செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

ஆளுநர் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவரே தவிர - சனாதனத்தைப் பரப்ப நியமிக்கப்பட்டவரல்ல!

இத்தகைய ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்; திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு!

சென்னை, ஜூன் 17 ஆளுநர் என்பவர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவரே தவிர, சட்டத்திற்கு எதிராக மக்களை ஜாதி வாரியாகப் பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும் சனாதனத்தைப் பிரச்சாரம் செய்பவர் அல்ல. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் சனாதனத்தைப் பரப்புபவராகவும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை ஊறுகாய் ஜாடியில் போட்டு வைப்பவராகவும் இருப்பதால், இவர் தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம்  - அவரை ஒன்றிய அரசு திருப்பி அழைத்துக் கொள்ளவேண்டும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

சென்னையில் நேற்று (16.6.2022) மாலை சனா தனத்தை ஆதரித்து அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் 

கொள்கைப் பரப்புச் செயலாளர்போல 

ஆளுநர் நடந்துகொள்கிறார்

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வந்தும், தன்னுடைய கடமை களை அவர் தொடர்ந்து செய்ய மறுக்கிறார். நம்முடைய மக்கள் வரிப் பணத்தில் அவர் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினுடைய  கொள்கைப் பரப்புச் செயலாளரைப் போல நடந்துகொள்கிறார்.

ஆளுநர் மாளிகையை, 

ராஜ்பவனை பஜனைக் கூடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்

அதுமட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஓராண்டாக, இந்தியாவிலுள்ள மாநிலங்களில், தமிழ்நாடுதான் முதன்மையான மாநிலம்; முதல் முதலமைச்சர் என்ற பெருமையை அடைந்துள்ள தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 21 மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் புறக்கணித்து, அவர் அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட அந்த உறுதி மொழியை மறுத்து, அரசமைப்புச் சட்ட கருத்து களை செய்யத் தவறி, அவர் முழுக்க முழுக்க 

ஆர்.எஸ்.எஸ். பஜனைக் கூடமாக - ஆளுநர் மாளி கையை, ராஜ்பவனை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக, இதோ என்னுடைய கைகளில் இருக்கக்கூடிய 21 மசோதாக்கள் அவரிடம் ஊறுகாய் ஜாடியிலே ஊறிக் கொண்டிருக்கின்றன எந்தவிதமான பதிலும் இல்லாமல்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,  இரண்டு மசோதாக்கள் - தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழக திருத்த மசோதா - தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழக திருத்த மசோதா 2020 ஆவது ஆண்டிலே நிறைவேற்றப்பட்டது சட்ட மன்றத்தில் பழைய அரசாங்கம். இன்னுங்கேட்டால், பா.ஜ.க.வோடு கூட்டணியாக இருக்கின்ற அ.தி.மு.க. அரசு சார்பாக நிறைவேற்றப்பட்டு,  ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா, இந்தப் புதிய ஆளுநரிடம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

மூன்றரை மாதங்களுக்கு 

மேலாக...

புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற இவருக்கு, நிலு வையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக் கின்ற கடமை ஒரு ஆளுநருக்கு உண்டு. ஆனால், அந்த இரண்டு மசோதாக்களையும் தாண்டி,

உங்களுக்கெல்லாம் தெரியும், நீட் தேர்வு மசோதா இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்ததைக் கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்திற்கு அறிவிப்பு கொடுத்த பிறகுதான், குடியரசுத் தலைவருக்கு, அனுப் பினார் தமிழ்நாடு ஆளுநர். ஏறத்தாழ மூன்றரை மாதங்களுக்கு மேலாக அந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 19 மசோதாக்களில் அவர் இன்னமும் கையெழுத்துப் போடாமல் இருக்கிறார். அல்லது அந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்ப அவருக்கு உரிமை உண்டு எதற்காகத் திருப்பி அனுப்பு கிறார் என்கிற காரணங்களை சொல்ல வேண்டும்.

