அடுத்த 50 ஆண்டுகளில், பருவநிலை மாறுதலால் பல சீர்குலைவுகள் நிகழக் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, பாலூட்டிகள், பிற பாலூட்டி இனங்களுக்கு வைரஸ் தொற்றுக்களைப் பரப்புவது அதிகரிக்கும். அதுவும் எவ்வளவு தெரியுமா? வரும் 50 ஆண்டுகளில் 15 ஆயிரம் புதிய வைரஸ் தொற்றுக்கள் பரவும் என்கிறது 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு. புவி வெப்பமாதல் அதிகரிக்கும்போது, பாலூட்டிகள் குளிர்ச்சியான பிரதேசங்களில் நெருக்கியடித்து வாழ நேரிடும். இந்த நெருக்கத்தால், தொற்றுக்கள் எளிதாகப் பரவத்துவங்கும் என்கிறது அந்த ஆய்வு. மேலும், கடல் மட்டத்திற்கு அதிக உயரத்தில் உள்ள இடங்களில் தான் ஏற்கெனவே பல்லூயிர் அடர்த்தி அதிகம். எனவே அத்தகைய இடங்கள் அதிகமுள்ள ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் பெருந்தொற்றுத் தாக்குதல் எளிதில் நிகழும். குறிப்பாக, மனித அடர்த்தி அதிகமுள்ள ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி மற்றும் இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள், அடுத்த அரை நூற்றாண்டில் அதிகமான தொற்றுக்களை சந்திக்க நேரிடும்.
இதனால், ஒன்று மட்டும் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இனி வரும் ஆண்டுகள், வெப்பம் தகிப்பவையாக இருப்பதோடு, நோய் மலிந்தவையாகவும் இருக்கப்போகின்றன.
No comments:
Post a Comment