மத ஊர்வலங்களும் மத விழாக்களும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

மத ஊர்வலங்களும் மத விழாக்களும்

 திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீரமானங்களுள் ஒன்று - கரோனா தொற்று மிகக் கடுமையாகப் பாய்ந்து விழுந்து கவ்வும் இந்தக் காலகட்டத்தில் மதவிழாக்களுக்கும், மத ஊர்வலங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பதை - மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதாகும்.

"மிகக் கடுமையாக கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்திட தீர ஆய்வு செய்து இரண்டு வார காலம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இந்தக் காலகட்டத்தில் மத விழாக்கள், மத ஊர்வலங்களை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதானது, தமிழக அரசின் நோக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும், கரோனா தொற்றினை மேலும் பரவச் செய்வதற்கு வழி வகுப்பதாகவும் அமையும் என்பதை இச்செயற்குழு முக்கிய கருத்தாகக் கொள்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் பாதுகாப்பு - நலன் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அளித்த தீர்ப்பு இந்த காலகட்டத்தில் தவறான தீர்ப்பு ஆகும்.

அரசியல் சட்டத்தின் 25, 26 சட்டப் பிரிவுகளில்கூட, மதச் சுதந்திரம் என்பது ஷிuதீழீமீநீt tஷீ ஜீuதீறீவீநீ ஷீக்ஷீபீமீக்ஷீ, னீஷீக்ஷீணீறீவீtஹ் ணீஸீபீ லீமீணீறீtலீ என்ற நிபந்தனைக்கு உட்பட்டதே என்பதை அறியாதது அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்.

பக்தியின் பேரால் பக்தர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிர்ச் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதே அரசின் கட்டுப்பாட்டின் நோக்கமே தவிர, பக்தியைத் தடுப்பதல்ல என்பதையும் மாண்பமை உயர்நீதிமன்றம் உணர்ந்ததாலேயே  முந்தைய பல தீர்ப்புகளில் இதுபோன்ற மத விழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்து, நிறுத்தி, கரோனா தடுப்பில், தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் மிக முக்கியம் என திராவிடர் கழக தலைமைச் செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தனது கருத்தினை மறுபரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கரோனாவால் உயிர் இழந்தவர்களுள் 50 சதவிகிதம் மத விழாவான கும்பமேளாவுக்குச் சென்று வந்தவர்களே என்ற தகவலையும் இந்த நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு இச்செயற்குழு கொண்டு வர விரும்புகிறது."

நாட்டின் நிலையை நன்குணர்ந்தோர் இத்தீர்மானத்தின் விழுமிய நோக்கத்தைப் புரிந்து கொண்டு, கண்டிப்பாக வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை.

முழு ஊரடங்கை அரசு பிறப்பித்திருப்பதன் நோக்கம் என்ன?

 தனி நபர் இடைவெளி இருக்க வேண்டும் என்பதால் தானே! ஊரடங்கு உத்தரவு மூலம் தனி நபர் இடைவெளி சட்டரீதியாகக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால்தானே!

அரசியல் கட்சி கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும், போராட்டங்களுக்கும் அனுமதி மறுப்பது இந்த காரணங்களுக்காகத் தானே.

அந்த நோக்கம் மதக் காரியங்களுக்கும் பொருந்தத்தானே செய்யும் - மக்கள் கூடத்தானே செய்வார்கள் - அதன் காரணமாக கரோனா தொற்றுக் கடுமையாக ஏற்படத்தானே செய்யும்?

மத விழாக்கள், மத ஊர்வலங்களில் மக்கள் கலந்து கொண்டால் கரோனா கிருமிகள் தொற்றாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?

இதற்கு முன் நடந்துள்ள மத விழாக்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது என்ற விவரங்கள் விரிவாக வெளிவர வில்லையா?

எடுத்துக்காட்டாக தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதே! உத்தரகாண்ட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களில் 50 விழுக்காட்டினர் கும்பமேளாவுக்குச் சென்று வந்தவர்கள் என்று தகவல்கள் வெளிவரவில்லையா? ஊடகங்கள் படத்துடன் வெளியிடவில்லையா?

பூரி ஜெகந்நாதர் கோயில் தேர் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட காரணத்தால் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்தது  என்று செய்தி வெளி வந்ததுண்டே!

பூரி ஜெகந்நாதர் கோயிலில் கடவுளுக்கே முகக் கவசம் அணிவித்ததெல்லாம் படத்துடன் வெளி வந்ததே!

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? மக்கள் கூடினால் கரோனா தொற்றுப் பரவுவது என்பது எழுதி வைக்கப்பட்ட உண்மை! அதுவும் முதல் அலை வீச்சைவிட இரண்டாவது தொற்று மிக வேகமாகப் பரவக் கூடியது - அதனால் ஏற்படக் கூடிய உடல் பாதிப்பும் அதிகமானது என்று மருத்துவ உலகமும், அரசும் திருப்பித் திருப்பி அபாய அறிவிப்பாக சொல்லிக் கொண்டே இருக்கிறதே!

வேறு வழியின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதன் நோக்கத்தை சிதற அடிக்கும் வகையில் மத விழாக்களுக்கும், மத ஊர்வலங்களுக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது - அதன் கடமையுணர்வை  - மக்கள் நலனை முன்னிறுத்தியதேயாகும்.

பா... சார்பில் வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்கப்பட்ட போதுகூட ...தி.மு.. அரசு அனுமதி மறுத்ததுண்டே! நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டு இருக்கிறதே!

மூன்றாவது தொற்றும் மூர்க்கத்தனமாகப் பாயும் என்ற அச்சம் அலை மோதும் நிலையில் முதற்கட்டமாக இந்த இரண்டாவது தாக்குதலில் இருந்து மனிதம் காப்பாற்றப்பட அனைத்துத் தரப்பும், துறைகளும் உதவிக்கரம் - நேசக்கரம் நீட்டட்டும்! நீட்டட்டும்!!

  

No comments:

Post a Comment