சுயமரியாதைதான் எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படை இதனால் ஏற்பட்ட வளர்ச்சியைத் தடுப்பதுதான் 'நீட்', தேசிய கல்வி உள்ளிட்ட பார்ப்பன சதிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

சுயமரியாதைதான் எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படை இதனால் ஏற்பட்ட வளர்ச்சியைத் தடுப்பதுதான் 'நீட்', தேசிய கல்வி உள்ளிட்ட பார்ப்பன சதிகள்!

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, ஜூலை 24 சுயமரியாதை இயக்கம் விதைத்த சுயமரியாதைக் கொள்கை - திராவிட இயக்கம் விதைத்த சமூகநீதி விதைதான் இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சிக்கான அடிப்படை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

"அய்க்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் திமுக தேர்தல் அறிக்கை- 2021" நூல் வெளியீட்டு விழா மற்றும் "உலகின் பார்வையில் திராவிட மாடல்" கருத்தரங்கம், சென்னை அன்பகத்தில் நேற்று (23.7.2022) மாலை நடை பெற்றது.

 இந்நூலின் ஆசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து (பிரித்தானிய பல் கலைக்கழகம்), மாநிலங்களவை உறுப் பினர் மருத்துவர் கனிமொழி என்.வி.என் சோமு, பொருளாதார அறிஞர், பேராசி ரியர் ஜெயரஞ்சன், எழுத்தாளர் டான் அசோக், மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு அவர்கள் நூலினை வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் அந்நூலினை பெற்றுக்கொண்டு சிறப் புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் ஆசிரியருடைய உரை, நூல் ஆசிரியரை உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல், கேட்டுக் கொண்டிருந்த பல்வேறு தோழர்களையும் இந்நூலை பரப்பவேண்டும் என்ற ஆர்வத்தினைத் தூண்டியது.

கலைஞர் சொல்வார்

ஆசிரியரின் உரையில், 'putting centuries into capsules' என்று பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைப் பற்றி கூறியதற்கு ஏற்ப, பல தகவல்களை இச்சிறிய நூலில், நூலாசிரியர் நமக்கு வழங்கி இருக்கிறார் என்ற குறிப்போடு ஆசிரியரின் உரை தொடங்கியது.  அடி மையாக இருப்பதைவிட, அடிமையாக இருப்பதில் சுகம் கண்டு இருப்பதும், அதில் இருந்து மீளாமல் இருப்பதும் எப்படிப்பட்ட கொடுமை என்பதை விவரித்து, மூன்று வகையாக அடிமைகள் இருப்பார்கள், அதில் நான்காவது வகை தற்போது "எழுச்சிப் பெற்று விட்டோம்" என்று உரைக்கும் இந்த நிலைக்குக் காரணம் திராவிடர் இயக்கம் என்று ஆசிரியர் பதிவு செய்ததை கேட்டு, அரங்கமே உணர்வினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இச்சமூகத்தில் நிலவக்கூடிய ஏற்றத் தாழ்வுகளையும், ஜாதிய கொடுமைகளையும் தெரிந்து கொண்டவர்கள் ஒருபுறம் இருந்தாலும், சிக்கல்கள் எல்லாம் தெரிந்தும் எந்த இயக்கத்தால் பலன் பெற்றார்களோ, பலன் பெற்ற பிறகு அந்த இயக்கத்தை எந்த வகையில் விமர்சனம் செய்கிறார்கள் என்பதை கலைஞர் கூறிய எடுத்துக்காட்டு டன் பதிவு செய்தார். 

ஒருவர் வேலைக்கு செல்லும் வரை பணிவோடு இந்த வேலை கிடைக்க வேண்டும் என்று வந்து நிற்பார். அதே நபர், வேலை கிடைத்து நாற்காலியில் அமர்ந்த பிறகு,'non-brahmin' என்பவர் 'நான் பிராமின்' என்று மாறிவிடுவார் என்ற கலைஞரின் ஓர் உதாரணம் போதுமானது, இன்றும் வேலை, பதவி பெற்றதும் அந்த சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு என்றார். 

