முதுமையைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் எலும்புப்புரை நோய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 21, 2022

முதுமையைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் எலும்புப்புரை நோய்

முதிய வயதில், குறிப்பாகப் பெண்கள் குளியலறை அல்லது வேறு இடங்களில் வழுக்கி விழுந்து விலா எலும்பை முறித்துக்கொள்வது நாம் அடிக்கடி கேள்விப்படும் நிகழ்வு. இந்த நிகழ்வு விபத்தாகக் கருதப்பட்டு, எலும்பு முறிவுக்கான சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது. உண்மை என்னவென்றால், விபத்துகளாகக் கருதப்படும் இந்த நிகழ்வுகளில் பெரும் பாலானவற்றுக்கு எலும்புப்புரை நோயே காரணமாக இருக்கலாம். இதைக் கவனிக்கா விட்டால்,பாதிக்கப்பட்டவருக்கு அந்தவிபத்துஅடிக்கடி ஏற்படத் தொடங்குகிறது. சில நேரம் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.

குழந்தைப்பருவத்தில் மென்மையாக இருந்து, வயது ஏற ஏற வலுப்பெற்று, பின் மீண்டும் வயது ஏற ஏற தன் வலுவை இழந்து, நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் இயல்பை எலும்புகள் கொண்டுள்ளன. எலும்பு கள் நொறுங்கும் தன்மை கொண்டதாக மாறும் நிலையே எலும்புப்புரை. இந்த நோய் எல்லோ ருக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகியிருப் பதை உணர்வதில்லை. இதுவே இந்த நோயைப் பெரும் ஆபத்தானதாக மாற்றி விடுகிறது.

1. எலும்புப்புரை நோய் என்றால் என்ன?

எலும்புப்புரை என்பது குறைந்த எலும்புத் திண்மை, எலும்புத் திசுக்களின் நுண்ணிய சிதைவு போன்றவற்றால் ஏற்படும் நோய். இந்த நோயால் எலும்புத் திண்மை குறைவும், அதன் நுண் கட்டமைப்பில் சிதைவும் ஏற்பட்டு, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும். எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்துள்ள எலும்புத் தளங்களை இந்த நோய் பாதிக்கும்.

2. எலும்புப்புரை குறித்த விழிப்புணர்வு ஏன் முக்கியம்?

இது மனிதர்களைப் பலவீனப்படுத்தும் நோய்களில் முக்கியமானது. இந்த நோய் காரண மாக, முதுமையில், எலும்பு பலவீனமடைந்து எலும்பு முறியும் அபாயத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நேரம் இந்த எலும்பு முறிவால் இறப்புகூட நேரிடலாம். இது நாள்பட்ட நிலை என்பதால், இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவை. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படலாம். அதனால் வாழ்க்கைத் தரம் மோசமாகப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். முன்கூட்டியே கவனிக்காவிட்டால் இந்த நோய்க்கான சிகிச்சை, பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக் கான மருத்துவச் செலவு சுமையாக மாறும்.

3. எலும்புப்புரை நோயின் இயல்பு என்ன?

50 வயதில், எலும்புப்புரையால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்து பெண்களுக்கு 50 சதவீதமும் ஆண்களுக்கு 20 சதவீதமும் உள்ளது. 55 வயதுக்கு மேலான பெண்களிடமும், 65 வயதுக்கு மேலான ஆண்களிடமும் எலும்புப்புரையின் விளைவாக ஏற்படும் எலும்பு முறிவுகள் அதிகரித்துவருகின்றன.

பொதுவாக, எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாத விடாய் நின்ற பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மணிக்கட்டு எலும்பு முறிவும், மாதவிடாய் நின்ற 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதுகெலும்பு முறிவும், 75 வயதுக்குப் பிறகு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்படலாம்.

4. எலும்புப்புரை நோய் முதுமையுடன் தொடர்புடையதா?

ஆம். ஆண்களும் பெண்களும் முப்பதாம் வயதில் (மூன்றாம் தசாப்தத்தின் முடிவில்), எலும்புத் திண்மையின் உச்சத்தை அடைந்த பிறகு, எலும்புத் திண்மையை இழக்கத் தொடங்குகின்றனர். மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்பிருப்பதால், விரைவான எலும்புத் திண்மை இழப்பு ஆண்களைவிடப் பெண்களிடம் அதிக வீரியத்துடன் இருக்கிறது. மாதவிடாய் நின்ற அய்ந்துமுதல் ஏழு ஆண்டுகளில், எலும்புத் திண்மையில் தோராயமாக 12 சதவீதத்தைப் பெண்கள் இழக்கிறார்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களிடம் தொடங்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடே இதற்குக் காரணம். வயதான ஆண்களில் டெஸ்டோஸ்டீரோன், ஈஸ்ட்ரோஜன் குறைந்த அளவே எலும்பு இழப்புக்குப் பங்களிக்கிறது.

5. எலும்புப்புரையால் முறிவுக்கு உள்ளாகும் பொதுவான எலும்புகள் யாவை?

முதுகெலும்பு, இடுப்பு, மணிக்கட்டு, மேற்கையின் நீண்ட எலும்பு ஆகியவை எலும்புப்புரையால் முறிவுக்கு உள்ளாகும் பெரிய எலும்புகள்.

இடுப்பெலும்பு முறிவுகள், வலி, எடையைத் தாங்க இயலாமை போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். அதைச் சீரமைப்பதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். மற்ற அனைத்து வகையான எலும்பு முறிவுகளைக் காட்டிலும் இந்த எலும்பு முறிவே செயல்பாட்டு நிலையை வெகுவாகப் பாதிக்கும். வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கும். இறப்புக்கான ஆபத்தும் இடுப்பெலும்பு முறிவில் உண்டு.

முதுகெலும்பு முறிவு, எதிர்கால எலும்பு முறிவுகளின் வலுவான முன்னறிவிப்பு. நாள்பட்ட வலி, கூன் விழுதல், நரம்பியல் பிரச்சினைகள், நுரையீரல் திறன் குறைதல், தன்னம்பிக்கை இழப்பு போன்றவை இதனால் ஏற்படலாம்.

முதுகெலும்பு முறிவுகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்குக் கடுமையான வலியையோ, சில வாரங்களில் மறைந்துவிடும் லேசான வலியையோ கொண்டிருக்கும் என்பதால், இதை ஸ்கேன் மூலமாகவும் எக்ஸ்ரே மூலமாகவும் மட்டுமே கண்டறிய முடியும். மூன்று செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் இழப்பு ஏற்பட்டால் அது புதிய முதுகெலும்பு முறிவாக இருக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் அதை அணுக வேண்டும். மணிக்கட்டு எலும்பு முறிவுகள், அடுத்தடுத்த முதுகெலும்பு, இடுப்பெலும்பு முறிவுகளின் முக்கியமான முன்னறிவிப்பாகக் கருதப்பட வேண்டும்.

(நன்றி: ‘இந்து தமிழ் திசை')

No comments:

Post a Comment