் தான். இருந்தும் இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தைக் கட்டி அழுவதன் நோக்கமே - இதுதான்! பிறப்பின் அடிப்படையில் அவர் களைப் பிராமணன் என்று கூறி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த வைத் திருப்பதுதான்!

No comments:

Post a Comment