தேர்தல் அறிக்கை என்பது, பல கட்சிகளுக்கும் ஏதோ ஒரு அறிக்கை என்ற அளவில் மட்டுமே இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கைதான், விவாதப் பொருளாகவும், சொன்ன வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதமாகவும் அமைந்தது என்ற குறிப்பு சொன்னபோது, அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், "இந்தியாவின் முதல் கதாநாயகன் திமுக தேர்தல் அறிக்கை" என்று பதிவு செய்த வரலாற்று குறிப்பினை ஆசிரியர் பதிவு செய்தார்.

திராவிட இயக்கத்தின் சிறப்பு என்ன? 

இந்தத் திராவிடர் இயக்கத்தினுடைய சிறப்பு என்பதே அறிவை பொதுமை செய்ததுதான். படிக்கக் கூடாது  என்று மனுதர்மமும், சனாதன தர்மமும் சொன்னது மட்டுமன்றி, மீறி படித்தால், படிப்பவன் காதில் ஈயத்தை ஊற்று, நாக்கை அறு என்று எழுதி வைத்த கொடுமை வேறு நாட்டில் உண்டா என்று கேள்வி எழுப்பினார். மற்ற நாடுகளில், நிற பேதத்தால் படிப்பு மறுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், மறுப்பை மீறி படித்தால் இவ்வளவு கொடுமையாக நடத்த எந்த நாடாவது சொல்லி இருக்கிறதா என்று தொடர்ந்து கேள்வியினை தொடுத்தார். ஒவ்வொரு கட்டத்திலும் கல்வியைக் கொடுத்தபோதும், திராவிடர் இயக்கம் சந்தித்த சிக்கல்களை இந்நூல் பதிவு செய்கிறது என்பதை,  இந்நூலின்  47 ஆவது பக்கத்திலிருந்து விவரித்தார். "கல்வியை மய்யமாகக் கொண்ட சமூகநலத் திட்டங்களுக்கான தமிழ்நாட்டின் பாதை நெடும் வரலாற்றைக் கொண்டது. சுதந்திர இந்தியாவிற்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் 1920 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம் பள்ளிக்கு மாணவர்களை ஈர்ப்பதே. மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் நிதிச்சுமையைக் காரணம் காட்டி அப்போதைய பிரிட்டிஷ் அரசு இத்திட்டத்தை சில ஆண்டுகளில் நிறுத்தியது", என்ற குறிப்பை சொல்லி, அதற்குப் பிறகு காமராஜர் ஆட்சியில், எப்படி மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கலை சந்தித்தார் என்பதையும் எடுத்துரைத்தார். 

இப்படியெல்லாம் கல்வி ஒன்றினை மட்டும் ஆயுதமாகக் கொடுத்து, பிள்ளைகளை, தமிழ்நாட்டு மாணவர்களை கல்வி பக்கம் அழைத்து வந்தது திராவிட இயக்கம் என்று பதிவு செய்தார். ஆனால், இன்று அந்த கல்வியை பாழ்படுத்துவதற்குதான் தேசிய கல்விக் கொள்கை, 'நீட்' நுழைவுத் தேர்வு போன்ற பல நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்து திராவிடர் இயக்கம் கொடுத்த கல்வியை பாழ்படுத்தத் துடிக்கிறது ஆரியம். தொடர்ந்து ஏகலைவன், துரோணாச்சாரியார் என்ற புராணங்கள் வருவதற்கு எது காரணம் என்பதையும் பதிவு செய்தார். 

கள் ஒழிப்பு - கல்வி ஒழிப்பே!

