இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (5) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (5)

அன்னையார் - அம்மூவர், அய்யா சி.டி. நடராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட உயில் சாசனத்தில் - சென்னை அரசினர் பொது மருத்துவமனையில்(G.H) தனது உடல் நலம் குன்றி இருப்பதால், தனது எண்ணப்படியான ஏற்பாட்டினைச் செய்திட, எனது சார்பில் கே. வீரமணி S/o.C.S.கிருஷ்ணசாமி அவர்களை நியமனம் செய்கிறேன் என்றார். வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்களை அழைத்து சாட்சியாக இருக்க கையொப்பம் வாங்கும் ஏற்பாடு சென்னை பொது மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டில் அம்மூவர் முன்னிலையில் - நடந்தபோது எனக்கு அம்மாவுக்கு ஏதும் அப்படி நிகழ்ந்து விடக் கூடாது என்றும், நாம் அதை செய்யும் வாய்ப்பு வந்தால் அதை மனதால் எப்படி தாங்கிக் கொண்டு நிறைவேற்றுவது என்றும் நினைத்த வுடன் அவர்கள் முன்னிலையில் அழுதே விட்டேன். அவர்கள் அனைவரும் என்னை சமா தானப்படுத்தி ஆறுதல் கூறினர். அந்த அறையில் அப்போது நிலவிய ஒரு இறுக்கமான சூழ்நிலை இப்போதும் என் நெஞ்சை உலுக்குகிறது.

என்னைப் பார்த்து அம்மா மெல்லிய குரலில், "நீ என்ன இவ்வளவு கோழையாய் இருக்கிறாய்" என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். அவரது கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் கசிந் ததையும் அனைவரும் கண்டனர்.

நல்ல வாய்ப்பாக, அன்னையார் அவர்கள் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து 'டிஸ்சார்ஜ்' ஆகி பெரியார் திடலுக்கு வந்தார்.

எனக்கு நிம்மதிப் பெருமூச்சு. அம்மா நமது ஆடிட்டரை (திருவாளர் ந. சுரேந்தர் B.B. Naidu and Sons)  அழைத்து வரும்படி எனக்கு "ஆணை"யிட்டார்கள். உடனே அவரை அழைத்து வந்து அம்மாவைச் சந்திக்க வைத்தேன். அய்யா காலத்தில் தனி ஆடிட்டர் கிடையாது.  வருமான வரித் தொல்லை ஏற்பட்டு கணக்குகளை அத்துறை கேட்டபோது ஒரே ஒரு பிரமாண பத்திரத்தைத் தந்தை பெரியார் தந்தார். தன் கணக்கை தனது டைரியிலேயே எழுதி, "எல்லாவற்றையும் வங்கிக் கணக்கு மூலமே செய்வேன். எனது சுபாவம் எளிதில் எவரையும் நம்ப மாட்டேன்" என்று பட்டாங்கமாக ஒளிவு மறைவின்றி உண்மையை ஒப்பனை ஏதுமின்றி எழுதித் தந்தவர்.

ஆனால், அதன் பின் மேல் முறையீடுகள் தொடர்ந்த போது, தனி ஆடிட்டர் தேவை என்பதை வழக்குரைஞர்கள், அம்மாவுக்கு ஆலோசனை கூறிய சட்ட நிபுணர்கள் கூறினர். அதன் பிறகே ஆடிட்டர் சுரேந்தர் அவர்களை ஏற்பாடு செய்தோம்.

அவர் ஒரு தனி அறக்கட்டளை (Trust)க்கு Trust deed  தயாரித்து வந்து அம்மாவிடம் படித்துக் காட்டி, அவர்கள் விருப்பப்படி சில திருத்தங்களையும் செய்து ஒரு இறுதி வடிவம் கொடுத்தார். 

நான் அவர்களுடன் இல்லை. எனது 'விடுதலை' பணியையும், கழகப் பிரச்சாரப் பணி ஏற்பாடுகளிலும், அன்னையார் நலப் பாதுகாப் புக்கான பணியிலும் மும்முரமாகத் திளைத் திருந்தேன்.

