கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பிஎச்.டி. ஆய்வுப்படிப்பு கட்டாயம் என்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பிஎச்.டி. ஆய்வுப்படிப்பு கட்டாயம் என்பதா?

கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க பிஎச்டி., ஆய்வுப்படிப்பு கட்டாயம் என்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்  இயங்கிவரும் பல்கலைக்கழக மான்யக்குழுவின் உத்தரவினை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டதன்மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி, இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளை அறவே பறித்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக உயர்கல்வித் துறையின்அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமனங்களில்,தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்தும்செட் தேர்வு' (State Eligibility Test -SET) மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும்நெட் தேர்வு' (National Eligibility Test - NET) ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வரு கின்றன.

பல்கலைக் கழக மான்யக் குழுவின் வழிகாட்டுதலின்படி (யூஜிசி) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்செட்மற்றும்நெட்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வர்களும், பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகசெட்தகுதித் தேர்வை நடத்தப்படவில்லை. மத்திய அரசின் யுஜிசி ஆணையை அப்படியே ஏற்று, ஜூலை ஒன்றாம் தேதிமுதல் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப் பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அர சாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன்பின்னர்செட்’, ‘நெட்தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெற போராடி வரும் நிலையில், இனி பிஎச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றால், இதன்மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி, இட ஒதுக்கீட்டு வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதா? இல்லையா?

ஏழை, எளிய, கிராமப்புற அடித்தட்டு முதல் தலைமுறையாக படிக்கும் குறிப் பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பிஎச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

தொடர்ந்து சமூக நீதியையும், இட ஒதுக்கீட்டையும் குறிவைத்து தகர்க்கும் நிலையில் முழு மூச்சாக மத்திய பிஜேபி ஆட்சி தொடர்ந்து தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.

அண்ணா பெயரில் இருக்கக்கூடிய தமிழக ஆளுங்கட்சி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், சமூகநீதிக்கு விரோத மான மத்திய அரசின் போக்கு குறித்து கருத்துகூட கூறாமலும், கண்டிக்காமலும் இருப்பது ஏன்?

தமிழ்நாட்டு மக்களின் சமூகநீதி உணர் வினை வலிமையாக எடுத்துக்கூறி மத்திய அரசின் யுஜிசி முடிவை விலக்கிக்கொள்ள உறுதியாக தமிழ்நாடு அரசு போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களை அடையாளம் காண வேண்டும்.

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

24.1.2021

No comments:

Post a Comment