பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே-இலங்கையில் இப்போது என்னதான் நடக்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே-இலங்கையில் இப்போது என்னதான் நடக்கிறது?

இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் கீழ், அதிபரின் அலுவலகம் வெற்றிடமாக இருக்கும் போது, ​​நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் இருந்து ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமர்’ இடைக்கால அதிபராக இருக்க வேண்டும்.

அதிபர் அலுவலகம் காலியாகி 30 நாட்களுக்குள் இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், மேலும் வேட்பாளருக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை தேவைப்படும்.

அண்மைய நாட்களில், இலங்கையை பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்டெடுக்க உதவுவதற்காக, மே மாதம் 2ஆவது வாரத்தில் அதிபர் கோட்டாபயவினால் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சேக்களின் நண்பர் என எதிர்ப்பாளர்களால் குறிவைக்கப்பட்டார்.

நிலைமை சரியாகும் முன் இன்னும் மோசமாகிவிடும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் எச்சரித்திருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்க விக்கிரமசிங்க அரசு தோல்வியுற்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிரதமரின் பதவியும் காலியாக இருந்தால், நாடாளுமன்ற தலைவர் தற்காலிக அதிபராவார். ஆனால், விக்கிரமசிங்கே இன்னும் பிரதமராக இருக்கிறார். அதிபர் கோத்தபய பதவி விலகியுள்ளதால் குறைந்தபட்சம் நாடாளுமன்றம் வேறொருவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கும் வரை அவர் அதிபராக இருப்பார்.

விக்ரமசிங்க  விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பால் யாரும் செல்ல முடியாது, வெளியில் இருந்து விஷயங்களைச் செய்ய நாடாளுமன்றத்தை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன், ஒருவர் மக்களுக்குச் செவிசாய்க்க வேண்டும், ஆனால் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும். இலங்கைக்கு அனைத்து கட்சி அரசாங்கம் தேவை. அதற்காக நாம் உழைக்க வேண்டும்” என்றார்.

ராஜபக்சே குடும்பக் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுனாவின் (SLPP) பெரும்பான்மையானவர்கள் விக்ரமசிங்கேவை அதிபர் பதவிக்கு மாற்றுவதற்கு ஆதரவளிப்பதாக சில இலங்கை ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே அவரும் தேர்தலில் வேட்பாளராக இருப்பார் என்று தெரிகிறது. விக்கிரமசிங்கே ஒரு நியமன உறுப்பினர் அவருடைய அய்க்கிய தேசியக் கட்சிக்கு (யூ.என்.பி.) நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை. இலங்கையின் அதிபர் பதவியின் 44 ஆண்டுகால வரலாற்றில், இரண்டாவது தடவையாக இந்த அலுவலகம் வெற்றிடமாக உள்ளது.

இலங்கையின் முதலாவது அதிபர் (executive President) ஜே ஆர் ​​ஜெயவர்த்தனே ஆவார். அவர் 1989 வரை பதவியில் இருந்தார். அவருக்குப் பின் அவரது யூ.என்.பி. சகாவான ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்கு வந்தார். இவர்  SJB தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையாவார்.

1993 ஆம் ஆண்டு மே தினக் கூட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால், பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போதுதான் முதன்முறையாக அலுவலகம் காலியானது.

கொல்லப்பட்ட பிரேமதாசாவுக்கு பதிலாக வேறொருவரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூடும் வரை, அப்போதைய பிரதமராக இருந்த டிங்கிரி பண்டார விஜேதுங்க தற்காலிக அதிபராக பதவியேற்றார்.

மே 7, 1993 இல், பிரேமதாசாவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக நாடாளுமன்றத்தால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மூன்றாவது நிறைவேற்று அதிபராக விஜேதுங்க பதவியேற்றார். 1994 இல் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்லில், எதிர்க்கட்சியான  SLFP  வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஒரு பதவிக் காலத்தின் மத்தியில் அதிபர் பதவி காலியாகவில்லை.

சந்திரிகா குமாரதுங்க பிரதமரானார், பரந்த அதிகாரங்கள் இருந்தபோதிலும், விஜேதுங்க அவரை அரசாங்கத்தை நடத்த அனுமதித்தார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் அவர் போட்டியிடவில்லை. அய்க்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் காமினி திஸாநாயக்க பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது மனைவி  அவருக்குப் பதிலாக போட்டியிட்டார் எவ்வாறாயினும், SLFP  வேட்பாளராக இருந்த குமாரதுங்க, 62 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தீர்க்கமான வெற்றியைப் பெற்றார்.

குமாரதுங்க இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பின் சக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்சே இரண்டு முறை பதவி வகித்தார். 2015 ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். தொடர்ந்து 2019 நவம்பரில் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தார்.


No comments:

Post a Comment