அம்மா என்னை அன்று மாலை தனியே அழைத்து ஒன்றைக் கூறினர். "புதிதாய்த் துவக்கவிருக்கும் இந்த அறக்கட்டளையை அடுத்து நீ தான் நிர்வகிக்கப் போகிறாய்; எனவே உனக்கு உதவிகரமாக - கோளாறு செய்யாத வர்களாக - ஒத்தக் கருத்துள்ளவர்களாக உள்ள வர்கள் பட்டியலை - சில பேர்களை எனக்குக்  கொடு; அதையே நான் ஆடிட்டரைக் கூப்பிட்டுக் கொடுத்து அந்த Trust deed-இல் டிரஸ்டியாக போடச் சொல்லுகிறேன்" என்று கூறினார்.

அதற்கு நான் சற்று நேர அமைதிக்குப்பின், "அம்மா நீங்கள் செய்யும் ஏற்பாடு இது. முதலில் நீங்கள் மருத்துவமனையிலிருந்து திரும்பி வெளி யில் வந்து - நீங்களே உருவாக்கும் நிலையே எனக்குப் பெரிய நிம்மதி, பெருத்த ஆறுதல் அடைவேன். 'Main Relief  மட்டுமல்ல, என்னால் அதைச் செய்ய வேண்டிய நிலை தவிர்க்கப் பட்டதும் பெரிய வாய்ப்பு எனக் கருதி ஆறுதல் அடைகிறேன். ஏன் மகிழ்ச்சி அடைகிறேன். அது பல விமர்சனங்களை, தேவையற்ற வகையில் நமது கொள்கை எதிரிகளாலும், துரோகிகளாலும் உருவாகும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கிறது. இயற்கையாகவே இந்த நிலையில் தாங்களே தங்களுக்கு யார் யார் துணையாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் பெயர்களை கொடுங்கள் - எவரையும் நான் தனிப்பட்ட முறையில் கூற விரும்பவில்லை; அது தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. தவறாக கருதாதீர்கள். மன்னியுங்கள்" என்று உணர்ச்சி, அழுகை, ஆத்திரத்தை அடக்கியபடி கூறினேன்.

பிறகு ஒரு நாள் இடைவெளியில் அவரே கூறினார். ஒரு நபரைப் பற்றி என்னிடம் கூறி "இவரிடம் நீ மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எனக்குப் பிறகு உனக்கு ஏதாவது தொல்லை, தொந்தரவு ஏற்படுமானால் அது அந்த ஆசாமியால்தான் ஏற்படும்" என்றார். எனக்கு அது அதிர்ச்சி. காரணம் அந்த நபர் எனது நட்புக்கு உரியவராகவே இருந்தவர். அதிர்ச்சியாக இருந்தது அம்மாவின் கணிப்பு.

பிறகு அது உண்மையாக ஆயிற்று - எனக்கு போதிய பக்குவமின்மைதான் அப்போது  - அப்படிப்பட்டவர்களை நம்பி - வெளுத்த தெல்லாம் பால் என்று நம்பிய முதிர்ச்சியின்மை என்பது புரிந்தது பிறகு கால ஓட்டத்தில், புதிய அறக்கட்டளை பதிவாகி விட்டது; அதற்குமுன் அம்மாவிடம் நான் "இந்தப் பட்டியலை உங்கள் லெட்டர் பேடில் உங்கள் கையால் அந்தப் பெயர் களை எழுதி என்னிடம் தாருங்கள்; நாளைக்கு எவரும் "நானே போட்டுக் கொண்டேன்' என்று கூறி விடாமல் இருக்க அது தக்க சான்று ஆவணமாக இருக்கும்" என்று கூறினேன். அதன்படி அன்னையார் தந்தார். நிம்மதியுடன் 'பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்' என்ற புதிய அறக்கட்டளை முறைப்படி வருமான வரித்துறை முன் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டது. அம்மா அடைந்த நிம்மதி - மன நிறைவு பற்றி அவர்களே, "இப்போது தாம்பா எனக்கு பெரும் நிம்மதி" என்று பரிபூரண மகிழ்வுடன் கூறினார்.

தனக்கென வாழாது, சொந்த பந்தங்களுக்கு சொத்து சென்று விட்டது என்று எவரும் கூறிவிடாதபடி, அப்பழுக்கற்ற பொதுத் தொண்டுக்கு அடையாளமாக அன்னையார் எடுத்த ஒப்பற்ற முடிவு - அவரை எவரும் எளிதில் எட்ட முடியாத உயரத்திற்கு உயர்த்தி விட்டது  - பார்த்தீர்களா?

சுயநலத்தை சுட்டெரித்த தீயானவர் - தாயானவர்!

அதிசயம், ஆனால் அப்பட்டமான உண்மை யல்லவா?

No comments:

Post a Comment