சமூகநீதி, சமதர்மம், சம வாய்ப்பு, சமத்துவம் மலர இழந்த உரிமைகளை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி மலரும் ஆண்டாக 2021 அமையட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 1, 2021

சமூகநீதி, சமதர்மம், சம வாய்ப்பு, சமத்துவம் மலர இழந்த உரிமைகளை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி மலரும் ஆண்டாக 2021 அமையட்டும்!

2020 ஆம் ஆண்டு கரோனாவால் துயரம் மிகுந்த ஆண்டாக இருந்தாலும், சமூகநீதி, சமவாய்ப்பு, சமத்துவம் மலரும் ஆண்டாக அமைந்திட, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.. வென்று ஆட்சியில் அமரும் ஆண்டாக 2021 அமையவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:          2020 என்ற இந்தக் கொடுமையான கொடூரமான தொற்று கரோனா (கோவிட் 19) உலக மக்களின் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியது; அத்தகு ஆண்டு முடிவுக்கு வந்து, புதிய ஆண்டு பிறந்த நிலையில், புதிய முழு நம்பிக்கை உள்ளத்தில் ஏற்பட்டு, பழையபடி இயல்பாக நடமாடி, நாளும் பணி செய்யும் நிலைமை என்று திரும்புமோ என்ற ஏக்கமும், நீங்காத அச்சமும் உலகத்தை யோசிக்க வைத்திருக்கும் நிலைதான் யதார்த்தமாக உள்ளது!

நம்பிக்கையை மனிதர்கள் இழக்கவேண்டிய அவசியம் இல்லை!

என்றாலும், நம்பிக்கையை மனிதர்கள் இழக்கவேண்டிய அவசியம் இல்லை. மனித அறிவு வளமும், சிந்தனையும், பகுத்தறிவும், ‘நோய் நாடி நோய் முதல் நாடும்' ஆய்வினைத் தந்துள்ளதால், அந்தந்த நாடுகளில் பல தடுப் பூசிகள் தயராகிப் பயன்பாட்டுக்கும் வந்து விட்டன!

புதிய ஆண்டு புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது. இயற்கையை வென்றெடுத்த மனிதன், அவனது அறிவும், பகுத்தறிவும் தந்த அறிவியல் கண்டுபிடிப்பால், மனிதர்களின் ஆயுள் நாளும் நீண்டு வருவது கண்கூடு. (அதுவே மக்கள் தொகை பெருகியுள்ள சீனா போன்ற பற்பல நாடுகளுக்குப் பொருளாதாரச் சுமை என்றாலும், அவர்களைக் காக்க நிதி ஆதாரம் தேடும் நிலையும் புதிய ‘‘தலை வலி’’யாக உள்ளது. காரணம்  ,அரசு செல வழிக்கும் தொகை வளர்ச்சி - பயனுறு முன் னேற்றம் (Productivity + Growth)   ஆகிய வற்றுக்கே செலவழிப்பதிலிருந்து, முதியவர் களைக் காக்கப் பெருந்தொகை செலவழிக்கவும் தேவைப்படுவதுதான் பிரச்சினை) எல்லா பிரச்சினைகளுக்கும் மறுபக்கங்களும் உண்டு. மனித அறிவால் தீர்வு காணப்பட முடியாத வைகளே இருக்க முடியாது என்ற நிலை மறுக்க முடியாத உண்மை; தன்னம்பிக்கையற்ற மூட நம்பிக்கையாளர்கள் வேண்டுமானால் இக்கருத்தை ஒப்புக்கொள்ள மறுக்கக் கூடும்.

பகுத்தறிவாளர்கள் பிரகடனப்படுத்துகின்றனர்

அறிவியல் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை யுள்ளவர்களின் தளராத முயற்சி, எந்த நோய் தாக்கினாலும், அதனை எதிர்கொண்டு முறி யடித்து, மனித குலத்தினைப் பாதுகாக்கும் என்பதை பகுத்தறிவாளர்கள் பிரகடனப்படுத்து கின்றனர்.

பக்தி, ஆன்மிகம், மத நம்பிக்கைகள் எல்லாம் வெறும் சடங்குகளும், சம்பிரதாயங் களுமே தவிர, மற்றவர்களைக் காப்பாற்ற அவை ஒருபோதும் அறிவியல் கைகொடுப்பது போல் கைகொடுக்காது என்பதை மதவாதி களுக்கும், பக்தர்களுக்கும் கரோனா பாடமாகப் புகுத்தியிருந்தாலும், பக்திப் போதை, மதப் போதை ஏறியவர்கள் அவ்வளவு எளிதில் இதை உணருவதோ, உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ளுவதோ சற்றுக் கடினம்.

பக்திப் போதையைப் பரப்பும் ஊடகங்கள்

மற்றொரு காரணம் பக்தி போதையைப் பரப்பும் ஊடகங்கள், தற்போதைய தொலைக் காட்சிகள், அந்தப் போதை குறையும்போது, குடிகாரனுக்கு மேலும் மேலும் ஊற்றி, அவனை எழவிடாமல் வீழ்ந்து கிடக்கவே செய்யும் நிலையைப் போன்றே பக்திப் போதையை ஊட்ட ஊடகங்கள் போட்டிப் போடுகின்றன.

அரசுகளுக்கு இப்படி மக்கள் விழிப்புணர்வு இன்றி பக்தி போதையிலும், திருவிழாக்கள் என்ற திசை திருப்பல்களிலும் திளைத் திருந்தால்தான் - அரசுகள் செய்யும் ஜனநாயக பறிமுதல் - உரிமைப் பறித்தல்பற்றிய மாநி லங்களின் கூட்டாட்சி முறை அதிகாரங்களைப் பறிமுதல் செய்யும் வகையில்,ஒற்றை ஆட்சி யாக்கிடும் வேக முயற்சிகளைப்பற்றிய விழிப்புணர்வு வராமல் இருக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது ஆளுவோர் எண்ணமாக இருக்கக் கூடும்!