1937 இல் ராஜகோபாலாச்சாரியார் பல ஆயிரம் பள்ளிகளை மூடிய போது, அவர் சொன்ன காரணம், சேலத்திலே மது ஆலைகளை மூடியதால் ஏற்பட்ட நட்டத்தின் விளைவாக பள்ளிகளை மூடுகிறேன் என்றார். பலரும் அதை நம்பிய போது, பெரியார் ஒருவர் தான் தனது நுண்ணாடிக் கொண்டு அதனை சரியாக அடையாளம் கண்டு எதிர்த்தார். "தமிழகத்தின் கள் ஒழிப்பு என்பதே கல்வி ஒழிப்புதான்" என்று பெரியார் சொன்னதை ஆசிரியர் நினைவுபடுத்தினார்.

மிக முக்கியமாக இந்தத் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்ட "நாப்கின் வழங்கும் திட்டம்", பல பெண்கள் இன்றைக்கும் மாதவிடாய், மாதவிலக்கு என்றால், சொல்ல கூச்சப்படக்கூடிய சூழலை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு கிராமங்களிலும், மருத்துவமனைகளிலும் நாப்கின்களை வைத்து விடுவார்கள், தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளலாம் என்று சிந்திப்பது ஒரு சிறந்த பார்வை என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

அனைத்திற்கும் மேலாக கைம்பெண் உரிமை, அந்த கைம்பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மறுவாழ்வு திட்டம் என்பது மிக உயர்ந்த சிந்தனை. காரணம், இருப்பதிலேயே மிகக் கொடுமையானது இந்த கைம்பெண் முறை. அதிலும், ஒரு திருமண வீட்டுக்கு சென்றால், தாலியையோ, தேங்காயையோ வைத்து, அதை அனைவரும் தொட்டு வணங்குவதற்காக அனைவரிடத்திலும் கொண்டு வருவார்கள். ஆனால், விதவைப் பெண்ணிடம் காட்டாமல், அவரைத் தாண்டி, மற்றொருவரிடம் கொண்டு செல்வார்கள். விதவைப் பெண் அதை தொட்டு வணங்க முடியாது. ''நான் எப்படி முன்னாடி வருவது, நான் எல்லாம் அங்க வரக்கூடாது'' என்று சொல்வார். அப்படி சொல்பவர், யார் என்று பார்த்தால் அந்த மணமகனின் தாயாக இருப்பார். இது எவ்வளவு கொடுமையான நிலை. இதை பெரியார் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் கூட, "கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்" என்று குறிப்பிட்டு இருப்பார்கள். கணவனை இழந்து விட்டால், அடுத்து அவருக்கு வாழ ஒன்றுமில்லை என்று இருந்த நிலை. அதை எல்லாம் மாற்றி கைம்பெண்களுக்கு மன உறுதியை, தன்னம்பிக்கையை கொடுக்கும் விதமாக கைம்பெண் மறுவாழ்வு திட்டம் தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டது. அதுதான் 'திராவிட மாடல்' என்றார்.

ஆதிக்கத்தை எதிர்க்கும் ஸ்டாலின் ஆட்சி!

இன்றைக்கு நடைபெறக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது, ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கக்கூடிய ஆட்சியாக இருக்கிறது. சாதாரணமான மற்ற மற்ற ஆட்சிகளைப் போல் இல்லை. பல நெருக்கடிகள், பொருளாதாரப் பிரச்சினைகள், முழு சுதந்திரமான ஆட்சியாக இருக்க முடிவதில்லை. இந்த நிலையிலும், ஆதிக்கத்தை எதிர்த்து ஆட்சி செய்கிறது.

மற்ற நாடுகளில் வறுமையில் புரட்சி ஏற்பட்டது. ஆனால் இங்கே எவ்வளவு வறுமை நேரினும், புரட்சி ஏற்படாததற்கு காரணம், இங்கு இருக்கக்கூடிய மதம். ஒரே வரியில் பார்ப்பனர்கள், 'எல்லாம் அவங்க அவங்க தலையெழுத்து', 'அவங்க விதி' என்று, இந்த வறுமையின் போது கூட புரட்சி ஏற்படவிடாமல் தடுத்துவிட்டனர். இதெல்லாம் எதிர்த்து தான் இன்றைக்கு திராவிடர் இயக்கம் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டிருக்கிறது என்றார்.

