ஹிந்துத்துவா சிந்தனையால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

ஹிந்துத்துவா சிந்தனையால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள்!

 மத்திய மேற்கு மற்றும் மேற்கு தென் மேற்கு கருநாடக மாவட்டங்களில் மாம்பழங்களை வாங்க இந்த ஆண்டு யாரும் வராததால் பறித்த மாம்பழங்கள் அழுகி விட்ட தாகவும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித் துள்ளதாகவும் மாம்பழ விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

 மாம்பழப் பருவமான மார்ச் முதல் மே வரை மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு கருநாடகாவில் விளையும் மாம்பழங்கள் - அதிகம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும்.

சேலத்தில் உற்பத்தியாகும் மல்கோவா மாம்பழம் எவ்வாறு சுவையானதோ, அதே போல் கருநாடகாவின் மேற்குப் பகுதி மாம்பழங்களும் சுவையானவை.

மாம்பழம் விளையும் ஒவ்வொரு பருவ காலத்திலும் மேற்கு மற்றும் மத்திய கருநாடகாவில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகும். ஆனால் இம்முறை கருநாடகாவில் இருந்து மாம்பழங் களை வாங்கி ஏற்றுமதி செய்யும்  நிறுவனங்கள் தள்ளாடு கின்றன.

முன்பதிவு கொடுத்தும் முன்பணம் எதுவும் வராத காரணத்தால் விவசாயிகள் மாம்பழங்களை   விற்க முடி யாமல் குவித்து வைத்துள்ளனர். இதனால் மாம்பழங்கள் வெம்பி அழுகத்துவங்கி விட்டன.

பழங்களின் ஏற்றுமதியில் தாய்லாந்து முதலிடம் வகிக்கிறது, பர்மா, வியட்நாம் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்து பழங்களை வாங்கி தாய்லாந்து ஏற்றுமதி செய்து வருகிறது.

மாம்பழப் பருவ காலங்களில் இந்தியா தாய்லாந்திற்குப் போட்டியாக எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு ரமலான் மாதம் என்பதால் மாம்பழங்கள் அதிகம் ஏற்றுமதி ஆகும் என்று நினைத்து கருநாடகாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகக் கடன் வாங்கி முதலீடு செய்தன.

இந்த நிலையில், ஜனவரி முதல் கருநாடகாவில் தொடர்ந்து நடந்துவரும் இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரை காரணமாக வளைகுடா நாடுகளுக்காக மாம்பழங்களை  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள்  ஒட்டுமொத்தமாக தாய்லாந்து பக்கம் சென்று விட்டன.

முக்கியமாக தாய்லாந்து  மற்றும் வியட்நாமிலிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய அதிக அளவில் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நிறுவ னங்கள், இந்த ஆண்டு வழக்கத்தைவிட 15 மடங்கு அதிகம் மாம்பழ தேவை வந்துள்ளதால் நாங்கள் பர்மா விலிருந்து வரவழைத்துள்ளோம் என்று கூறியுள்ளன.

மாம்பழப் பருவத்தில் நல்ல வருவாயை எதிர்பார்த்து கடன்வாங்கி விவசாயம் செய்திருந்த கருநாடக விவ சாயிகள் ஏற்றுமதி தேவை எதுவும் வராததால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வாக்கு வங்கி அரசியல் லாபத்திற்காக  ஹிந்துத்துவா அமைப்புகளால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் வெறுப்புப் பரப்புரைகள், வன்முறைகள் இப்போது ஹிந்து விவசாயிகளை கடுமையாக பாதித் துள்ளது.

இதனை அடுத்து ஹிந்து விவசாயிகள், எந்த ஹிந்துத்துவ அமைப்புகள் வெறுப்புப் பரப்புரைகளை செய்தார்களோ அவர்கள் எங்களிடமிருந்து மாம் பழங்களை வாங்க வேண்டும் - இல்லையென்றால் நாங்கள் பெரும் கடனில் வீழ்ந்துவிடுவோம் என்று புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பி.ஜே.பி.யின் மதவாத அரசியல் எந்தெந்த தடங்களிலும் தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன பார்த்தீர்களா?. மேலும் பல வகைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

குறிப்பாக பெட்ரோல், டீசலை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் பிஜேபியின் ஹிந்துத்துவா சிந்தனைகளும், நடவடிக்கைகளும் இதன்மீதும் தாக்கத்தை ஏற்படுத் தினால் நாடே பெரும் பொருளாதார வீழ்ச்சி என்ற சகதிக்குள் மூழ்கும் அபாயம் ஏற்படலாம்.

ஒன்றிய அரசு நாலாத் திசைகளிலும் திறந்த மனத்தோடு சிந்தித்துச் செயல்பட வேண்டும். நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும், மதம் அவரவர் தனிப்பட்ட பிரச்சினை - அதில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

No comments:

Post a Comment