நெருப்புடன் விளையாடாதீர்கள் ['தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கம்] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

நெருப்புடன் விளையாடாதீர்கள் ['தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கம்]

இந்தியாவின் முப்படைகளுக்கும் அதிகாரிகள் அல்லாத ராணுவ வீரர்கள் அக்னிபத் (நெருப்பு பாதை அதாவது தீ பாதை) என்ற திட்டத்தின் கீழ் நியமிக்கப்படுவார்கள் என்று இந்திய ஒன்றிய அரசு  ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று அறிவித்தது. நியமன நடைமுறையை மட்டுமல்லாமல் ஒரு ராணுவ வீரரின் பண்பாட்டுக்கும் அடிப்படை யிலேயே இடையூறு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவ தற்கான தனது காரணங்களை அரசு பட்டிய லிட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்புத் துறையை மறுமலர்ச்சி கொண்டதாக இந்தத் திட்டம் ஆக்கும் என்று நிபுணர்களில் ஒரு பிரிவினர் - யாரோ சொல்லி வைத்தது போல புகழ்ந்து கூறத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் பாதுகாப்பு சமூகத்திலும் அரசியல் நோக் கர்களில் பலரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தவர்களாக தங்களது கருத்தை வெளியிடத் தயங்குகின்றனர். 

ராணுவத்தில் சேருவதற்கு விரும்பிய இளை ஞர்கள் தெருக்களில் இறங்கி பல மாநிலங்களில் வன்முறைச் செயல்களில் இறங்கியும் போராடத் தொடங்கி விட்டனர். கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ராணுவ நியமனங்கள் செய்யப்படாத நிலையில் ஏற்கெனவே சோர்வும் வெறுப்பும் அடைந்து போயுள்ள இந்த இளைஞர்கள் வறுமையின் பிடிகளில் இருந்து தப்பிப்பதற்கு உள்ள வாய்ப்பினை இந்த நியமன நடைமுறை தடுத்து நிறுத்திவிடும் என அஞ்சுகின்றனர். இவர்கள் சுமாரான படிப்பும் தகுதியும் மட்டுமே பெற்றுள்ளவர்கள் ஆவர். தற்போதுள்ள 15 ஆண்டு கால பணியும் அவர்களின் ஆயுட்காலம் முழுவதிலும் ஓய்வூதியமும் தரும் பழைய நடைமுறைக்கு மாறாக - ஆறு மாத பயிற்சி உள்ளிட்ட இந்த நான்கு ஆண்டு பணிக்குப் பின் எந்த ஓய்வூதியத்தையும் இந்த திட்டம் அளிப்பதில்லை. ஆனால் அதற்குப் பின் நிரந்தர ராணுவ சேவையில் நியமிக்கப்படும் வாய்ப்பு அவர்களில் கால் பங்கு வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். எஞ்சியவர்கள் 11.71 லட்ச ரூபாயுடன் நாட்டு நிர்மாண திட்டத்தில் சேவை செய்வதற்கு சமூக வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். 

46,000 இளைஞர்கள் நியமிக்கப்படும் இந்தத் திட்டத்திற்கான நியமனங்களின் நடைமுறை 90 நாட்களுக்குள் தொடங்கப்பட உள்ளன. இளமையும் தகுதியும் நிறைந்த ராணுவப் படை வீரர்களைக் கொண்ட ராணுவத்தைக் கட்டமைக்க இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று அரசு கூறுகிறது. கூடுதல் மதிப்பீடுகளாக ராணுவ ஒழுக்கம் கோட்பாடு மற்றும் மாறி வரும் தொழில் நுட்ப ஆற்றல் பயிற்சி அவர் களுக்கு அளிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்த நியமனமும் நிரந்தர அடிப்படையில் இனி செய்யப்பட மாட்டாது. 

ஆனால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நெருக் கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவம் தயார் நிலை யில் இருப்பதை குறுகிய காலத்துக்கு செய்யப்படும் இந்த புதிய நடைமுறை பாதிக்கும் என்று பல விமர்சகர்களும் பா.ஜ. கட்சியின் கூட்டணி கட்சியினரும்கூட கவலை தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர்களின் பணி இப்போது ஒப்பந்தப் பணியாக மாறி விட்ட நிலையில் பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், மரியாதை ஆகிய வற்றைப் பெறுவதற்கான ஊக்கத்தை இந்த ராணுவ வீரர்கள் பெற மாட்டார்கள். ராணுவ நியமனம் என்பது வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்ட மாகக் கருதப் படக்கூடாது என்ற வாதம் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பது முதல் ராணுவ வீரர்கள் நியமனம் வரை நாட்டின் பொருளாதாரத்தில் பாதுகாப்புத் துறை ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. 

வேலை வாய்ப்பு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்குவதால் அது பற்றிய கவலையை அவ்வளவு எளிதாக அலட்சியப் படுத்தி ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இது செலவைக் குறைக்கும் ஒரு வழியே தவிர வேறல்ல என்ற அரசின மீதான குற்றச் சாட்டு மிகுந்த அளவில் நம்பத் தகுந்ததாவே இருக்கிறது. இவற்றை யெல்லாம் பரிசீலனை செய்து இந்த திட்டத்தை நிறுத்தி விட்டு அரசியல் கட்சிகள் மற்றும் பலதரப்பட்ட வல்லுநர்களை கலந்து பேசி ஒன்றிய அரசு இந்தப் பிரச்சினையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

  நன்றி : 'தி இந்து' 18-06-2022 

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment