விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறக்கூறி உங்கள் மகனிடம் கூறுங்கள் மோடியின் தாயிடம் கடிதம் கொடுத்த விவசாயிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 25, 2021

விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறக்கூறி உங்கள் மகனிடம் கூறுங்கள் மோடியின் தாயிடம் கடிதம் கொடுத்த விவசாயிகள்

அகமதாபாத், ஜன 25 மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல வாரங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் சட்டங்களை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பெரோஸிபூரைச் சேர்ந்த விவசாயி ஹர்ப்ரீத் சிங் என்பவர் பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்த கடிதத்தை நான் எழுதுவதற்கான நோக்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் உங்களின் மகனும், நாட்டின் பிரதமருமான மோடி திரும்பப் பெறுவார் என்ற நம்பிக்கையில் தான்.

ஏனெனில் தாயின் வேண்டுகோளை எந்தவொரு மகனும் மறுக்க மாட்டார். இந்தியாவைப் பொறுத்தவரை தாயை நாம் அனைத்துக்கும் மேலாகப் பார்த் துக் கொண்டிருக்கிறோம். டில்லியின் கடுங்குளிரில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யுங்கள் தாயே" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது நண்பர்களான கரந்தீப் சந்து, குர்பிரீத் சிங் ஆகி யோருடன் சிம்லாவில் உள்ள தி ரிட்ஜ் பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை கடந்த ஜன.20 அன்று ஹர்ப்ரீத் சிங் நடத்தினார். இதைக் கண்ட காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 107 மற்றும் 151 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒருநாள் காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அப்போது தான் பிரதமரின் தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அனைவரிடமும் ஹர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதனை ஊடகங்கள் முன்பு காட்டிய அவர், விரைவில் ஹிராபென் மோடியின் கைகளுக்கு கிடைக்க குஜராத் விவசாயிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருப் பதாகவும் கூறினார்

இந்த சூழலில் பெரோஸிபூருக்கு திரும்பிய ஹர்ப்ரீத் சிங்கிற்கு பொது மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

No comments:

Post a Comment