அந்த மசோதாக்களைத் திருப்பியும்  அனுப் பாமல், கையெழுத்தும் போடாமல் - மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கின்ற ஓர் அரசை, முடக்க வேண்டும் என்று சொல்லி, தொடர்ந்து இந்த ஆட்சிக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே அனுப்பப்பட்டு இருக்கிற ஒரு ஆளுநராக தன்னை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். அதைக் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம்.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், ஆளுநருக் கென்று தனிக் கொள்கை இருக்க முடியாது.

ஏனென்றால், அவர் தனிப்பட்ட முறையிலே வீட்டிற்குச் சென்று அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

ராம பஜனை செய்யலாம் அல்லது ராமன் கோவிலில் நிரந்தமாக உட்கார்ந்திருக்கலாம் - அது அவருடைய உரிமை - அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.

ஆனால், தமிழ்நாடு ஆளுநராக அவர் இருந்து கொண்டு, முழுக்க முழுக்க சனாதன தர்மத்தைத்தான் இங்கே நான் பரப்புவேன் என்று சில நாட்களுக்கு முன்பு சொன்னார்.

காசி இந்து கல்லூரி வெளியிட்ட புத்தகம்

அவர் சொல்கின்ற சனாதன தர்மம் என்றால் என்ன?

முழுக்க முழுக்க மனுதர்மம். இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நான் ஆதாரத்தோடு உங்களுக்குச் சொல்கிறேன்.

சனாதன தர்மம் என்றால் என்ன என்பதைப்பற்றி, காசி இந்து பல்கலைக் கழகம் 106 ஆண்டுகளுக்கு முன்பு இந்து கல்லூரியாக இருந்தது. பிறகுதான் அது பல்கலைக் கழகமாக, பண்டித மாளவியாவால் மாற்றப் பட்டது.

'சனாதன தர்மம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத் தையே வெளியிட்டு இருக்கிறார்கள் அங்கே.

அந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு பகுதியை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏனென்றால், மதச்சார்பற்ற ஓர் அரசு என்று பீடிகை யுள்ள, சோசியலிசத்தைப் பரப்பவேண்டும் என்று பீடிகை உள்ள ஓர் அரசு, அதனுடைய ஆளுநர், அதன்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர் எதைச் செய்கிறார்?

சனாதன தர்மம் என்றால் என்ன என்பதைபற்றி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ளதை அப்படியே உங்களுக்குத் தமிழாக்கி எடுத்துச் சொல் கிறேன்.

ஆதாரப்பூர்வமாக சொல்கிறோம்

சனாதனத்திற்கு அதிகாரபூர்வமாக இந்து கல்லூரி யில் பாடத் திட்டமாக வைக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய கருத்து.

எவ்வளவு தவறான ஒன்றை ஒரு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக செய்கிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்கிறோம். 

எங்களுக்கு யாராவது பதில் சொல்லட்டும்; இதற் காக வாதாடுவதற்கு வந்தால், வரட்டும் யாரும். அய்யப்பன் இலவச சொசைட்டி என்ற பெயராலே புத்தகம் வெளியிட்டவர் சொல்லியிருக்கிறார், வாதாட முடியுமா? என்று.

தாராளமாக, நாங்கள் எல்லா இடங்களிலும் வாதாடு வதற்குத் தயாராக இருக்கிறோம்.

ஆனால், பட்டிமன்றம் நடத்துவதா ஒரு ஆளுநரு டைய வேலை? தனிப்பட்ட முறையில் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் வரட்டும், நாங்கள் வாதாடுகிறோம்.

நமக்கும், மற்றவர்களுக்கும் இருக்கின்ற வேலையே தவிர, அது ஒரு ஆளுநருடைய வேலையல்ல.

சனாதன தர்மம் என்றால் என்ன?

''சனாதன தர்மம் என்றால், நிரந்தர மதம், புராதான சட்டம் என்று பொருள். பல ஆண்டுகளுக்குமுன் வேதங்கள் என்ற பெயரால் மக்களுக்கு வழங்கப்பட்ட புனித நூல்களை அடிப்படையாகக் கொண்டது சனாதன தர்மம்.

