கரோனா பரவல் தீவிரம்: 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்பு - உயர்நீதிமன்றம் அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 13, 2022

கரோனா பரவல் தீவிரம்: 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்பு - உயர்நீதிமன்றம் அறிவுரை

 சென்னை, ஜன.13 கரோனா 3ஆவது அலை தீவிரமாக உள்ளதால் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை தவிர்க்கலாம் என்றும், அவர் களுக்கு இணையம் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி யுள்ளது.

சென்னை  உயர்நீதிமன்றத்தில் நெல் லையை சேர்ந்த வழக்குரைஞர் அப்துல் வஹாபுதீன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கரோனா வைரசின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு இருந்தன.  இணைய வழி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கரோனா வைரசின் 3ஆவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இணைய வழியாக வகுப்புகள் நடத்தப் படுகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படு கின்றன.

இதனால் அந்த மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து பள்ளி களிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.  இணைய வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கட்டாயம் இல்லை

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண் முகசுந்தரம் ஆஜராகி, மழலையர் வகுப்பு மற்றும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், 10 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடுவதற்காகவே பள்ளிகளுக்கு அழைக்கப்படுகின்றனர்.

நேரடி வகுப்புகள் நடத்துவதும், அதில் கலந்துகொள்வதும் கட்டாய மில்லை.

இணைய வழி வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற் குட்பட்டது என்று கூறினார்.

தள்ளுபடி

அதற்கு நீதிபதிகள், 3ஆவது அலை அதிகரித்துவரும் நிலையில், 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கலாம்.

இணைய வழி மூலமாக வகுப்புகளை நடத்தலாம். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்களும் மற்றும் பிற ஊழியர்கள் என்று அனைவரது பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்று அறிவுரை வழங்கினர்.

பின்னர், அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடவேண்டும் என்று எப்படி உத்தரவிட முடியும்? என்று மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment