ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் 'நீட்' தேர்வு சமூக நீதிக்கு எதிரானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் 'நீட்' தேர்வு சமூக நீதிக்கு எதிரானது

திரைப்பட நடிகர் சூர்யா அறிக்கை

சென்னை,ஜூன்20- தமிழ்நாட் டில் நீட் நுழைவுத் தேர்வு பாதிப்புகள்குறித்து ஆராய்ந்திட ஓய்வுபெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பொது மக்கள் 'நீட்' தேர்வு குறித்த தங்களின் கருத்துகளை neetimpact2021@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் பதிவு  செய்யு மாறு அக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏழை மாண வர்களின் எதிர்காலத்தை சூறை யாடும் 'நீட்' தேர்வு குறித்து உட னடியாக அனைவரும் ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் குழுவிற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என திரைப்பட நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட் டுள்ளதாவது:

"அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40விழுக்காடு மற்றும் 25விழுக்காடு மாணவர்களில் 20விழுக்காடு மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர்.

தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்பது கல்வி தளத்தில் அவர்களை பின்னுக் குத் தள்ளும் சமூக அநீதி. 'நீட்' நுழைவுத் தேர்வு வைக்கப்படு வதன் மூலம், மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத் தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற் படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் தேர்வுகள் ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி .கே ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டி ருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக் கான பாதிப்புகளை முறையாக குழுவிடம் பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிய 'நீட்' தேர்வின் பாதிப்பின் தீவி ரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும் அவர் தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துன்பங்களை நீதிபதி .கே ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவினருக்கு neetimpact2021@gmail.com  என்னும் மின்னஞ்சலுக்கு வருகின்ற 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண் டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகளை கொண்ட நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே நிரந்தரத் தீர்வு. கல்வி மாநில உரிமை என்கிற கொள்கையில் அனைத்து அர சியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment