திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை
மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மகத்தான வெற்றிக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாம் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்நாட்டில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கான உள்ளாட்சித் தேர்தல்களில், தி.மு.க.வும் - அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெறும் வகையில், மகிழத்தக்க வண்ணம் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரும் வாய்ப்பைத் தந்துள்ள தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டும், நன்றியும்!
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
இன்று (22.2.2022) பகல் 1.50 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மகிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மகிழ்ச்சியோடு தனது நன்றியினைத் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் அங்கீகாரம்!
கடந்த எட்டு மாதங்களாக ஒரு புதியதோர் பொற்கால ஆட்சியைத் தந்து வருகின்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி - அவர்தம் சிறந்த ஆட்சிக்கான அங்கீகாரத்தை அனைத்திந்திய தலைவர்களும் வழங்கி வருகின்றனர்; என்றாலும், தமிழ்நாட்டு மாநகர, நகர, கிராமப்புற மக்களும் அதையே முழுமனதுடன் ஏற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது! குறிப்பாக, மேற்கு மண்டல வெற்றி ஒரு புதிய திருப்பம்.
புதிய வலிவுடன் பொற்கால ஆட்சி! 'திராவிட மாடல்' ஆட்சி தொடர தங்கள் வாக்குச் சீட்டுமூலம் உத்தரவிட்டுள்ளது - நமது மக்களாட்சி - நம் ஆட்சியாகவே தொடருவதற்கான புதியதோர் ஆமோதிப்பே இத்தீர்ப்பு!
வெற்றி பெற்றவர்கள் 'கதிர் சாய்ந்த நெல்மணிகளாக' அடக்கத்தோடு ஏற்று, 'திராவிட மாடல்' ஆட்சிக்கு குன்றா மதிப்புத் தர உதவிடவேண்டும்.
வெற்றி பெற்றோருக்கு நமது உளம் நிறைந்த வாழ்த்துகள்!
(விரிவான அறிக்கை நாளை).
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.2.2022
No comments:
Post a Comment