மக்கள் மதவாதிகளாக- நம்பிக்கையில் மூழ்கிவிட்டால்தான் நம் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை உலகத்தின் யதேச்ச திகாரவாதிகள் - பாசிஸ்டுகள் ஒரு வியூகமாகவே சரித்திரக் காலந்தொட்டு கையாண்டு வருவது தான் வழமையாகும்.

சோவியத் ரஷ்ய ஆட்சி

அதனால்தான், காரல் மார்க்சும், அவரது தத்துவங்களை ஆட்சி பீடமேற்றிய மாவீரர் லெனின் அமைத்த  (அந்த காலகட்டம் தமிழ்நாட்டில் திராவிடர் கட்சி - ஆட்சி (1920)  ஏற்பட்டு, ரத்தம் சிந்தாத புரட்சியாக, இழந்த பல உரிமைகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளித்து, ஒரு எழுச்சி மிகுந்த திருப்பத்தை ஏற்படுத்திய மறக்க முடியாத, மறைக்கவே முடியாத, மறுக்கவே முடியாத வரலாற்றுக் கட்டமாகும்) சோவியத் புரட்சி ஆட்சி ‘‘ரஸ்புட்டீன்களையும், முதலாளித்துவத்தையும் வீழ்த்தி - புதுயுகம் கண்டது. மதம் மக்களுக்கு அபின் என்பதையும், மக்களாட்சி - வெகு மக்களின் உரிமைகளை - பாட்டாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க மத போதை, பெண்ணடிமையிலிருந்து விடுதலை பெறச் செய்ய மதத்திற்கு எதிராகப் பிரச்சாரத்தையும் உரிமையாக்கிய சோவியத் அரசியல் சட்டம் தந்தார் லெனின்!

நம் நாட்டிலோ உலகில் எங்குமில்லாத பிறவிப் பேதம் - ஹிந்து மதம் என்ற ஆரிய சனாதன மதம் புகுத்திய முன்ஜென்ம கர்ம வினைப் பயன் - வர்ண தர்ம விதிப்படி நடப்பது - நடக்கவேண்டும் - தலையெழுத்தை மாற்ற எவரால்தான் முடியும் என்ற தலைவிதி தத்துவத்தை (Fatalism) மக்களின் மூளையில் சாயம் ஏற்றியதால்தான் இவ்வளவு வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமையும் இருந்தும், ‘ஆண்டவன் விட்ட வழி’ - நம் தலையெழுத்து என்று நம்பியே எழுச்சி பெறாமல் - அந்தப் போதையில் எழுந்திருக்க இயலாது அப்படியே வீழ்ந்தே கிடக்கும் நிலை!

‘‘எவன் தலையில் எழுதினான்?’’ என்ற குரல்!

அதனால்தான் திராவிடர் இயக்கமும் - குறிப்பாக சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும், அவர் வழிவந்து, அந்தத் தலையெழுத்தை மாற்றிக் காட்டிய அறிஞர் அண்ணா, கலைஞர் -  பெரியார் சிந்தனை வயப்பட்ட கல்வி வள்ளல் காமராசரும், ‘‘எவன் தலையில் எழுதினான்?’’ என்று கேட்டனர்!

அந்தக் கேள்விதான் கல்வியில், சமூகநீதியில், வேலைவாய்ப்பில், மருத்துவத்தில், பொறி யியலில், பெண்ணுரிமைச் சட்டங்களில், மதச் சார்பின்மையில் பெருத்த மாறுதலை ஆட்சிமூலம் செய்ய  முழுமுதற் காரணமாகியது!

அவ்வாட்சி மீண்டும் திரும்பினால்தான், சமதர்மம், சமூகநீதி, சம வாய்ப்பு,  சமத்துவம் எல்லாம் ஏற்படும்;  இன்றைய பறிக்கப்படும் அவ்வுரிமைகள் மீட்டெடுக்கப்பட மீண்டும் தி.மு.. தலைமையில் ஆட்சி அமையவேண்டும்.

‘‘திராவிடம் வெல்லும்,

உலகம் அதைச் சொல்லும்''

தி.மு..வில் அதன் ஒப்பற்ற தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கடும் உழைப்பும், சீரிய வியூகமும், கூட்டணிக் கட்சிகளை அர வணைக்கும் எடுத்துக்காட்டான செயற்பாடும் ‘‘திராவிடம் வெல்லும், உலகம் அதைச் சொல்லும்'' என்பதை வரலாற்றில் நிலைநாட்டும் ஆண்டாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - 2021 ஆம் ஆண்டு அமையட்டும்!

களத்திற்கு வருவோம் என்று புஜபலம் காட்டித் தோள் தட்டியவர்களும் வரு முன் னேயே காணாமற்போன கதை தமிழ்நாட்டின் வரலாற்றின் முதல் திருப்பம் என்பதை எண்ணி, பண பலம், அதிகார பலம், பத்திரிகை பலம், சினிமா பலம் எல்லாற்றையும் முறியடிக்க சூளுரை மேற்கொள்ளுவோம்!

திராவிடர் தம் புத்தாண்டு உறுதியாக இது அமையவேண்டும்!

அனைவருக்கும் திருப்பம் ஏற்படுத்தும் திராவிடப் புத்தாண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்!

திராவிடம் வெல்லும்!

 கி.வீரமணி

 தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

1.1.2021              


No comments:

Post a Comment