அரசாங்கமா - அராஜகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

அரசாங்கமா - அராஜகமா?

உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தடையை மீறி அம்மாநில அரசு "சார்தாம்" யாத்திரை  ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கியதையொட்டி, உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் மே மாதம் திறக்கப்பட்டன.  இந்த நான்கு இடங்களுக்கும் மக்கள் மேற்கொள்ளும் யாத்திரைக்கு 'சார்தாம்' யாத்திரை எனப் பெயர் ஆகும்.   இந்த வருட 'சார்தாம்' யாத்திரை மே மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்ததால் இந்த யாத்திரை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால் சென்ற 16 ஆம் தேதி அன்று 'சார்தாம்' யாத்திரைக்கான ஏற்பாடுகளை அரசு தொடங்கியது.   இந்த யாத்திரை செல்லும் மக்களுக்கு கரோனா தொற்று இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டது.

உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் அரசின் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.   மேலும் 'சார்தாம்' யாத்திரை குறித்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.   அதுவரை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு எவ்வித ஏற்பாடும் செய்யக்கூடாது என்பதுதான் தீர்ப்பின் நிலைப்பாடு!

ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு 'சார்தாம்' யாத்திரை குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் சார்தாம் யாத்திரையின் முதல் கட்டம்  ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் எனவும்.  இரண்டாம் கட்டம் ஜூலை 11 அன்று தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தராகண்ட் அரசு செய்தி தொடர்பாளர் சுபோத் உனியால், “உத்தராகண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.   இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கிட்டும்வரை, உத்தராகண்ட் அரசு காத்திருக்க வேண்டாமா?

உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வாங்காத நிலையில், உத்தராகண்ட் அரசு மத யாத்திரையை நடத்துவது எப்படி?

பா... அதிகாரத்தில் இருந்தால், எதையும் மீறலாம் - தங்களுக்கு மேல் யாருக்கும் அதிகாரம் கிடையாது என்கிற தானடித்த மூப்பில் நடைபெறுவது சரியானதுதானா?

ஓர் அரசே சட்டத்தை மீறினால், குடிமக்கள் மத்தியில் சட்டத்தை மதிக்கும் எண்ணம் எப்படி ஏற்பட முடியம்?

அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் அராஜகம் தானே அங்கே தாண்டவமாடும்.

பா... மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் வந்தது   - எல்லாம் தலைகீழாகி விட்டது - தன்னாட்சி பெற்ற நிறுவனங்களை எல்லாம் காயடித்து விட்டது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி என்னும் ஒற்றைச் சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்லுகிறதா என்ற அய்யப்பாடு நாட்டு மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது. வாக்குச் சீட்டு மூலம்தான் மக்கள் தண்டிக்க முடியும். இன்றைய யதார்த்தம் இதுதான்.

No comments:

Post a Comment