ஆரிய இனத்தின் முதல் தேசத்தில் புழங்கிய மதம் என்பதால், இதற்கு ஆரிய மதம் என்று பெயர் உண்டு.

ஆரியா என்றால், கண்ணியமான, உன்னதமான என்று பொருள். ஓர் உயர்ந்த இனத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்குக் காரணம், தோற்றத்திலும், குண நலன்களிலும்  அவர்கள் சிறந்து விளங்கியதுதான். உலக வரலாற்றில் வேறு எந்த இனமும் அவர்களுக்கு இணையாக இருந்ததில்லை.

முழுக்க முழுக்க இந்த இனத்தின் முதல் குடும்பங்கள், இந்தியா என்று இப்பொழுது அழைக்கப்படும் வட திசைப் பகுதி நிலத்தில் குடியேறியவை.

அவர்கள் அப்படி குடியேறிய வடதிசைப் பகுதி ஆரியவர்த்தா என்று அழைக்கப்பட்டது.

ஆரியர்கள் இங்கே வாழ்ந்ததால் அந்தப் பெயர் கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம்வரை நீண்டு பரவி இருந்த அந்தப் பகுதி ஹிமவான் மற்றும் விந்தியா என்னும் இரு மலைகளுக்கு நடுவே அமைந்திருந்ததால், அந்தப் பகுதிகளை ஆரிய வர்த்தா என்று சொல்லி, இதற்கு ஜாதிகள், வர்ண தர்மம் - நான்கு வருணப்படி என்ன தர்மம் இருக்கிறதோ அதைக் கடைப்பிடிக்கவேண்டும்.

பிராமணர்கள் பிராமண தர்மத்தையும்,

ராஜபுத்திரர்கள் அதாவது சத்திரியர்கள், சத்திரிய தர்மத்தையும்,

வைசியர்கள், வைசிய தர்மத்தையும்,

சூத்திரர்கள் என்ற நான்காவது பிரிவினர் அதை அப்படியே செய்யவேண்டும்'' என்று கூறுகிறது அந்நூல்!

இன்னமும் ஜாதியை, வருண தர்மத்தை மீண்டும் அழுத்தந்திருத்தமாக சொல்வது, பரப்புவதுதான் இந்த சனாதன தர்மம்.

இது முற்றிலும் பிரியாம்பிள் என்று அரசமைப்புச் சட்டத்தின் முன்னால் எடுக்கக்கூடிய,

Sovereign, Socialist, Secular and Democratic Republic  என்ற அய்ந்து அம்சங் களுக்கு முற்றிலும் விரோதமானது. 

தமிழ்நாடு ஆளுநர், இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய  159 ஆவது பிரிவின்படி, அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழி - இந்த அரசமைப்புச் சட்டத்தின்படி நான் நடந்துகொள்வேன். இந்த அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவேன்; இந்த அரசமைப்புச் சட்டத்தின்படி நடப்பதுதான் அவரு டைய கடமை  என்று ஆக்கியிருக்கிறார்கள்.

ஆளுநர், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கிறார்

ஆகவேதான் நண்பர்களே, இவர் தன்னுடைய கடமையிலிருந்து தவறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்டிருக்கிறார். சனாதனம் என்ற பெயராலே, மீண்டும் ஜாதி, தீண் டாமை என்று சொல்லக்கூடியவைகளை ஆணி அடித்துக்கொண்டு பரப்பிக் கொண்டிருக்கிறார். இவ் வளவும் நம்முடைய மக்களின் வரிப் பணத்திலே நடந்துகொண்டிருக்கிறார்.

அதேநேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி -  மக்களுடைய கருத்துகளைப் பிரதிபலிக் கக்கூடிய ஆட்சி - தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே, தன்னுடைய கருத்துகளையெல்லாம் பதிவு செய்து வைத்திருக்கக்கூடிய ஓர் ஆட்சி - அதை செயல்படுத்த மசோதாக்களாக, சட்டவடிவங்கள் கொண்டு வருகின்ற நேரத்தில், அதை வேண்டுமென்றே கிடப்பிலே போட்டு வைத்திருக்கிறார்.