மண்டல் ஆணையமும் - பெரியார் இயக்கமும்!

 மண்டல் கமிஷன் அறிக்கையில், மிகத் தெளிவாக பெரியார் இயக்கத்தைப் பற்றி குறிப்பிட்டபோது, "the battle was fought not on the streets, but on the minds of the people", தெருவில் சண்டை செய்யவில்லை, மாறாக மக்கள் உள்ளத்தில் மாற்றத்தைக் கொண்டு வர போராடியிருக்கிறார்கள் என்று சொன்னது எவ்வளவு பொருத்தம் என்பதை பதிவு செய்தார்.

பொதுவாக திராவிடர் கழகத்திற்கு இரண்டு வகையான உறுப்பினர்கள் உண்டு. வெளிநாட்டில் என்னை பேட்டி கண்டபோது, பேட்டி எடுத்த பெண், ''உங்கள் அமைப்பில் எத்தனை உறுப்பினர்கள்'' என்றார்.  எங்கள் அமைப்பில் இரு விதமான உறுப்பினர்கள் உண்டு என்றேன். ஒன்று visible members,, மற்றொன்று invisible members  என்றேன். எழுதியவர், திடுக்கிட்டு பார்த்தார். "Are you running an underground movement" என்றார். இல்லை, இல்லை கண்ணுக்குத் தெரியும் உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வெளிப்படையாக வருவார்கள். அதையும் தாண்டி, ஆதரவாளர்கள் ஏராளம் என்று பேட்டி எடுத்தவரிடம் விவரித்த தகவல்களை, அரங்கத்தில் எடுத்துக் கூறினார். அப்படி ஏராளமான ஆதரவாளர்களைப் பெற்றது இந்த திராவிடர் இயக்கம். எத்தனை மாடல் இதனுடன் போட்டி போட்டாலும் இறுதியில் வெல்வது 'திராவிட மாடல்' தான், என்று உரக்க சொன்னார். காரணம், இது கற்கோட்டை. இதை தகர்க்க யாராலும் முடியாது என்றார்.

வெளிநாடுகளிலும் சுயமரியாதை

நியூயார்க்கில், ஒரு மனநல மருத்துவர் சில நாள்களுக்கு முன்னாள், "search for self-respect" என்ற நூலினை எழுதி இருக்கும் செய்தியைக் குறிப்பிட்டு,  இந்த சுயமரியாதை என்ற வார்த்தைக்கு ஈடாக வேறு எந்த வார்த்தையும் இல்லை, தந்தை பெரியார் எவ்வளவு தொலைநோக்கோடு இந்த சுயமரியாதை என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பார் என்று விளக்கினார். தற்போது தான், மேலை நாடுகளில் சுயமரியாதையே தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், சுயமரியாதையை எந்த எல்லைக்கு நாம் எடுத்துச் சென்றிருக்கிறோம் அதுதான் திராவிடர் இயக்கத்தின் வெற்றி. இந்த சுயமரியாதை இயக்கத்தில், இந்த திராவிடர் இயக்கத்தினுடைய மணிகளாக இன்றைக்கு பல சுதாகர் பிச்சை முத்துக்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த நூலை படிப்பது மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரப்புவோம்.

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!

என்று தனது உரையை ஆசிரியர் நிறைவு செய்தார்.

பல வரலாற்றுக் குறிப்புகள், பல அரிய செய்திகள், பல சான்றுகள் நிறைந்த  ஆசிரியரின் இந்த உரை கேட்ட அனைவரையும் நிச்சயம் இந்த நூலை மட்டுமல்ல, திராவிடத்தையும் பரப்புவோம் என்று சூளுரைக்க வைத்திருக்கும்.

No comments:

Post a Comment