இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (4) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 21, 2022

இவர்தான் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்! (4)

அய்யாவிற்குப் பின்னர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற அம்மாவின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது; அந்த உடல் நிலையிலும் இயக்கப் பணிகள், திருச்சி கல்வி நிலையப் பணிகள், தனக்குப் பிறகு அய்யா கண்ட இயக்கம் - அறக்கட்டளை செம்மையாக நேர்வழியில் - எவ்வித தவறுகளுக்கும் இடந் தராது நடக்க வேண்டுமே என்ற  - அந்தச் சிந்தனையில் ஆழ்ந்து மூழ்கி கவலை கொண்டவரானார்!

அவரது தனிச் சிறப்பு, மேற்கண்ட வகையில் இருந்ததைவிட கூடுதலான ஒன்றினைக் கண்டு என்னைப் போன்ற எளிய பணித் தோழர்கள் மிகவும் வியந்தது எது தெரியுமா? அருகில் இருந்தவன் என்ற முறையில் இப்போதாவது அதைப் பதிவு செய்வது மிகவும் முக்கியம்.

தனது இறுதி நாட்களே இவை என்ற ஒரு எண்ண ஓட்டம் அவருக்குள் ஓடியதின் விளைவோ என்னவோ, என்னை - சென்னை அரசு பொது மருத்துவமனை ஸ்பெஷல் வார்டில் இருக்கும் போது தனியே அழைத்து - 'நான் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அது சம்பந்தமாக சிலரிடம் கலந்து பேசிட விரும்புகிறேன்; அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வா' என்று கூறினார்கள். 'யார் என்று சொல்லுங்கள், உடனே சென்று அவர்களிடம் கூறி  அழைத்து வருகிறேன்' அம்மா என்றேன்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த தமிழ் நாடு அரசின் சட்டமன்ற செயலாளர் திரு. சி.டி. நடராசன், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்.டி. சுந்தரவடிவேலு, பொது மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் கே. இராமச்சந்திரன்  ஆகிய மூவரை சந்தித்து உடனே அழைத்து வரச் சொன்னார்கள். உடனே சென்று அவர்களிடம் சொன்னதும் அவர்கள் மூவரும் மருத்துவமனை ஸ்பெஷல் வார்டுக்கு வந்தார்கள். அம்மா அவர்களிடம் பேசினார். நான் வெளியே செல்லும் நிலையில் - 'இல்லை இல்லை நீயும் இரு' - என்று பணித்தார்கள். அதனால் நான் அவர்களுடன் அம்மா பேசும் போது கவனித்து - குறுக்கே எதுவும் பேசாமல் வாய் திறவாது மவுனியாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

"எனக்கு ஏற்கெனவே சில சொத்துக்கள் அய்யா எழுதி வைத்த செட்டில்மெண்ட்படி, சென்னை மீரான் சாயபுத் தெரு வீடு, ஈரோட்டில் ஒரு சில - இவைகளைப் பாதுகாப்பாக, எனது உறவுகளோ மற்றவர்களோ எந்த உரிமையும் கொண்டாடாதபடி, பொதுவுக்கே பயன்படும்படி செய்ய உங்கள் ஆலோசனை, அறிவுரை தேவை" என்று மூவரிடமும் கேட்டார்கள்.

அவர்கள் மூவரும் - சி.டி. நடராசன் அவர்கள் சட்ட நிபுணர், மற்றவர்கள் பல்துறை நிபுணர்கள் - சொன்ன கருத்து "அம்மா நீங்கள் சொல்கிறபடி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பெரியார் சுயமரியாதை அறக்கட்டளையில் சேர்த்து எழுதி வைத்தல். மற்றொன்று, தனியே ஒரு டிரஸ்ட்டாக்கி, உங்களுக்கு யார் மீது நம்பிக்கை உள்ளதோ அவர்களை டிரஸ்டிகளாகப் போட்டு நடத்துவது. இந்த முதல் திட்டத்தில் ஒரு சிக்கல் உண்டு. அது சம்பந்தமாக வருமான வரித்துறை வழக்கு, சிக்கல் இருப்பதால், அதில் உங்கள் சொத்துகளையும் சேர்ப்பதில் ஆபத்து உண்டு. அது வருமான வரித் துறையால் பாதிக்கப் படலாம். புது சொத்து என்றும்  அதிலிருந்து மீட்க முடியாது!

எனவே தனியே புதிதாக ஒரு 'டிரஸ்ட்' ஏற்படுத்துவதும், நல்ல ஆடிட்டர்களைக் கலந்து செய்வதும் முக்கியம்." என்று கூறினார்கள்.

"சில நாட்கள் ஆகும் அதற்கும்கூட - எனவே அவசரமாக உடனே அடுத்து செய்ய என்ன வழி சொல்லுங்கள்" என்று பதற்றத்துடன் படுக்கையிலிருந்த நிலையில், அம்மா அம்மூவரையும் பார்த்துக் கேட்கிறார்.

அதற்கு சி.டி.என். (நடராசன்) உடனே சொன்னார்; "உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரை - Testator - இல் இந்த செயலை உங்கள் சார்பில் உங்களின் அதிகாரம் பெற்ற ஒருவர், உங்களால் முடியாதபட்சத்தில் செய்யும் உரிமை பெற்றவரை நீங்கள் - எங்களைப் போன்றவர்கள் முன்னிலையில் அதை எழுதி முடிவு செய்தால், அந்த ஏற்பாடு தங்கள் நோக்கப்படி, உங்கள் உறவினர்களோ, மற்ற வேறு எவருமோ பாத்தியதை கொண்டாட முடியாது", என்று ஆலோசனை கூறினார்! சற்றும் யோசிக்காமல் அம்மா, "தாங்கள் அதை எழுதிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

"அம்மா யாரைப் போடுவது என்று சொல்லுங்கள்" என்று கேட்டனர். அம்மா பதில் என்ன?

(தொடரும்)


No comments:

Post a Comment