ஆளுநர்கள் தங்கள் இஷ்டம்போல் 

நடக்க உரிமையில்லை

உச்சநீதிமன்றம், பேரறிவாளன் வழக்கின் தீர்ப் பிலே, எப்படி ஆளுநர்கள் தங்கள் இஷ்டம்போல் நடக்க உரிமையில்லை. எது அரசாங்கத்தினுடைய கொள்கையோ, அதைப் பிரதிபலிப்பதுதான்.

அரசாங்கத்தினுடைய கொள்கை இரு மொழிக் கொள்கை என்றால், அந்த இருமொழிக் கொள்கை யைத்தான் சொல்லவேண்டும்.

எப்படி ஆளுநர் உரை என்பது, அரசாங்கத்தி னுடைய திட்டத்தை அவர் படிக்கக் கடமைப்பட்டவர்.  இதை மக்களுக்குப் பரப்புவதற்கே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆளுநர் அவர்கள் சொன்னதைத் திரும்பப் பெறவேண்டும். அதுமட்டுமல்ல, கிடப்பிலே போட்ட மசோதாக்களை உடனடியாக அவர் கையெழுத்துப் போட்டோ அல்லது அவருக்கு ஒப்புதல் இல்லை யானால், அந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்.

அதன்மூலமாக மீண்டும் சட்டப்பேரவையில் அந்த மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்புவார்கள்.

அந்த மசோதாக்களில் 

எந்த முரண்பாடும் இல்லை

அரசமைப்புச் சட்டம் 200 ஆவது விதியின்படி, எந்த முரண்பாடும் அந்த சட்டங்களில் இல்லை என்பது, சட்டம் படித்த எங்களுக்கு, அய்யா நீதிபதிகளுக் கெல்லாம் தெளிவாகத் தெரியும்.

ஆகவேதான், தமிழ்நாடு ஆளுநர் தன்னுடைய கடமையிலிருந்து தவறியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது எடுக்கப்பட்ட பதவிப் பிரமாணத்தின்மீது எடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு எதிராக நடந்துகொள்கிறார் என்று நேரிடையாகக் குற்றம் சொல்கிறோம்.

இந்தப் போராட்டம் ஒரு தொடக்கமே தவிர, 

இது முடிவல்ல

தமிழ்நாடு ஆளுநர், தன்னுடைய கடமையைச் செய்யாத காரணத்தினால், தமிழ்நாட்டிலிருந்து அவர் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஜனநாயக ஆட் சியை முடக்குகிறார் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒரு தொடக்கமே தவிர, இது முடிவல்ல.

இந்த நிலை நீடித்தால், நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டமாக வெடிக்கும், வெடிக்கும்.

தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவு

செய்தியாளர்: ராணுவம், பொருளாதாரத்தைவிட, ஆன்மிகத்தினுடைய வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார். மற்ற நாடுகள் போன்று அரசர்களாலும், மற்றவர்களாலும் இந்தியா உருவாக்கப்படவில்லை; முனிவர்களாலும், ரிஷிகளாலும், சனாதன தர்மத்தினுடைய ஒலியினாலும் உருவாக்கப்பட்ட நாடு என்று சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? தொலைக்காட்சியின்மூலம் தெரிந்து கொண்டீர்கள். எந்த முனிவர் அந்தத் தொலைக் காட்சியைக் கண்டுபிடித்தார்?

உதாரணத்திற்குச் சொல்கிறேன், ஆளுநர் பீகா ருக்குச் செல்கிறாரே, எந்த முனிவர் ஏரோப்பிளேனை கண்டுபிடித்தார்?  இதற்குப் பதில் சொல்லட்டும்.

ஆளுநருடைய சனாதனம் முக்கியமா? விஞ்ஞானம் முக்கியமா?

அவருடைய அறியாமையை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுவது நமக்கு வெட்கமாக இருக்கிறது. காரணம், இவர் தமிழ்நாட்டு ஆளுநர் என்று பெயர் வரும்பொழுது, தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவு.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment